காலம் மறப்பினும் தமிழ் மறக்குமோ!

0 comment

காலத்திற்கு ஒரு விவஸ்தை என்பதில்லை. சமயத்தில் சிலரை விட்டுவிடலாம். ஆனால் தமிழ் தனக்குப் பங்களித்தவர்களை மறப்பதில்லை. யாரோ, எப்பொழுதோ அந்தத் தமிழைக் கண்டு மயங்கி அன்னாரைக் குறித்து நினைக்கும் பொழுது காலமும் தன் அவசர அடிக்கோலத்தைக் கொஞ்சம் நிறுத்தி நின்று கவனிக்கிறது. இல்லாவிட்டால் திரு பக்ஷிராஜன் என்பவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்றோ அவர் பாடி எந்த மலரிலோ வந்து காலத்தில் உறங்கிய பாட்டுகள் கண்ணில் பட்டதும் கருத்தில் மின்னுகிறது.

உயிர் விளங்கும் பிராணியை நாம் பார்த்தால் அங்கு உடல் இருக்கிறது. அந்த உடலுக்கு உறுப்புகள் இருக்கின்றன. உடல் இயங்குவதை, உடலுக்கு வேண்டும் என்பதைச் சாதித்துத் தருவதற்கு உறுப்புகள் வேலை செய்கின்றன. தனித்தனி உறுப்புகளாக இருந்தால் அதில் பொருள் இல்லை. அனைத்து உறுப்புகளும் ஒருங்கிணைந்து உடலாக நிற்கும் போது அங்கு உயிர் விளக்கத்திற்கான சரீரம் என்பது சாத்தியம் ஆகிறது. இந்த உயிர்ப்பியல் உண்மையை பண்டைய காலத்தில் வடமொழியிலும், தமிழிலும் உடலும் உடல் சார் உறுப்புகளுக்குமான தொடர்பு, அங்க அங்கி பாவம் என்று கவிதைத் திறனாய்வியலில் துணைக் கருத்தாகக் கையாண்டுள்ளார்கள். அதாவது முக்கியமான ஒரு டாக்யுமண்ட் எழுதுகிறீர்கள். எந்தத் துறையிலாவது இருக்கட்டும். அதற்கு மிக அத்யாவசியமான பொருள்களை உள்ளடக்கிய ஒரு சப்ளிமன்டும் கூடவே சேர்த்து வைக்கிறீர்கள். அந்த அனுபந்தத்திற்கான வேலையே மூலப் பனுவலை நன்கு விளக்கும் கருவியாய் இருப்பதுதானே.? கிட்டத்தட்ட இதைப் போன்ற பரஸ்பர பனுவல் சம்பந்தங்களை ஒரு வகையாக அன்றைய காவிய சாத்திரக்காரர்கள் அங்காங்கி பாவம் என்றார்கள். எதற்கு இந்த பீடிகை என்கிறீர்களா?

நம்மாழ்வார் ஆழ்வார்களில் பிரதானமானவர். திருமால் என்னும் உயிரான கருத்தின் விளக்கத்திற்கு வாய்த்த உடலாக இருப்பவர். அவருடைய நான்கு பிரபந்தங்கள் திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாசிரியம், திருவாய்மொழி என்பன. இந்த நான்கும் அவர் மூலம் வெளிப்பட்ட நான்கு திராவிட வேதங்கள், தமிழ் மறைகள் என்பது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் கூறும் கருத்து. இதில் முக்கியமானது திருவாய்மொழி ஆயிரம் பாட்டுகள். இவருடைய திவ்ய பிரபந்தங்கள் உடல் என்றால் அந்த உடலுக்கு உறுப்புகளாக நின்று பொருள் விளங்க உதவும் நூல்கள் திருமங்கையாழ்வார் என்னும் கலியன் அவர்களது ஆறு நூல்களாகும். பெரிய திருமொழி, திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் என்பன. மற்றைய ஆழ்வார்களின் நூல்களும் இவ்வாறு உறுப்புகள் என்ற நிலையில் கொள்ளப்படும்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியை நாம் எடுத்துக்கொண்டால், அதில் ஆயிரம் பாட்டுகளும் பத்து பத்துகளாகவும், ஒவ்வொரு பத்துக்கும் பத்து திருவாய்மொழிகளாகவும், ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் பத்து பாசுரங்களாகவும் பகுக்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமின்றி ஒவ்வொரு பாசுரமும் முன்பின் பாசுரத்திற்கு அந்தாதி என்னும் தொடையில் அமைந்துள்ளது. முதல் பாசுரமும் கடைசி, அதாவது பத்தாம்பத்து பத்தாம் திருவாய்மொழியின் பத்தாவது பாசுரமும் அந்தாதியாக அமைந்துள்ளன. அதாவது, உயர்வற என்று ஆரம்பித்து திருவாய்மொழி உயர்வே என்று முடிகிறது.

