ஹாத்திகும்பா: காரவேலன் கல்வெட்டு

0 comment

சென்ற ஆண்டு கலிங்கப் பயணத்தில் உதயகிரி குகைகளைப் பார்த்தது மறக்கமுடியாத சம்பவம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரவேலாவின் கல்வெட்டு உண்மையில் அங்கே தான் இருக்கிறது என்று முதலில் யாருக்கும் தெரியவில்லை. முன்னால் வைத்திருந்த அறிவிப்பையும் படித்துக் கொள்ளவில்லை. எங்களை அங்கே அழைத்துச் சென்ற தென்னிந்திய வரலாற்றில் ஆழங்கால்பட்ட நண்பர் முன்பே அங்கு சிலமுறை போயிருந்தும் அதை அறிந்திருக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .உதயகிரி என்ற பெயரில் இந்தியாவில் பல இடங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் உள்ளது.

குழுவை விட்டு நான் தனியாக அங்கிருந்த குகைகளைப் பார்த்தபடி எங்கெங்கோ சுற்றி வந்தேன். ஒரு பிரதானமான குகையின் புறத்தில் ஒரு சிறு அறிவிப்பு ஹாத்திகும்பா என்றிருந்தது. காரவேலன் கல்வெட்டு உள்ள இடத்தின் பெயராயிற்றே என்று குடைவரையில் நுழைந்து மூலை முடுக்கெல்லாம் தேடினேன். சமணத் துறவிகளின் பெயர்களோ என்னவோ பிராமியில் பொறிக்கப்பட்டிருந்தன. மனம் தளர்ந்து வெளியே வந்து உள் முகப்பை நிமிர்ந்து பார்த்தேன். கண்டேன் காரவேலன் கல்வெட்டை!

அதைப் பற்றி பலதும் படித்துள்ளேன். ஒரு முறையாவது அதைப் பார்க்க வேண்டும் என்றும் உறுதி கொண்டிருந்தேன். ஹாத்திகும்பா (யானைக்குகை) என்பது ஒரு இடத்தின் பெயர் என்றும் நினைத்திருந்தேன். யதேச்சையாக அதைக் கண்டுகொண்டதும் பரவசம் தாங்கவில்லை. படம் எடுக்கும் வசதியும் என்னிடம் இல்லை. கண்டபடி எடுத்துத்தள்ளிக் கொண்டிருந்த குழுவினரைத் தேடினேன். அவர்கள் எங்கோ குன்றுக்குள் மரநிழலில் படுத்துவிட்டிருந்தனர். நான் அவர்களுக்காக வாசலில் அரைமணிநேரம் காத்துச் சோர்ந்து வெளிவந்து எதிரிலிருந்த கண்டகிரி குகைகளையும் ஏறிப் பார்த்துவிட்டு மேலிருந்த திகம்பர சமண மடாலயத்தையும் நாகார்ஜூனரையும் சுற்றிப் பார்த்துவிட்டுக் கீழிறங்கி மறுபடியும் அரைமணிநேரம் காத்திருந்தேன்.

என்னைக் காணோம் என்று கட்டாக் போய் மகாநதியில் குளிக்கப் போய்விட்டார்களோ என்றும் பெயர் தெரியாத புவனேஸ்வர லாட்ஜுக்குத் தனியாகத் திரும்பிப் போய் காத்திருக்க வேண்டுமே என்றும் கவலைப்பட்டு மணிக்கணக்கில் காத்திருந்த போது மெதுவாகத் தூங்கி எழுந்து வெளியே வந்தார்கள். கல்வெட்டுப் பற்றிச் சொன்னதும் வியந்து மறுபடியும் உள்ளே மீண்டும் நுழைந்தோம். வழக்கம்போல் பின்பு போட்டோக்களை எடுத்துத்தள்ளினார்கள். திரும்பும் வழியிலேயே இணையத்தில் தேடி எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டோம்.

அங்கிருந்து 6 கிலோமீட்டரில் தான் தௌலி இருந்தது. ஆனால் அங்கு செல்ல தனியே ஒரு நாள் வேண்டும் என்றும், இன்னொரு முறை தனியே அதற்காகவே வருவோம் என்றும் சமாளித்து விட்டார்கள். பின்புதான் அசோகர் கல்வெட்டுகள் 60க்குமேல் உள்ள இடம் அது என்று படித்துவிட்டு அதைப் பார்க்காமல் வந்ததற்காக சோகித்தேன். சமீபத்தில் விகடன் வெளியீடாக மகுடேசுவரன் இணையத்தில் தொடர்ந்து எழுதிவந்த ‘கலிங்கம் கண்டோம்’ என்ற நூல் வந்துள்ளது. ஒடிசாவைச் சுற்றிப்பார்த்தவை பற்றி அதில் பல தகவல்கள் உள்ளன. சுவாரஸ்யமான நூல். படித்துப் பார்க்க வேண்டிய புத்தகம்.

