பிரமிள்: தனியொருவன் (பகுதி 4)

0 comment

இதுவரை விரிவாகப் பார்த்த கட்டுரைகளைப் போல 1971க்குப் பிறகு சில கட்டுரைகளே இலக்கியம் சார்ந்து வினையாற்றலோடு பிரமிள் எழுதியிருக்கிறார். மற்றவை எதிர்வினைகளாகவே அமைந்து விட்டன. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தனது மதிப்பீட்டு இயக்கத்தைக் காக்கும் பொருட்டு ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் பேச்சிற்கும் பதில் சொல்லியிருக்கிறார். அக்கட்டுரைகளுக்குள் நுழைந்து வருவதென்றால் அதேயளவுக்காவது அவற்றை விரித்துச் சொல்ல வேண்டியிருக்குமென்பதால் அவற்றைத் தவிர்த்து விடலாம். தேவைப்படின் தொகுத்து சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன்.

சென்ற கட்டுரையில் ஜெனே குறித்து ‘கசடதபற’ இதழில் பிரமிள் எழுதியிருந்ததைப் பார்த்தோம். அது பிப்ரவரி 1971ல். அதேயாண்டு ஜூன் மாதம் ‘கலாச்சாரம் என்றால் என்ன?’ என்ற தலைப்பில் அதேயிதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதை புனித ஜெனேவுக்கு எதிரான ஒரு கேள்வியாகச் சொல்லலாம். ஒட்டுமொத்தமாக இந்தக் கட்டுரை ஒரு கேள்வியை எழுப்புகிறது.

கலை உணர்வோ, கலாச்சார உணர்வோ, மனிதனின் உன்னதத் தன்மையுடன் சம்பந்தமுள்ளதா?’

இப்போதும் எழுத்தாளர்களிடம் பேட்டி எடுக்கும் போது ‘படைப்பு வாசிப்பவனை மேம்படுத்துமா?’ என்று கேட்டு வைக்கிறார்கள். இது ஒரு பொத்தாம்பொதுவான கேள்வியானாலும் பொது ஜனங்களுக்கு தாங்கள் செய்வது தன்னை மேம்படுத்திக் கொள்ளும் ஒரு செயல் என்ற நம்பிக்கை தேவையாக இருக்கிறது. மேலும் எழுத்தாளரும் சிந்தனையாளரும் சமூக மேம்பாட்டுக்கு உதவுபவர்கள் என்ற போதனையம்சமும் அவர்கள் மீது ஏற்றி வைக்கப்படுகிறது. இந்நேரத்தில் கவிஞர் பிரான்சிஸ் கிருபா சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின் விடுதலையான நிலையில் ஒரே நாளில் வெளியான கருத்து நிலைகள் தான் எத்தனை! சித்தர்கள் தங்களை பொதுவெளியில் வெளிக்காட்டிக் கொள்ளாது அடையாளத்தை மறைத்து சாமானியரைப் போல வாழ்வார்களாம். இன்னார் என்பது தெரிந்தால் பொதுஜனம் என்ன செய்யும் என்பது கண்கூடு.

இங்கே பெருவாரியானோர், படைப்பு மனநிலையை எவ்விதத்திலும் புரிந்துகொண்டவர்களாக இல்லை. மிக அணுக்கமான எழுத்தைக் கூட எழுத்தாளரின் சிந்தனைத் திறன், மொழிவன்மை என்ற மேலோட்ட ரீதியாகவே எண்ணுகின்றனர். ஓர் அனுபவத்தைப் பெறாமல் அந்த அனுபவம் குறித்து எப்படி படைப்பாளி தன் படைப்பில் சித்தரிக்கிறான், அது எப்படி தத்ரூபமாக தன் வாழ்வோடு பொருந்துகிறது என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. Sensitivity. அதேபோல் ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்றொரு கேள்வியைக் கேட்டும் பக்கத்தை நிரப்பிக் கொள்கிறார்கள். இப்படி எளிமையான சமூக எதிர்பார்ப்பின் அழுத்தம் ஒருபக்கம் என்றால், இன்னொரு புறம், நவீன இலக்கியத்தின் முன் ஒரு வாசகன் உள்ளே நுழையவே முடியாதபடி சமகால எழுத்துக்கள் பல முடிச்சுகளோடு மூடிக்கொண்டு இருக்கின்றன. இது வெகுவாக வாசகப் பரப்பைக் குறைத்து விட்டிருக்கிறது.