இதற்கு ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் அதன் சாரமான பொருளை உள்பொதிந்து ஒவ்வொரு வெண்பாவாக அப்படி நூறு வெண்பாக்கள் பாடியிருக்கிறார் பெரிய ஜீயர் என்று வைணவ உலகம் குலவும் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள். திருவாய்மொழி எப்படி அமைந்திருக்கிறது? அந்தாதியாகவன்றோ? அப்படியே நூறு வெண்பாக்களும் அந்தாதித் தொடையில் அமையுமாறு பாடியுள்ளார் மாமுனிகள். முதல் வெண்பாவின் முதல் சொல் உயர்வில் ஆரம்பித்து நூறாவது வெண்பாவின் ஈற்றுச் சொல் உயர்வு என்று முடியவேண்டும். ஒவ்வொரு வெண்பாவிலும் மாறன் பெயர் வரவேண்டும். மையக்கருத்து இடம் பெற வேண்டும். அந்தத் திருவாய்மொழிக்கான முக்கியமான விளக்கக் குறிப்பும் உள்ளே பெய்திருக்க வேண்டும். ஈடு போன்ற பெரும் விளக்க உரைகளோடு உயிரான கருத்தில் நன்கு பொருந்துவதாய் அமைந்திருக்க வேண்டும். இத்தனை அம்சங்களும் பூர்ணமாய் நிறைய திருவாய்மொழி நூற்றந்தாதியை இயற்றியுள்ளார் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள். இதைச் சுருக்கமாக வெண்பாவில் ஈடு என்று சொல்லிவிடலாம். அவ்வண்ணம் நன்கு சிறப்புற அமைந்த துணை நூல் இதுவாகும். இந்தத் திருவாய்மொழி நூற்றந்தாதிக்கு பிள்ளைலோகம் ஜீயர் என்பவருடைய அருமையான வியாக்கியானம் இருக்கிறது. வெண்பாக்களும், வியாக்கியானமும் சேர்ந்து பெருங்கடலுக்குள் சிறு கடல் என்னும் ஆழமும் விரிவும் கொண்டு இலகுபவை.

பல நூற்றாண்டுகளாக வைணவத்தில் வரியடைவே கற்கப்படும் பனுவல் பயிற்சியான காலக்ஷேபம் என்னும் முறையில் கற்கப்படும் நூலாகவும் இருந்து வருவது திருவாய்மொழி நூற்றந்தாதி. வழிவழியாகப் பல வித்வான்களும், பக்தர்களும் திருவாய்மொழிக்கு இப்படி ஓர் அற்புதமான வெண்பாவில் அந்தாதி அமைந்தது போல திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிக்கும் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்ததுண்டு.

அவ்வண்ணம் ஒரு முறை ஸ்ரீராமானுஜனில் ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் அவ்வாறு பெரிய திருமொழிக்கு ஒரு நூற்றந்தாதி அமையாது போனதைக் குறித்து வருத்தம் தெரிவித்ததைப் படித்தார் ஒரு தமிழறியும் பெருமாள். அவர்தான் திருக்குருகூர்வரி பாடிய திரு கே பக்ஷிராஜன், வழக்குரைஞர் அவர்கள். வைணவத்தில் ஆழங்கால் பட்டவர். அருமையான தமிழ்ப் புலமையும் இருக்கிறது. கூடவே திருமாலின் தண்ணருள், அடியாரின் ஆசி. கேட்க வேண்டுமா? அற்புதமாகப் பாடியிருக்கிறார் திருமொழி நூற்றந்தாதி என்று. 16-11-1969ல் பரகாலன் பைந்தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. மொத்தம் இருபது பக்கங்கள். பெற்றவர்கள் எல்லாம் பெருநிதியம் பெற்றார்கள்தாம்.!

திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியை ஆயிரம் பாட்டுகளாகப் பாடியிருந்தாலும் அவற்றை அந்தாதியாக அமைத்துப் பாடவில்லை. ஆனால் பத்து பாசுரங்கள் ஒரு திருமொழி, பத்து திருமொழிகள் ஒரு பத்து அது போல் பத்து பத்துகள் என்று அமைப்புகள். ஒவ்வொரு திருமொழிக்கும் ஒரு வெண்பா என்று திரு பக்ஷிராஜன் ஸ்வாமி அந்தாதியாகவே பாடியிருக்கிறார். மாறன் செந்தமிழ் மாநாடு போன்று பரகாலன் பைந்தமிழ் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து அதற்கு திரு பக்ஷிராஜன் அவர்களை ஏதாவது எழுத்துப்பங்கு அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். திரு N S கிருஷ்ணன் என்பாரின் தூண்டுதல் இவருக்கு உற்சாகத்தை மூட்டியிருக்கிறது.

முன்னுரையில் எழுதுகிறார் –

“திருமங்கை மன்னன் கிருபையையும், ஸ்ரீமணவாள மாமுனி திருவருளையும் அவலம்பித்து, ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அவதாரிகைகளையும் ஒவ்வொரு திருமொழிப் பருப்பொருளையும் பொதுவாக நோக்கி அப்பொருளின் சாயையிலே வெண்பாவாக எழுத முற்பட்டேன்”

கடவுள் வாழ்த்திலேயே நல்ல நறுந்தமிழுக்கு அச்சாரம் போட்டுவிடுகிறார் திரு பக்ஷியார்.

மாலை வழிமறித்தே மந்திரங்கொள் வாட்கலியன்

கோலத் திருமொழியால் கூறுபொருள் – ஞாலத்தார்க்

கந்தாதி யில்சுருக்கி ஆக்க முயல்பணியைச்

சிந்தாதே காத்திடுமத் தேவு.

________________

மாறன் எனுமங்கி மற்றை யவன் அங்கமாக்

கூறும் குறையலூர்க் கொற்றவனாம் – வீறுடைய

நீலன் இருவரது நீள்பதங்கள் சூடுகின்றேன்

கோல வணியாகக் கொண்டு.

பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரின் முதல் திருமொழி ஆரம்பிக்கிறது.

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்

– நாராயணா என்னும் நாமம்

திருமொழி அந்தாதி பேசுகிறது – 

வாடி வருந்துமுயிர் வாழ்வு பெறற் கேற்றவழி

ஏடுடைய எட்டெழுத்தே ஏத்துமென – நீடுலகத்

தின்பிலே நைந்த கலியன் இசைமொழிகள்

அன்புடனே தாமொழிந்த வால்.

அடுத்த திருமொழி ஆரம்பம்

வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட
வரி சிலை வளைவித்து அன்று

ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற
இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை
அகடு உற முகடு ஏறி
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்
பிரிதி சென்று அடை நெஞ்சே

திருமொழி நூற்றந்தாதி பேசுகிறது – 

வாலி மதனழித்த வல்வில்லி நம்வாழ்வு

கோலிப் பிரிதியிலே கூடினான் – கோல நெஞ்சே

கிட்டி வணங்கென்றே கலியன் கிளத்தினான்

முட்டி வரு பேரார்வ முற்று.

அடுத்த திருமொழி தொடக்கம்

முற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையாமுன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே

திருமொழி நூற்றந்தாதி – 

முற்ற மூத்து மொய்குழலார் முன்னின் றிகழாமுன்

பற்றிடுமின் தொண்டீர் பதரியுறை – நற்றவன் தன்

தாளையவன் ஆயிரம் பேர் சாற்றி எனும் கலியன்

மீளவுரை தந்தே நமக்கு

இவ்வாறு போகிறது திருமொழி நூற்றந்தாதி. 