சிந்துசமவெளி நாகரிகம் பற்றி இன்று பேசிவரும் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் (ஒடிசாவில் ஆட்சிப் பணியில் இருந்தவர் என்ற முறையிலும்) இந்த திரமிள சங்காத்தம் பற்றியும் கூறி வருவதை சென்ற மாத கோவை, இந்த வார திருப்பூர் நிகழ்ச்சிகளில் கேட்டேன்.

தமிழ் விக்கிபீடியாவில் உள்ள ஹாத்திகும்பா கல்வெட்டு பற்றிய தகவல் கட்டுரை விரிவாகவும் ஆய்வுபூர்வமாகவும் இருக்கிறது. அநேகமாக இராம.கி எழுதியிருப்பார். (முன்பு வந்த தமிழினி அச்சு இதழில் அவர் கட்டுரைகளைப் படித்திருக்கலாம், அவரது ‘சிலம்பின் காலம்’ என்ற தமிழினி பதிப்பக நூலும் வந்திருக்கிறது.) அதிலிருந்து எடுக்கப்பட்டு விரிவாக்கப்பட்டவை தாம் இந்த விபரங்கள் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

————-

ஹாத்திகும்பா கல்வெட்டு (Hathigumpha Inscription / ‘யானைக்குகை’ கல்வெட்டு), கலிங்கப் பேரரசன் காரவேலன் என்பவனால் கிமு இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட குகைக் கல்வெட்டு, (யானைக்கு அத்தி என்றும் தமிழில் பெயருண்டு). பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட 17 வரிகள் கொண்ட ஹாத்திகும்பா கல்வெட்டு ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்திற்கு மேற்கில் உள்ள உதயகிரி-கண்டகிரி இரட்டை மலைகளில் உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு பாறையில் குடைந்த சமணக் குடைவரைக் கோவிலில் உள்ளது. இது ஆறு மைல்கள் தள்ளி, தௌலியில் உள்ள அசோக மாமன்னரின் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கல்வெட்டின் காலம் மௌரிய மன்னர்களின் ஆட்சி தொடங்கிய 165 ஆம் ஆண்டு என்றும், காரவேல மன்னரின் 13ம் ஆட்சியாண்டு என்றும் கணிப்பதால் சந்திரகுப்த மௌரிய மன்னர் முடி சூட்டிக் கொண்ட ஆண்டாகக் கருதப்படும் கி.மு. 321 ஐக் கணக்கில் எடுத்துக் கொண்டு, காரவேலா அரியணை ஏறிய காலத்தைக் கி.மு.170 என்று கணிக்கிறார்கள்.

வேறு எங்கும் இந்த மன்னரைப் பற்றியும் அவரது வரலாறு பற்றியும் ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. பதினேழு வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டின் ஒரு பகுதி குடைவரைக் கோவிலின் முகப்பிலும் எஞ்சியது. அதன் கற்கூரையிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டை 1825ல் கண்டுபிடித்தபோதே பல பகுதிகள் மங்கிச் சிதைந்து போயிருந்ததால் இதைப் படிப்பது கடினமாகி வீணான பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தது. என்றாலும், இது ஒரு நிறைவான வரலாற்று ஆவணம் என்றும், நிகழ்ச்சிகளை மிகைப்படுத்தாமல் நேரடியாகத் தெளிவாகவும், நடந்ததை நடந்தபடியான காலவரிசையிலும் இதில் சொல்லியிருப்பது போல அதன் சமகாலத்தில் இந்தியாவில் வேறு எந்தக் கல்வெட்டிலும் சொல்லியதில்லை (சசிகாந்த்) என்றும் கூறுகிறார்கள்.