கலாரசனையுள்ள மனிதன் மேம்பட்ட மனிதன் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமுண்டா? இல்லை என்பதற்கு ஆதாரங்களை இந்தக் கட்டுரையில் முன்வைக்கிறார் பிரமிள். படைப்பு வேறு படைப்பாளி வேறு என்பதற்கு ஒரு நிரூபணமாகவும் இதைச் சொல்லலாம். ஒரு சமூகம் யாரை ஆதர்சமாகக் கொள்கிறதோ அவர் மிருக இயல்பற்ற உன்னதமானவராக இருக்க வேண்டும். ஒரு துறையில் சாதித்தவர் முன்னிறுத்தப்படும் போது எல்லா வகைகளிலும் அவரை முன்னுதாரணமாக, கண்மூடித்தனமாக பின்பற்றும் போக்கு நம்மிடையே உண்டு. ஊடகங்கள் பிம்பங்களை வளர்த்தெடுக்கின்றன. பிம்பங்கள் நம்மை ஆள்கின்றன. இங்கு ஓஷோ அளவுக்கு ஜி. கிருஷ்ணமூர்த்தி பிரபல்யமடையாமல் (வாசிக்கப்படாமல்) போனதற்கு காரணம் ஜி.கி. பந்தை கேள்வியெழுப்பியவரிடமே தள்ளிவிட்டார். ஓஷோ சாய்வதற்கு இடம் கொடுத்தார். பின்பற்ற சரணாகதி அடைய ஒரு பாதையை உருவாக்கினார். ஜி.கி. எதுவும் செய்யவில்லை. தானே சிந்தித்து தானே விடை கண்டறிய வலியுறுத்தினார். சுய சிந்தனையைப் போல பயமுறுத்துவது வேறில்லை. இங்கு பெரும்பாலானோர் அவரவர் சிந்தனா சக்திக்கேற்ப ஏதாவது ஒன்றைப் பின்பற்றுபவராகத் தானே உள்ளனர்.

எவ்வித மறுமலர்ச்சியும், சமூகக் கட்டுக்குள்ளிருந்து பிறப்பதில்லை. சமூகத்தின் க்ஷீணதசையை உணர்ந்து, அதிலிருந்துஅதன் பிரதிபிம்பமான தன்னிலும் இருந்துவிடுதலை அடையும் தனி மனிதர்கள் மூலமே உண்டாகிறது. சமூகம், மனிதன் என்ற இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று பிறந்து, ஒன்றைச் சார்ந்து ஒன்று நிற்கிறது என்ற உண்மையை இது மறுப்பதாகாது. ஆனால் சமூகம், பூரண மனிதனிடமிருந்து சுவீகரித்த மதிப்புகளை வற்புறுத்தலாக்குகிறது; எனவே, அம்மதிப்புகளை வெளிப்படையாக மட்டுமே திருப்திப்படுத்தி, உள்ளூர அழுகிக் கொண்டு போகும் நிலைமைக்கு ஆளாகிறது. அதோடு இனி வரும் தனிமனிதனைஅவனது உன்னத இயல்புகளைஇதே தன் அபத்தத்தைக் கொண்டு நசுக்குகிறது.”

 கோணல்கள்அஃக், அக்டோபர், 1972

இந்த ஒன்றரையாண்டுகளோடு கசடதபற-வுடனான உறவையும் முறித்துக் கொண்டார் பிரமிள். கோணல்கள் ஒரு நீள் கட்டுரை. தமிழ் நவீன இலக்கியத்தில் நேர்ந்திருக்க வேண்டிய தான் எதிர்பார்த்திருந்த மாற்றங்களோ வளர்ச்சியோ நிகழாமல் கீழிறங்கிய தளத்தில் பரவலாக அடுத்த தலைமுறையினர் செயல்படுவதை இதில் விரிவாகச் சுட்டிக்காட்டுகிறார். இவை இலக்கியப் படைப்புகளாக அல்லாது இலக்கியத் தயாரிப்புகளாக உள்ளன என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