ஏனமாய் மண்ணேந்தும் எம்மான் வதரியெனும்

தேனமரும் ஆச்சிரமம் சேர்ந்துள்ளான் – ஊனில்

நலிநெஞ்சே நாளும் தொழுதெழுகென் றேசொல்

கலியனுரை வேதக் கலை.

__________________

கலையொடுதீ ஏந்தியவன் சாபம் கழல

அலைகுருதி அன்போ டளித்தான் – நிலவிடுசீர்ச்

சாளக் கிராமமே சாருமெனும் நீலனெனும்

வாளுழவன் சொல்வினைக்கு வாள்.

__________________

வாணிலவு மாதர்நகை தப்பி நிமிவனத்தே

சேணுயர்வான் சேவடியே சேர்தியெனப் – பேணுநெஞ்சை

மங்கையர்கோன் சொன்ன மறைபேணின் நம்மைவினை

அங்கணுகா மாநிலத்தங் கண்.

__________________

அங்க ணரியாய் அவுணனுடல் கீண்டானைச்

சிங்கவேள் குன்றதனில் சேவித்தே – பொங்குமுளத்

தொள்வாள் கலியன் உரைதேர்ந்து நஞ்சென்னி

கொள்வமவன் பாதமலர்க் கொங்கு

__________________

கொங்கலரும் சோலைக் குளிர்வேங் கடமலையே

இங்கடைவாய் நெஞ்சென் றிதமுரைத்து – மங்கையர்கோன்

செஞ்சொலால் சொன்ன திருமொழியே நந்தமக்குத்

தஞ்சமவன் நங்களுக்குத் தாய்.

__________________

தாய்தந்தை மக்களொடு தாரமெனும் நோய்தவிர்ந்தேன்

வேயுயரும் வேங்கடமே மேவினேன் – மாயா

புவியிலெனை ஆட்கொள் எனப்புகன்ற நீலன்

கவிநமக்கு வாழ்வருளும் கண்

__________________

கண்ணார் கடலை அடைத்தானை வேங்கடத்தே

நண்ணி இடர்களைந்து நல்கெனவே – பண்ணால்

வணங்கியே வேண்டிடுமொள் வாட்கலியன் சொல்லால்

வணங்குவர் ஏறிடுவர் வான்.

இப்படி அமுதக் கலை நூறு என்றால் இவரை என் சொல்ல! இது நூலாக வந்துள்ளதா தெரியவில்லை. இவருடைய அருந்தமிழ் ஆக்கங்கள் அனைத்தும் நூலாகத் தொகுக்கப்பட்டால் தமிழுக்கு அது பெரிய வரவு அன்றோ! நூல் முடிந்தாலும் நுவலும் தமிழ் ஆல்விட்டுத் தழைக்கும் தகவுடையார் திரு பக்ஷிராஜன் என்பதில் என்ன சந்தேகம்!

நீங்கள் சிலப்பதிகாரத்துக் கானல் வரிப் பாட்டுகளைப் படித்திருக்கிறீர்கள்தானே! அது போலவே ஆற்றுவரி, சார்த்துவரி, முகமில்வரி, கானல் வரி, நிலைவரி, முரிவரி, திணைநிலைவரி, மயங்குதிணைநிலைவரி என்று அப்ப்டியே இளங்கோ அடிகள் மீண்டும் யாத்தது போன்று நம்மாழ்வாரின் பேரில் பாடியிருக்கிறார். நூல் – திருக்குருகூர்வரி . பாடியவர் – கி பக்ஷிராஜன், வழக்குரைஞர், திருநெல்வேலிக் கூடல்

தொடக்கமே பாருங்கள் –

கண்ணன் கருணைத் தனைமொண்டு ககன மணிந்த நீறாடி

வண்ணப் பொதிகை மேற்சொரிய நடந்தாய் வாழி தண்பொருநை !

வண்ணப் பொதிகை மேற்சொரிய நடந்த வெல்லாம் தென்பாண்டி

அண்ணல் நெடியோன் அருள்பெறவென் றறிந்தேன் வாழி தண்பொருநை!