இந்தக் கல்வெட்டு பெரும்பாலும் காரவேலர் பட்டத்துக்கு வந்ததிலிருந்து அவரது பேரரசைப் பெருக்கிய வெற்றிகளைப் பட்டியலிடுகிறது. அவர் சமகாலத்தில் மேற்கு இந்தியாவில் பெரும் வலிமை பெற்றிருந்த சாதவாகன அரசன் சதகர்ணியையும் பொருட்படுத்தாமல் கலிங்கத்தின் எல்லையிலிருந்த அவரது நட்பரசர்கள் மீது படையெடுத்ததாகச் சொல்லும் குறிப்பிலிருந்து இந்தக் கல்வெட்டின் வெற்றிப் பட்டியல் தொடங்குகிறது.

”தன் இரண்டாம் ஆட்சியாண்டில், சாதகர்ணியைப் புறக்கணித்து, மேற்கு மாநிலங்களுக்கு வலிமையான குதிரை, யானை, காலாள், தேர்ப்படைகளை அனுப்பி கன்னபெண்ணை (கிருஷ்ணவேணி) ஆற்றை அடைந்ததும் மூசிக நகரத்தைக் கலங்கடித்தார்.”

மேலும் காரவேலன் இந்திய-கிரேக்க யவன மன்னரான டிமெட்ரியஸ் மன்னரைப் பாடலிபுரத்திற்கு 70 கிமீ தென்கிழக்கே இருந்த ராஜகிரியிலிருந்து பின்வாங்க வைத்து மதுரா பகுதிக்கு விரட்டினாராம்:

”பிறகு, எட்டாம் ஆட்சியாண்டில், அவர் ஒரு பெரும்படை கொண்டு கோரதகிரியைச் சூறையாடியதோடு ராஜகிருகத்துக்கும் நெருக்கடி கொடுத்தார். இந்த வீரப்போர் பற்றிக் கேட்டு அதிர்ந்த யவன (கிரேக்க) மன்னன் டிமி(டா),மனம் தளர்ந்த தன்படையைத் தப்ப வைத்துக் கொண்டு மதுரா நகரப்பகுதிக்குப் பின்வாங்கினான்”

சாதகர்ணி (நூற்றுவர் கன்னர்??) என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்தாலும் காரவேலரின் காலத்தோடு ஒட்டி வருவது ஸ்ரீ சாதகர்ணி அல்லது நாயநீகாவின் கணவரான முதலாம் சாதகர்ணி என்று கணிக்கிறார்கள்.

ஹாத்திகும்பா கல்வெட்டு சமணர்களின் புனிதமான ‘ணமோகர மந்திரம்’ என்பதன் ஒரு வடிவில் தொடங்குகிறது: (ணமோ அரிஹாந்தணம் [।।] ணமோ ஸவஸித்தாணம் [।।]) இதுவும், காரவேலர் தம்மை அருகர் வழிபாட்டில் பித்துள்ள இல்லறத்தார் என்று குறிப்பிடுவதும் இவர் சமண சமயத்தைப் பின்பற்றியவர் என்பதற்குச் சான்று.

கல்வெட்டின் வரிவடிவம், சொற்களை வைத்து இதன் மொழி பிராகிருதம் என்றும், மகதியோ அர்த்த மாகதியோ அல்ல என்றும் கிட்டத்தட்ட சமஸ்கிருதத்தின் செம்மை வடிவத்தை நெருங்கி, பேச்சு மொழியல்லாமல் எழுத்து மொழியில், சமய நூல்களின் பாலி மொழி வடிவத்துக்கு மிகவும் அணுக்கமான மொழியில் குஜராத் அல்லது மராத்திய மாநிலங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட ஒரு சமண முனிவரால் இது எழுதப்பட்டிருக்கலாம் என எண்ணப்படுகிறது. வரி வடிவங்களைப் பார்க்கும்போது எழுத்துகளின் வடிவங்களில் சில வேறுபாடுகள் தெரிவதால் மூன்று வெவ்வேறு ஆட்களால் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

 ஹாத்திகும்பா கல்வெட்டு குறிப்பிடுவனற்றில் முக்கியமானவை:

1.சக்ரவர்த்தி தம் முதலாம் ஆட்சியாண்டிலேயே முப்பத்து ஐந்து நூறாயிரம் பணம் செலவழித்துப் புயலினால் சேதமுற்றிருந்த கலிங்க நகரின் கோட்டை, கோபுரங்கள், சுவர்கள், கதவுகள், நகரின் கட்டிடங்களைப் பழுது பார்த்தும், ஏரி, தடாகங்கள், குளங்களின் கரைகளைத் திருத்தியும், நகரத் தோட்டங்களை மீளமைத்தும் மக்கள் மனதைக் குளிரவைத்தார்.