கல்லூரிக் காலத்திலேயே எனக்கு ஜெயகாந்தன் படைப்புகள் மீது ஒவ்வாமை உண்டு. அப்போது அதற்கான காரணத்தைச் சொல்லத் தெரியவில்லை. நடைமுறை வாழ்க்கையோ, மனிதர்களோ ஜெயகாந்தன் பாத்திரங்களில் பிரதிபலிப்பதில்லை. அவை ஆதர்சமான உருவாக்கங்கள். இலட்சியவாத பிம்பங்கள். இயல்பாக முற்போக்குவாதமுடையவை. எனவே சமூகத்தின் மாதிரிக் குறியீடாக பெருவாரிகளுடன் உரையாடல் நிகழ்த்துபவராக ஆனார். ஜெயகாந்தனை ஒப்பிட தி.ஜானகிராமன் எவ்வளவோ மனதுக்கு நெருக்கமாக இருந்தார். ஒருநாளின் ஒரு கணம் இன்னொன்றாக இருப்பதில்லை. ஒரு புள்ளியில் கணமும் நில்லாது தட்டழியும் மனம். எத்தனை வித மனோ நிலைகள். எல்லாம் நம் கட்டுக்குள்ளா இருக்கின்றன? தேன் தடவப்பட்ட சாத்தியமில்லா ஓர் உயர்குணத்தை பாத்திரத்தின் மீது ஏற்றிவைத்து, வாழ்வின் போக்குகளால் சிறிதும் பிசகின்றி அக்குணாம்சத்தின்படி நடப்பவர் எந்த இலோகத்தில் இருக்கிறார். எதிர்கொள்ள வேண்டியவை அனைத்தும் உள்ளே தான் உள்ளன. அகச் சிக்கல்கள் சிறிதும் அணுகாத பாத்திரங்கள் போலியானவை. ஜெயகாந்தனின் கதைகள் ஒரு முன்மாதிரி இலட்சிய வடிவத்தை மனதில் கொண்டு குறிப்பிட்ட வாழ்வியல் சம்பவங்களை அப்பாத்திரங்கள் எதிர்கொள்ளும் விதங்களை வலிந்து படைப்புகளாக உருவாக்கி ஒரு வாழ்வியல் நெறியை போதிக்கின்றன.

புதுமைப்பித்தனது உக்கிரப்பார்வை, ஒரு பாஷனாக ஜெயகாந்தன் கையில் உருப்பெற்றது. ஜெயகாந்தனின் எழுத்தில் பத்திரிகைத் தேவைக்காக எழுதுபவர்களிடமுள்ள போலித்தனம் ஒன்று தலைகாட்டுகிறது; கலையுருப்பெற முடியாத அரை வேக்காட்டுத்தத்துவங்கள்தென்படுகின்றன. சாமான்ய இரக்கத்தையும் மனிதாபிமானத்தையும் களேபரமாக வெளியிடுவது கலையல்ல; ஆசிரியரது மேற்படி தத்துவங்களின் நூலிழுப்பில் ஆடும் பொம்மைகளாக, ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட இயல்புகளுடன் இயங்கும் பாத்திரங்கள், உயிருள்ள பாத்திரங்களுமல்ல. கதாபாத்திரங்களின் செய்கைகளும் கூற்றுக்களும், ஒரு கொள்கையையோதத்துவத்தையோ பறைசாற்றவென்றே தொழிற்படுவதன் மூலம், மனித வாழ்க்கையானது பிரதிபலிக்காது; குறிப்பிட்ட கொள்கையும் தத்துவமுமே பிரதிபலிக்கும். இப்படி, உயிர்ப்பொருளின் பலியில் பிறப்பது பிரசாரமே. ஜெயகாந்தன் எந்த வகையான கருத்துக்களுக்குக் கூடாகக் கதாபாத்திரப் பொம்மைகளைத் தயாரிக்கிறரோ, அவ்வகைக் கருத்துகள், மனிதனின் அடிப்படைப் பலவீனங்களின் முன்னால் தவிடுபொடியாகின்றன என்று காணத்தக்க தீட்சண்யம் புதுமைப்பித்தனுக்கு இருந்தது.”

இந்தக் கோணல் எழுத்துவிலேயே தொடங்கி விட்டதாக பிரமிள் சந்தேகிக்கிறார். சி.சு.செ. புதிய வகை எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் தராமல் பழைமையில் ஊறிப் போயிருந்தது, ஓர் அறிவு எதிர்ப்பு வாதத்தின் இழை என்கிறார். உதாரணத்திற்கு வெங்கட் சாமிநாதனும் பிரமிளும் எழுத்து இதழில் தத்துவம், ஓவியம் ஆகிய துறைகளுக்கும் விரித்து அடிப்படைகளை ஆராய வசதி கேட்டதற்கு சி.சு.செ. மறுத்திருக்கிறார்.