_____________________

நிலைநின் றிலகு கோலமென நெளிந்து நெளிந்து பாய்ந்தோடி

மலைநின் றிழிந்து கீழ்போந்து நட்ந்தாய் வாழி தண்பொருநை!

மலைநின் றிழிந்து கீழ்போந்து நட்ந்த வெல்லாம் மால்நின்ற

தலமா குருகூர் வலஞ்செயவென் றறிந்தேன் வாழி தண்பொருநை!

நிலைவரி – 

கருணை அலையெறியக் கரையிரண்டும் ஓடும்

அருளின் இணைநோக்கோ அம்புயமோ காணீர் !

அம்புயமோ காணீர்! அறிவுடையார் சீறூர்க்கே

இம்பர் உயிர்க்கெல்லாம் இறைவந்திங் கெய்தியதே !

முரிவரி – 

பொருநையின் கரையிடமே பொழிலிடை மகிழ்நிழலே

திருவுறை அகலமதே திருமணி யிமையொளியே

பருமணி வடவரையே பணையிணை யிருகரமே

இருவிழி யருளொளியே எனையிடர் செய்தவையே

திணை நிலைவரி – 

தன்னுடைய ஆழியும் தனிப்புள்ளும் சங்கமும்

என்னை யருளாதே விட்டாரோ விட்டகல்க!

மன்னும் அவர்பொழிலில் வாழும் அடியீர்காள்

என்னை மறந்தாரை யான்மறக்க மாட்டேனால்!

___________________

காரார் நிறத்தானைக் கைக்கொண்டே வேகப்புள்

ஊரும் சுவடழித்தே ஊர்வாய் பிறப்போதம் !

ஊரும் சுவடழித்தே ஊர்வாய் மற்றெம் மோடீங்

கூரா தொழிந்திலையால் வாழி பிறப்போதம் !

மயங்கு திணை நிலைவரி – 

மூரி முல்லை நகைகாட்டி முதிர்செம் பவள வாய்திறந்து

பார்!எத் தனை என் வடிவழகென் றெனைப்பே யாக்கும் பரஞ்சோதீ!

மாரிச் சோரி என்கண்ணீர் மாழ்கிக் குழறும் வாய்மொழிகண்

டாரிவ் வண்ணம் செய்தாரென் றயலார் வினவில் என்செய்கோ?

வேறு

மாழ்கும் மாய மயக்கில் வந்தென்

தாழ்வை யழித்துத் தணந்தார் ஒருவர்

தாழ்வை யழித்துத் தணந்தார் அவர்நம்

ஆழும் அன்பை அறியார் அல்லர்

முகமில்வரி — 

சேரல் குருகே! சேரலெம் சிற்றூர்!

சேரல் குருகே ! செரலெம் சிற்றூர் !

ஊரும்புள் ளேகொடியாய் உயர்த்தார்க்கென் நோய்கூறாய்,

சேரல் குருகே ! சேரலெம் சிற்றூர்!

எல்லாம் ஒவ்வொரு மாதிரிதான் காட்டுகிறேன் இங்கு. ஏகப்பட்ட பாடல்கள். கடைசியில் கானல்வரியில் போன்றே கட்டுரை என்னும் பகுதி பின்னி எடுத்துவிட்டார் பக்ஷியார் !

வரிப்பாடல்களே பொதுவாக வீணைக்கு அமைத்துப் பாடுவது. இந்தப் பாடல்களை வீணையில் அமைத்துப் பாடினால் அப்படியே வீடு விள்ளும் விரல் சொடுக்கில் சொகுசாகப் போய் அமர்ந்து கொள்ளும் பாக்கள் இவை.

இன்று எத்தனை பேர் இதனை அறிவார்கள்? ஏதோ மலரில் கொண்டு போய்ப் போட்டுவிட்டு பக்ஷி பறந்துவிட்டதோ தெரியாது. ஆனால் என் கண்ணில் படவேண்டும் என்று உய்த்த தமிழ்பின் சென்ற பெருமாள்தான் எவ்வளவு கள்ளவிழ்ப் புன்னகையன்!