2. தன் இரண்டாம் ஆட்சியாண்டில், சாதகர்ணியைப் புறக்கணித்து, மேற்கு மாநிலங்களுக்கு வலிமையான குதிரை, யானை, காலாள், தேர்ப்படைகளை அனுப்பி கன்னவேணி ஆற்றை அடைந்ததும் மூசிகநகரத்தைக் கலங்கடித்தார்.

3. பிறகு, எட்டாம் ஆட்சியாண்டில், அவர் ஒரு பெரும்படை கொண்டு மகதநாட்டில் ராஜகிருகத்தைத் தாக்கினார். யவன (கிரேக்க) மன்னன் டிமெட்ரியஸ்ஸை மதுரா நகரத்துக்குப் பின்வாங்க வைத்தார்.

4. ஆவா அரசர்கள் கட்டிய பிதும்டா என்ற வணிக நகரத்தைக் கழுதை ஏர் பூட்டி உழுது அழித்தார். பதின்மூன்று நூறு ஆண்டுகளாகத் தம் நாட்டுக்கு இடையூறாக இருந்து வந்த தமிர (தமிழ?) நாட்டுக் கூட்டணியை (தமிர தேக சங்காத்தம்) முறியடித்தார்.

5. பாண்டிய மன்னனிடம் குதிரைகள், யானைகளோடு மாணிக்கங்களையும், முத்து, மணி, ரத்தினங்களையும் திறையாகப் பெற்றார்.

6. முந்தைய கலிங்கப் போர்களில் நந்த மன்னர்கள் கொண்டு சென்ற சமண தீர்த்தங்கரர் சிலையை மீட்டார். மகத மன்னர்கள் கலிங்க அரண்மனையிலிருந்து எடுத்துச் சென்ற மகுடத்தையும், நகைகளையும் மீட்டதோடு அங்க நாடு, மகத நாடுகளில் இருந்த கலிங்கச் சொத்துகளையும் மீட்டார்.

17 வரிகளில் இன்று படிக்கப்படும் காரவேலன் கல்வெட்டின் மொழியாக்கம்

1.அருகர் தாள் போற்றி. சித்தர் தாள் போற்றி. சேதராச மரபின் மாட்சியின் பெருமை, மங்கலகரமான அரசக் குறிகளையும் குணங்களையும் ஒருங்கே பெற்ற, நான்கு திசைகளும் நயக்கும் நற்குணங்களைக் கொண்ட, ஆரிய மாமன்னர், மகாமேகவாகனரின் வழித்தோன்றல், கலிங்காதிபதி, பெரும்புகழ் கொண்ட ஸ்ரீ காரவேலா (எழுதுவித்தது)

2. செவ்வுடலும் பேரெழிலும் பொருந்தியவர், பதினைந்து ஆண்டுகளாக இளைஞர் விளையாட்டுகளில் பயின்று, பின்னர் அரசுப் பேச்சுவார்த்தை, நாணயவியல், கணக்கியல், பொதுச்சட்டவியல் (விவகாரங்கள்), சமயவிதிகள் என்று எல்லாக் கல்வி கேள்விகளிலும் தேர்ச்சி பெற்று, ஒன்பது ஆண்டுகளாகப் பட்டத்து இளவரசராக ஆண்டார். குழந்தைப் பருவத்திலிருந்தே பெருவளத்துடன் திகழ்ந்தவர், வேநா சக்ரவர்த்தியைப் போல் பெரும் வெற்றிகளைக் காணப் பிறந்தவர், இருபத்து நான்கு வயது முதிர்ந்த பின்னர்,

3. பருவம் எய்தியவுடன் கலிங்க அரச மரபின் மூன்றாவது வழித்தோன்றல் பேரரசராக முடி சூடிக்கொண்டார். அவர் முடிசூட்டு மங்கல நீராடியவுடனேயே, தம் முதலாம் ஆட்சியாண்டில், புயலினால் சேதமுற்றிருந்த கோட்டை, கோபுரங்கள், சுவர்கள், கதவுகள், (நகரின்) கட்டிடங்கள் எல்லாவற்றையும் பழுது பார்த்தும், கலிங்க நகரின் கிபிர ரிஷி (பெயரால் அழைக்கப்பட்ட?) ஏரி மற்றும் ஏனைய தடாகங்கள், குளங்களின் கரைகளைத் திருத்தியும், நகரத் தோட்டங்களை மீளமைத்தும்