இந்தக் கட்டுரையில் ஜெயகாந்தனை மட்டுமின்றி அசோகமித்திரனையும் சாடுகிறார். இவர்கள் இருவருமே யந்திர எழுத்தாளர்கள். தேவையற்ற வெற்று விவரணைகள், கதையில் உருவாக்கப்படும் தெளிவின்மை (மௌனி கதைகளில் காணப்படும் தெளிவின்மைக்கும் இதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு) கலைத்தன்மையைச் சிதைப்பதாக உள்ளது என்கிறார். இதற்கு அடுத்ததாக உள்ள கட்டுரையில் அ.மி.யின் ‘பிரயாணம்’ என்ற சிறுகதை ஜாக் லண்டனின் கதையைத் திருடி எழுதப்பட்டது என்ற குற்றச்சாட்டை வைக்கிறார். இரண்டு கதைகளையும் வாசித்தவன் என்ற முறையில் எனக்கு இது ஏற்கும்படியாகத் தோன்றவில்லை. அந்தக் கதையின் தூண்டுதலால் எழுதியது என்று வேண்டுமானால் சொல்லலாம். அவரது மற்ற கதைகளில் இருந்து இந்தக் கதை தனித்து நிற்பது என்னவோ உண்மை.

இந்தக் கோணல்களுடன் உள்ள எழுத்துக்களை இலக்கியத் தயாரிப்புகள் என்கிறார் பிரமிள். இது ஒரு பிரமாதமான சொற்பிரயோகம். இலக்கியத் தயாரிப்பு என்றால் என்ன? தன்னெழுச்சியோடு படைப்போடு ஒன்றி படைப்பு மனநிலையில் எழுதப்படாது, எழுத்து வன்மையை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கதையைத் தானே தோதுக்குத் தகுந்தபடி உற்பத்தி செய்து, அதில் கிடைக்கும் விளைச்சலை இலக்கியத் தயாரிப்பு என்று சொல்லலாம். இலக்கியப் படைப்புக்கும் இலக்கியத் தயாரிப்புக்கும் வித்தியாசம் காண்பது எளிதென்றாலும் எழுத்தாளர் மீதான அபிமானத்தால், ஏற்கெனவே இரசனை ரீதியாக ப்ரீதியை எழுத்தாளர் மேல் வாசகர் ஏற்படுத்திக் கொள்வதால் இதை உணர்வது சிரமமாகி விடுகிறது. இது மட்டுமின்றி வாசகரின் தகுதி நிலையையும் பொருட்படுத்த வேண்டும். பெரும்பாலானவர்கள் தன் கைக்கெட்டும்படி பறிக்கக் கிடைக்கும் பழமே சுவையானது என்று சாதிப்பவர்கள். மேலும் உலக மயமாக்கல் படைப்பை ஒரு நுகர்பொருளாக ஆக்கிவிட்டது. அதிக விற்பனை, பெருவாரியானோர் ஆதரவு, சந்தை இவையே தர நிர்ணயக் காரணிகளாகிப் போயின. இதில் யாரிடம் உரையாடிக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி திகிலூட்டுவதாயும் அயற்சியளிப்பதாகவுமே உள்ளது.

ஓர் எழுத்தாளர் அல்லது வாசகர் ஒருவரின் படைப்பைக் கொண்டாடுவதன் காரணங்கள்: 1) அவரால் அது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது 2) அவரது வாழ்வனுபவத்தோடு நெருக்கமாய் இருக்கிறது 3) படைப்பாளியின் உணர்வுத் தளத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது 4) குறிப்பிட்ட எழுத்தாளரோடு தனிப்பட்ட முறையில் உள்ள பழக்கம் 5) அரசியல் நிலைப்பாடு. இன்னும் பல காரணிகளை அடுக்கலாம். ஓர் எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரைப் புகழ்வதைக் கொண்டு பாராட்டும் எழுத்தாளரின் வாசகர்களும் அதையே பின்பற்றுகின்றனர். எழுத்தாளர் தனது உள்வாங்கும் திராணிக்கேற்பவோ அல்லது தனது அரசியலுக்கு ஏற்பவோ தான் ஒரு படைப்பைப் பற்றிப் பேசுகிறார். இது ஒரு போதாமை இன்னொரு போதாமையை முன்னிறுத்தி, அப்படி முன்னிறுத்தப்பட்டவர் அதனினும் கீழான ஒரு படைப்பை/படைப்பாளியை முன்னிறுத்தி ஒரு தொடர் சங்கிலியை உருவாக்குகிறது. இது இலக்கியச் சூழலை மேலும் கீழ்நோக்கி இழுத்துச் செல்லும் செயல் தொடர்.

இந்தத் தொடர் கட்டுரைகளில் சிலநேரம் இதில் தனியே சொல்ல என்ன இருக்கிறது, இந்தக் கட்டுரையை அப்படியே தான் எடுத்து எழுத வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. அதே போல் ஏற்கெனவே வாசித்ததைத் திரும்ப வாசிக்கையில் புதிதாக வாசிப்பது போலும் தோன்றியிருக்கிறது. பிரமிள் விமர்சனங்கள் இலக்கிய பாராயணத்துக்கு உரியவை. எழுத்தாளர்கள், எழுத முனைபவர்கள், தீவிர இலக்கிய வாசகர்கள் அவசியம் பிரமிள் தொகுப்புகளை வாசிக்க வேண்டும். இப்படியான ஒரு கட்டுரைதான் ரசனையும் விமர்சனமும் செல்லப்பாவும்’ (ஞானரதம், மார்ச் 1973).

இந்தக் கட்டுரையில் செல்லப்பாவின் இலக்கியப் பங்களிப்பை குறிப்பாக ஒரு பதிப்பாளராகவும், இலக்கிய விமர்சகராகவும் எழுத்து இதழ் வழி அவரது சாதனைகளை விரிவாக விளக்குகிறார். க.நா.சு. ஆரம்பம் முதலே அபிப்பிராயங்களும், பட்டியல் போடுவதையுமே விமர்சனமாகக் கொண்டிருந்தபோது சி.சு.செ. ஆதாரப்பூர்வமான விமர்சனத்தைக் கைக்கொண்டார். தமிழில் விமர்சனம் வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர் க.நா.சு. என்றாலும் அவர் செல்லப்பாவின் ஆய்வுமுறையை அநுசரிக்கவில்லை.

எழுத்துவில் எழுதிய ஒரு கட்டுரையில் அவர், விமர்சனம் என்பது கலைப் படைப்பைத் தொட்டும் தொடாமலும் பூனைக்குட்டி ஒரு பொருளைத் தொடுவது போல தொட்டுப் பார்ப்பது தான் என்று எழுதினார். ஆனால், இந்தத் தொட்டும் தொடாத நிலை என்பது அபிப்ராயம் சொல்வதோ, பட்டியல் போடுவதோ அல்ல; கலைப்படைப்பையே தீண்டி ஆராய்வது தான். எவ்வளவு தான் ஆழ்ந்து அலசி ஆராய்ந்தாலும், அது இந்தத் தொட்டும் தொடாமலும் சென்ற அளவுதான். ஏனெனில், எத்தகைய விமர்சனமும் கலைப்படைப்பை அப்பிப்பிடித்து ஒட்டி இழுத்து விட முடியாது. தொட்டுக்காட்டிவிட்டு, விலகி நிற்பது தான் விமர்சனம். .நா.சு.வின் அடிப்படையற்ற அபிப்ராயங்கள் அவரது செல்வாக்கின் தளத்தில் பிறந்தவையானாலும், இன்று, .நா.சு.வை மறந்து விட்டு அவரது கட்டுரைகளை மட்டும் படிப்பவனுக்கு, ‘நான் சொல்கிறேன் கேள், இவர்கள் தான் இலக்கியாசிரியர்கள்என்ற தொனியாகவே அவை சப்திக்கும்.”

இப்படி ஆய்வுப்பூர்வமாக செல்லப்பா விமர்சித்ததினால் தான் உண்மையான இலக்கியத்தின் ஆழமும் அகலமும் இனம் காணப்பட்டு ஜனரஞ்சக எழுத்தாளர்களை அவர்கள் இடத்தில் வைக்க முடிந்தது. மேலும், இலக்கிய உலகில் ஒருவருடன் நட்பை வளர்த்துக் கொள்வது, அன்னாரிடமிருந்து முன்னுரை, பின்னட்டை வரிகள், தன்னைப் பற்றி சில வரிகள் எழுத வைப்பது, குறைந்தபட்சம் எதிர்மறைக் கருத்துகள் வரவிடாமல் செய்வது என்ற அளவில் தான் உள்ளது. படைப்புக்காக எழுத்தாளருடன் நேர்மையாய்ப் பழக வாசகராலேயே சாத்தியப்படுகிறது.