4. முப்பத்து ஐந்து நூறாயிரம் காசுகள் செலவில் மக்கள் மனதைக் குளிரவைத்தார். தம் இரண்டாம் ஆட்சியாண்டில், சாதகர்ணியைப் பொருட்படுத்தாமல், மேற்கு மாநிலங்களை நோக்கி வலிமையான குதிரை, யானை, காலாள், தேர்ப்படைகளை அனுப்பி கன்னபெண்ணை ஆற்றின் (கரும்பெண்ணை அல்லது கிருஷ்ணவேணி ஆறு) கரையை எட்டி மூசிக (ஆசிக?) நகரத்தைக் கலங்க வைத்தார். தம் மூன்றாம் ஆட்சியாண்டில்

5. கந்தர்வ கானத்தில் தேர்ச்சி பெற்ற மாமன்னர் தலைநகரில் இசைவிழாக்கள், மக்கள்கூடல்களில் தபம், ஆடல், பாடல், கருவியிசை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்வித்தார். அவரது நான்காம் ஆட்சியாண்டில், அவரது கலிங்க முன்னோர்கள் கட்டுவித்த வித்யாதரக் குடில் … இடிபடுவதற்கு முன்னர் …… மாற்றார் மணிமுடிகள் வீழ, தலைக்கவசங்கள்(?) துண்டாக, கொற்றக்குடைகளும்

6. செங்கோல்களும் தளர, அவர்கள் ரத்தினங்களையும் பெருஞ்செல்வத்தையும் (தம்மிடம்) பறிகொடுத்த ரதிக, போஜக மன்னர்களைத் தம் காலடியில் மண்டியிட்டுப் பணியச் செய்தார். தம் ஐந்தாம் ஆட்சியாண்டில், நூற்றிமூன்றாம் ஆண்டில் நந்தராஜன் வெட்டிய தனசூலியக் கால்வாயைத் தலைநகருக்கு நீட்டுவித்தார்…… ராஜசூய வேள்வி மேற்கொண்டு மங்கல நீராடுகையில் [கொடையாக] எல்லா வரிகளையும் திறைகளையும் விலக்கி

7. நகரத்துக்கும் நாட்டுக்கும் பல நூறாயிரம் காசுகளை வாரிக்கொடுத்தார். தம் ஏழாம் ஆட்சியாண்டில், அவருடைய பகழ் பெற்ற மனைவி வஜிரகரவதி புனிதமான தாய்மை அடைந்தார். ….. பிறகு தம் எட்டாம் ஆட்சியாண்டில், அவர் பெரும்படை கொண்டு கோரதகிரியைச் சூறையாடியதோடு

8. ராஜகருஹத்துக்கும் (ராஜகிருஹம்) நெருக்கடி கொடுத்தார். மதுரா நகரில் கலக்கத்தோடு பின் வாங்கியிருந்த தம் படைகளையும் வண்டிகளையும் மீட்க வந்த யவன (கிரேக்க) மன்னன் இந்த வீரச்செயல் பற்றிக் கேட்டு அதிர்ச்சியுற்று [சரணடைந்தான்]. மாமன்னர் பெருங்கிளைகளால்

9. கற்பக மரம் நிறைந்து நிற்பது போல் தம்மிடம் நிறைந்து இருந்த யானைகளையும், தேர்களையும், குதிரைகளையும், தேரோட்டிகளையும், பாகன்களையும் மாளிகைகளுக்கும், வீடுகளுக்கும், சாவடிகளுக்கும் பெருங்கொடையாக வழங்கினார். போரில் பெற்ற வெற்றிக்குப் பரிகாரமாகப் பிராம்மணர்களுக்கு தீ வேள்வியின்போது வரிகளிலிருந்து விலக்களித்தார். அருகருக்கு

10…………….. (அவர்) முப்பத்து எட்டு நூறாயிரம் (காசு) செலவில் ….. பெருவெற்றி(மகாவிஜய) மாளிகை என்று அழைக்கப்படும் அரசமனை ஒன்றைக் கட்டுவித்தார். தம் பத்தாம் ஆட்சியாண்டில் அமைதி, நட்புறவு, அடக்கு (சாம, பேத, தண்டம்) (என்னும் முக்கோட்பாட்டுக்கு இணங்க) என்பதைப் பின்பற்றி பாரதநாடெங்கும் (பாரதவர்ஷம்) தம் பெரும்படையை அனுப்பிப் பல நாடுகளைத் தோற்கடித்து …… தோற்ற நாடுகளிடமிருந்து மணிகளையும் ரத்தினங்களையும் கைப்பற்றினார்.