கருத்துலகில், சொந்த விருப்பு வெறுப்புகளுக்கோ, செஞ்சோற்றுக் கடனுக்கோ இடமில்லை. அதெல்லாம், கருத்துலகிற்குப் புறம்பான பிதிர் வழிபாட்டு மனப்பான்மைகள். இது கருத்துலக தர்மம். விமர்சனத் துறையில் மனிதர்களல்ல முக்கியம்மதிப்பீடுகள் தான்.”

ரசனை என்று எதைச் சொல்கிறோம்? ஒரு புதினம் பிரமாதமாய் இருக்கிறது என்ற அபிப்பிராயத்தில், அந்தக் கதை ஒரு துன்பியலாக இருக்கையிலும் இதையே சொல்கிறோம். இது வார்த்தைச் சிக்கலா இல்லை படைப்பாளியின் நடை இலாவகத்தை மட்டும் பார்த்து அது தரும் வாழ்வனுபவத்தைத் தவற விடுவதால் வரும் வார்த்தையா? ரசனை என்பது ஒருவித மேட்டுக்குடித்தனத்தோடும், கலையை நுகர்வுபொருளாகவும் கொள்ளும் அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. காஃப்கா, தஸ்தயோவ்ஸ்கியின் படைப்புகளைக் கடப்பது எத்தனை படபடப்பானது. மனதை உலுக்கியெடுக்கும் படைப்பை ஒருவர் அருமையாக இருக்கிறது என்பதை எப்படி புரிந்து கொள்வது?

கலைத்துறை எதுவாயினும், இலக்கியம் உட்பட, உண்மைக்கு வசப்பட்டது. நிதர்சன இயல்புகளையே அடிப்படையாகக் கொண்டது. வாழ்வின் கதியும் மனித இயல்பும், மனிதன் இவற்றை எதிர்த்து, இவற்றுக்கு அடிமைப்பட்டு, ஈடுகட்டி, வென்று, தோற்று, வாழ்ந்து சமைக்கும் நிதர்சனமும் கலையுருப் பெறும்போது அது மனதைக் கவராது; படிப்பவனின் மனதைத் தாக்கும். விழிப்பூட்டும். அவனைத் தன்னுள் ஆழ்த்தி எடுத்து உலுக்கி விடும். இந்த இயல்பு இலக்கியத்தில் இல்லையென்றால், ‘பாதிப்புஎன்ற ஓர் அதிர்ச்சியே நேர்ந்திராது. இந்தப் பாதிப்பின் விளைவு தான் பாரம்பரியம். இந்த இயல்பு இலக்கியத்தில் இல்லையென்றால், மனித அறிவின் வரலாறே இன்று நாம் அறிந்துள்ள வகைக்கு வந்திராது. தஸ்தயேவ்ஸ்கியின் கரமஸாவ் சகோதரர்களையும் குற்றமும் தண்டனையுமையும் கதைக்காகப் படித்துரசிப்பவர்களை எனக்குத் தெரியும். தஸ்தயேவ்ஸ்கி எழுப்பும் நிதர்சனம் இவர்கள் மீது இறங்கும் போது, எருமைமாட்டின் முதுகில் பெய்த மழையாகத்தான் முடியும்.”

கோணல்கள், இலக்கியத் தயாரிப்பு குறித்து பார்க்கையில் ஜெயகாந்தன் மீதான பிரமிளின் விமர்சனத்தைப் பார்த்தோம். இது ஒருவகையில் அவர் அடிப்படையில் கம்யூனிஸ்டாக இருந்ததின் காரணமாக இருக்கலாம் என்கிறார் பிரமிள். வெளிப்படையான, சட்ட திட்டங்களுக்குட்பட்ட விஷயங்களில் பிய்த்து உதறும் இந்த மெட்டீரியலிஸ்ட்கள் அகவயமாய்ப் போவதாய் இருந்தால் தட்டுத் தடுமாறி பாவ்லா காட்டி ஏமாற்றி விடுவார்கள். ஸ்தூலங்கள் எளிமையானவை. 1+1=2 என்ற கணக்கைப் போல குழந்தைகூட எளிதில் கற்றுக்கொள்ளும். மனதையும் ஆழ்மனதையும் கற்றுத்தரப் போவது யார்? இதனோடல்லவா ஒவ்வொரு மனித ஜீவனும் போராடிக் கொண்டிருக்கிறது. மனதுக்கு எதிரான, சமூகத்தால் அடக்கப்பட்ட ஆழ்மனம் இவற்றுக்கு எதிராகவல்லவா இருக்கிறது. உலோகாயதத் தேவைகளை பூர்த்தி பண்ணிவிட்டால் மனிதன் சமாதானம் பெற்று தன்னிறைவை அடைந்துவிடுவானா? புறத்தை மட்டுமே அணுகுவதில் ஒரு மழுங்கல் இருக்கிறது. ஒருவித உணர்திறன் (sensitivity) குறைபாடு.