11………….. ஆவா அரசர்கள் கட்டிய பிதும்டா என்ற வணிக நகரத்தைப் பிடித்துக் கழுதைகள் பூட்டிய ஏர்களைக் கொண்டு உழுது அழித்தார்; பதின்மூன்று நூறு ஆண்டுகளாகத் தம் நாட்டுக்கு (ஜனபதம்) தொல்லையாக இருந்து வந்த தமிழ் அரசுகளின் கூட்டணியை (தமிர தேக சங்காத்தம்) முழுதும் உடைத்தார். பன்னிரண்டாம் ஆண்டில் உத்தரபதத்தின் அரசர்களை ஆயிரக்கணக்கான …… வைத்து அச்சுறுத்தி

12 ……………… மகத அரசமனைக்குள்ளே தம் யானைகளை அனுப்பி மகத மக்களை மிரளவைத்து மகதத்தின் மன்னர் பகசதிமிதத்தைத் தன் கால் பணிய வைத்தார். நந்த அரசரால் எடுத்துச் செல்லப்பட்ட ”கலிங்கத்தின் ஜைனர்” என்ற சிலையையும், அதன் அரியணை, ரத்தினங்களையும் மீட்டு …….. (முன்பு கொள்ளையடித்ததற்குப் பரிகாரமாக) அங்கநாடு, மகதநாடுகளின் செல்வங்களையும் (அரச) குடும்ப நகைகளின் காவலர்களையும் கலிங்கத்துக்குக் கொண்டு வந்து ………………

13. (அவர்) பல அற்புதமாகச் செதுக்கிய உள்ளறைகளைக் கொண்ட கூட கோபுரங்களைக் கட்டுவித்து அவற்றைக் கட்டிய நூறு கொத்தனார்களுக்கென ஒரு குடியிருப்பையும் அமைத்து மேலும் அவர்களுக்கு நிலவரிகளிலிருந்தும் விலக்களித்தார். யானைகளை ஓட்டுவதற்கான வியப்புக்குரிய கொட்டங்களை அவர் …. மற்றும் குதிரைகள், யானைகள், ரத்தினங்கள், மாணிக்கங்கள், பாண்டிய அரசனிடமிருந்து எண்ணற்ற முத்து, மணி, ரத்தினங்களை கலிங்கத்திடம் திறை கட்டுமாறு செய்தார்.

14…………….(அவர்) அடக்கினார். தம் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில், சமண மதம் நன்கு பரப்பப்பட்ட குமரி மலையின் மீது அருகர் கோவிலில், தம் கடுந்தவத்தால் பிறவிச் சுழற்சியைக் கடந்த சமண முனிவர்களை அவர்கள் சமண நெறியையும், வாழ்வையும், நடத்தையையும் பற்றிப் போதித்து வருவதை போற்றிச் சீனப்பட்டாடையையும், வெள்ளைப் போர்வைகளையும், கோவிலை நடத்தும் செலவுக்கான பணத்தையும் பணிவன்போடு வழங்கினார்….தெரிகிறது. பெரும்புகழ் கொண்ட காரவேலர், பூஜைகளில் பெரிதும் ஈடுபாடுள்ள உபாசகர், பிறவி, உடலின் தன்மைகளை முற்றும் உணர்ந்தவர்.

15…………… சிம்மபத அரசி சிந்துலாவின் வேண்டுகோளை ஏற்று சமணத்துறவிகள் உறைவிடத்துக்கு அருகே மலை மேலிருக்கும் அருகர் சிலைக்கருகே பல யோசனைத் தூரத்திலிருந்து ஒப்பற்ற சுரங்கங்களிலிருந்து கொண்டு வந்த கற்களால் சமணப்பள்ளிகளைக் கட்டி….

16 …………..இருபத்து ஐந்து நூறாயிரம் (காசு) செலவில்……….பதலிகத்தில்(?)………(அவர்) வைடூரியத்தில் இழைத்த நான்கு தூண்களை நிறுவினார்; (அவர்) மௌரியர்காலத்தில் கைவிடப்பட்டிருந்த ஆயகலைகள் அறுபத்து நான்கையும் தொகுக்கும் பணியை மீண்டும் துவக்கி உடனடியாக ஏழு நூல்களில் தொகுப்பித்தார். அமைதியின் அரசர், செல்வத்தின் அரசர், துறவிகளின் (பிக்குகளின்) அரசர், அறத்தின் (தருமத்தின்) அரசர், வாழ்த்துகளைப் பார்த்தவர், கேட்டவர், உணர்ந்தவர்-

17 ……. வியத்தகு நற்பண்புகளில் முழுமை பெற்றவர், ஒவ்வொரு மக்கட்தொகுதியையும் மதிப்பவர், அனைத்து கோவில்களையும் சீரமைப்பவர், தடுத்தற்கரிய தேரையும் படையையும் கொண்டவர், தமது பேரரசை அதன் தலைவரே (தானே) பேணிக்காப்பவர், அரசமுனிவர் வசுவின் குடும்ப வழி வந்தவர், மிகப்பெரும் வெற்றியாளர், வேந்தர், சிறந்த புகழ்பெற்ற காரவேலர்.

தமிர தேஹ சங்காத்தம் அல்லது தமிழ் மூவேந்தர் கூட்டணி பற்றிய குறிப்பிலும் இந்தக் கூட்டணி 113 ஆண்டுகள் நீடித்ததா, 1300 ஆண்டுகள் நீடித்ததா அல்லது மகாவீரர் ஆண்டுக்கணக்கில் 113ம் ஆண்டு தோன்றிய கூட்டணி என்று கொள்வதா என்ற கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. தமிழ் மூவேந்தர் கூட்டணிக் காலத்தைப் பற்றிக் குறிப்பிடும் ”தேரஸவஸ ஸத” என்பதை த்ரயோதஸ வர்ஷ ஸதம் என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்று யூகிக்கிறார்கள். த்ரயோதஸ என்பதைப் பதின்மூன்று என்று கொண்டால், த்ரயோதஸ வர்ஷ ஸதம் என்பதைப் பதின்மூன்று நூறு வருடங்கள் அல்லது 1300 ஆண்டுகள் என்று கொள்ளலாம். அவ்வளவு பெருங்காலத்துக்கு ஒரு கூட்டணி நீடித்திருக்க முடியுமா என்று ஐயங்கொள்ளும் ஆய்வாளர்கள் இதை நூற்றுப் பதின்மூன்று அல்லது 113 ஆண்டுகள் நீடித்த கூட்டணியாகக் கொள்கிறார்கள். ஆனால், சசிகாந்த் இதையும் மகாவீரர் ஆண்டுக்கணக்கில் 113ம் ஆண்டு என்று கொள்கிறார். அதாவது தமிழ் மூவேந்தர் கூட்டணி கி.மு. 414ல் தோன்றியது என்று அவர் கருதுகிறார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று கருதும் சசிகாந்த், மகாபத்ம நந்த மன்னர் பதவியேற்ற கி.மு. 424லிலேயே கலிங்கத்தின் மீது படையெடுத்துக் கால்வாயைக் கட்டியிருக்க வேண்டும் என்றும் கல்வெட்டு மேலும் குறிப்பிட்டுள்ளது போலக் கலிங்கத்திலிருந்து ஜினர் சிலையையும் பல பொருள்களையும் செல்வங்களையும் கவர்ந்து சென்றிருக்க வேண்டும் என்றும் இவற்றைத் தொடர்ந்து தமிழ் மன்னர்கள் எதிர்பாராத சமயத்தில் தமிழகத்தையும் தாக்கியிருக்க வேண்டும் என்று கொள்கிறார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இது போன்ற வடபுலத்துத் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காக்கத் தமிழ் மூவேந்தர்கள் ஓர் உடன்பாட்டைக் கி.மு. 414ல் ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறார். இந்தக் கூட்டணியின் வலிமையால்தான் நந்தர்களின் மகதப் பேரரசு மற்றும் மௌரியப் பேரரசின் தாக்குதல்களைத் தமிழகத்தால் சமாளிக்க முடிந்திருக்கும் என்கிறார் சசிகாந்து. நந்தர்களைப் பற்றியும் ”புதிதாக வந்த” மௌரியர்களைப் பற்றியும் உள்ள குறிப்புகள் பண்டைத் தமிழ்ச் சங்க நூல்களில் இருப்பதை இவர் இந்தக் கோட்பாட்டுக்குச் சான்றாகக் கொள்கிறார்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் முக்கியக் குறிப்புகள் :

ஐரா என்ற சொல் ஐலா என்ற சொல்லைக் குறிப்பது போலவே த்ரமிர அல்லது தமிர என்ற சொல்லையும் தமில என்று கொள்ள வேண்டும். த்ரவிட, த்ரமில என்ற சொற்களின் மூலமும் தமிழ் என்ற சொல்தான் என்று முன்பே ஆய்வாளர்கள் குறித்திருக்கிறார்கள்.