தீயும் பிரச்சாரமும் (சதங்கை, ஆகஸ்ட் 1973) இதழில் இதை மார்க்ஸியத்தின் மீதான குறையாக முன் வைக்கிறார் பிரமிள்.

உளவியல் என்பதே உள்மனம் பற்றிய கொள்கையின் பெருக்கமாகும். அது விழிப்பின் போது செயல்படும் மனத்துடன் முரண்படுகிறது. ஆனால் விழிப்பு நிலையின் தேவையான பொருளாதாரத் தேவை தான் மனிதனின் பூரணமான நோக்கு என்று அறுதியிட்டுக் கூறும் மார்க்ஸியம், இதை ஒப்புக்கொள்ளாது. ஒப்புக்கொண்டால், மார்க்ஸியம் பொருள்முதல்வாதத் தத்துவமில்லை. ஃப்ராய்டுக்கும் மார்க்ஸுக்குமிடையில் உள்ள அடிப்படை முரண்பாடு இது. மார்க்ஸ் மனித மனத்தின் பேராழத்தை, அதன் எதிர்பாராத தன்மைகளை, இருட்குகைத் தேவைகளை நிராகரித்த அல்லது அறியாத தத்துவவாதி என்பது பிரசித்தமானது. அவர் ஒரு பெரிய தார்மீகவாதி. உலக அரசியலில் ஒரு பெரிய வியாதியைத் தீர்ப்பதற்காக அவர் செய்த ரணசிகிட்சை, வேறொரு பெரிய வியாதிக்குக் காரணமாகி விட்டது. அதுதான் ஆன்மீக வறட்சி.”

காந்தி கூட இதை ஓரிடத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார். தேவைக்கதிகமான உற்பத்தி, தேவைக்கதிக நுகர்வைக் கொண்டு வரும். இது மனிதனிடம் ஆன்மா என்ற ஒன்றை மறைத்து விடும் என்றார். நாத்திகவாதிகளும் மார்க்ஸியவாதிகளும் ஒட்டிக்கொள்வது இதுமாதிரியான சில புள்ளிகளில் தான். ஆன்மீக வறட்சி, ஒருவித மேம்போக்கான ஆழமற்ற, சென்சிடிவிடி இல்லாத குணாம்சம் இத்யாதிகள் ஒன்றாய்ச் சேர்ந்து ஓரினமாகி விடுகின்றனர்.

சமையலின் போது கத்தி வெட்டும், நெருப்பு சுடும்; கத்தி சுடாது, தீ வெட்டாது. முயன்றால், சமையலே நடக்காது. இது போலத்தான், அரசியல் வாழ்வுத் துறையில் பிரச்சாரத்தின் வேலையும் கலையின் வேலையும். பிரச்சாரம் பிரச்சாரமாகவும், கலை கலையாகவும் இருப்பதுதான், அரசியலுக்கும் வாழ்வுக்கும் செம்மை தரும்.

இங்கு கம்யூனிஸம் கலைஞனிடமிருந்து கௌரவத்தைப் பெற வேண்டுமானால், இந்தியாவில் அது காட்டிவரும் குருட்டுத் தன்மைகளிலிருந்து விழிப்படைய வேண்டும். இல்லாவிட்டால், சிந்தனா சக்தியோ எழுத்தாற்றலோ இல்லாத சந்தர்ப்பவாதிகளின் தற்காப்புக்காகவே கம்யூனிஸ இலக்கிய சித்தாந்தம் பயன்படும்தற்போது தமிழ்நாட்டில் நடப்பதுபோல.” (சதங்கை, செப்டம்பர் 1973)

சதங்கை இதழில் (பிப். 1974) பிரமிளின் உளவியல் குறித்த கட்டுரைக்கு வந்த திரு. தமிழவனின் எதிர்வினைக்குப் பதில் சொல்கிறார் பிரமிள். தமிழவனின் கேள்விகள்:

உள்மனம் பற்றிய கொள்கை கண்டுபிடிக்கப்பட்ட 1885ஆம் ஆண்டுக்கு முந்தி, உளவியலே இல்லையா?’