கல்வெட்டின் தொடக்கத்தில் ஒன்றின் மீது ஒன்றாய் இரண்டு குறியீடுகள் உள்ளன. மகுடத்தைப் போலிருக்கும் முதல் குறியீடு வத்தமங்களக் குறியீடு என்றும் இரண்டாவது குறியீடு ஸ்வஸ்திகா என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். கல்வெட்டின் முடிவில் உள்ள குறியீடு ஒரு சதுரக்கட்டம் அல்லது வேலிக்குள் உள்ள பூசைமரம் போல் உள்ளது.

சொற்களுக்கு இடையே இடைவெளி விட்டுப் பொறித்திருக்கிறார்கள். முற்றுப்புள்ளி இருக்க வேண்டிய இடத்தில் இடைவெளி கூடுதலாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாத் தனிப்பெயர்களுக்கு முன்பும் இடைவெளி இருக்கிறது.

கூடுமானவரைக்கும் கூட்டெழுத்துக்களை மிகவும் எச்சரிக்கையுடன் தவிர்த்து எழுதியிருக்கிறார்கள். தன் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் சமண முனிவர்களைப் போற்றிச் சீனப் பட்டாடையும், வெள்ளைப் போர்வையையும் கொடுத்ததாகக் கூறுவதால் அந்த முனிவர்கள் ஸ்வேதாம்பர (வெள்ளாடை) சமணர்கள் என்று தெரிகிறது. (இதைச் சசிகாந்த் மறுக்கிறார்)

ரூபா என்ற சொல்லை நாணயம் அல்லது பணம் என்ற பொருளில் இன்றைக்கும் வழக்கில் இருக்கும் ரூபாய் என்பது போலவே புழங்கியிருக்கிறார்கள். புத்தகோசரும், சாணக்கியரும்கூட ரூபா என்ற சொல்லை இதே பொருளில் புழங்கியிருக்கிறார்கள்.

காரவேலர் தம்மை “வழிபாட்டுப் பித்தன்” என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்குச் சமண சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடுள்ள மன்னர். இருப்பினும் மற்ற சமயங்களையும் ஆதரித்திருக்கிறார். தம்மை “எல்லா மதங்களையும் போற்றுபவன்”, “எல்லா வழிபாட்டுக் கோவில்களையும் மேம்படுத்தியன்” என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறார். இந்து மன்னர்களைப் போலவே சில யாகங்களை நடத்தி அந்தணர்களுக்குக் கொடையளிக்கும் மரபைப் பின்பற்றியிருக்கிறார். தன் முன்னோர்கள் வழிபட்ட அருகர் சிலையைக் கவர்ந்து சென்ற நந்த மன்னரிடமிருந்து அதை மீட்டதாகக் குறிப்பிடுவதிலிருந்து இவர் சமணக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், கலிங்கத்திடமிருந்து கவர்ந்த சிலையைப் பூசிக்கத் தக்க நிலையில் பாதுகாத்திருந்ததால் நந்தர்களும் சமணர்களாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.

பட்டத்து இளவரசர்களுக்கு ஆட்சிப்பயிற்சி கொடுப்பது பழக்கம் என்பதையும், அந்தப் பயிற்சியில் எதையெல்லாம் கற்பிக்கிறார்கள் என்பதையும் இந்தக் கல்வெட்டிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. காரவேலருக்குப் பட்டத்தரசி சிம்மபாதத்தின் சிந்துளா (வரி 15), தன் ஏழாம் ஆட்சியாண்டில் குழந்தையைப் பெற்றுக் கொடுத்த இல்லத்தரசி வஜிரகரவதி என்று குறைந்தது இரண்டு மனைவியர் இருந்திருக்கிறார்கள்.

தமிழக முற்கால வரலாற்றுக்கு முக்கிய ஆவணமாக விளங்குவது இந்தக் காரவேலன் கல்வெட்டு.