பிராய்டு தன்னை பொருள்முதல்வாதி என்றுதானே சொல்லிக் கொண்டார்?’

உள்மனம் ஆன்மீகமானது அல்ல; விஞ்ஞானப்பூர்வமாய் நிரூபிக்கப்படக்கூடிய உண்மை

உள்மனம் (ஆழ்மனம்/அடிமனம்) வெளிமனத்துக்கு நேரெதிரானது. விஞ்ஞானப் பூர்வமாய் நிரூபிக்கப்பட்டது. ஆனால் ஏன் ஒருவருக்குள் இருவேறு எதிரெதிர் மனங்கள்? ஏனெனில், புற உலகத்தோடு ஒத்த மனத்தோடு நம்மால் இயங்க முடிவதில்லை. பிளவு இயல்பாகவே உருவாகிறது. குழந்தை சாக்லேட் கேட்டால் அது மறுக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்படுகிறது. குழந்தையின் ஆசை உள்ளுக்குள் அழுத்தப்படுகிறது. அது கனவு நிலையில் வெளிப்படுகிறது. இவ்வாறே சொல்லிய சொல்லாத, ஆசைகள், கோபங்கள், இயலாமைகள் இன்னும் என்னென்னவோ உள்ளே இருளுக்குள் திரிகின்றன. தியான நிலையில் ஏற்படும் ஒருமித்த மனநிலையில் இரு மனங்களும் ஒன்றாகின்றன. வெளிமனம் மௌனிக்கும் போது அடிமனம் மேலேறி வருகிறது. அந்நேரம் அதைக் கட்டுப்படுத்தாமல் அப்படியே அனுமதிக்கும் போது இரு மனங்களும் ஒரேகதிக்கு இயங்க ஆரம்பித்து தன் விழிப்பு சாத்தியமாகிறது. இது ஆன்மீகம்.

உள்மனம் ஆன்மீகமானது என்று நான் கூறவில்லை என்பதும், உள்மனம்வெளிமனம் என்ற பாகுபாடு இல்லாநிலையில் கிடைக்கும் தரிசனமே ஆன்மீகமானது என்பது தான் என் நோக்கு என்பதை, திரு. தமிழவனுக்கு எனது பதில் புலப்படுத்தியிருக்கும். உள்மனத்தை நிரூபிக்கத்தான் விஞ்ஞானத்தால் முடிகிறது. ஆனால் உள்மனம்வெளிமனம் என்ற பாகுபாட்டை, விஞ்ஞானம் மனித மனத்திலிருந்து களைந்து விடவில்லை என்பதையும் அப்படிக் களைய integration என்ற ஒன்றிப்பு வேண்டும் என்பதையும், சில நவீன மனவியல்வாதிகள் Alan W. Watts, Eyesenk போன்றோர் வலியுறுத்துகின்றனர் என்பதையும், திரு. தமிழவனுக்குத் தெரிவிக்க வேண்டியுள்ளது. இந்த integration-க்கு விஞ்ஞானம் துணை செய்ய முடியாது என்பதும், தனிமனிதனே தன்னையறிய முயல வேண்டும் என்பதும்தான், பிராய்டிலிருந்து இன்றுவரை தெரியவந்துள்ள உண்மை.”

கனவில் செயல்படும் உள்மனம், விழிப்பு நிலையிலுள்ள மனத்தோடு முரண்படுவதாகக் கூறுவதை மறுப்பதாகவும் தமிழவன் கூறுகிறார். அதாவது ‘புற உலகோடு ஏற்படும் தொடர்பால்’ Idக்கு (அடிப்படைத் தேவையும் நினைவும்) Ego உண்டாகிறது என்கிறார் தமிழவன். இங்கே தொடர்பு என்ற வார்த்தை சரியானதல்ல. தொடர்பு என்பது ஒப்பந்தம் போன்ற நேர்மறையான அர்த்தம் கொடுப்பது. குழந்தையின் ஐடி நிலையின் தேவையும் வேளியுலகு அதற்கு விதிக்கும் தடைகளும் ‘தொடர்பு’ என்ற வார்த்தைக்குள் வராது. முரண்நிலையே உருவாகும் என்கிறார் பிரமிள்.