பிரமிள்: தனியொருவன் (பகுதி 7) – பாலா கருப்பசாமி

0 comment

ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை என்ற தலைப்பில் 1984ல் பிரமிளின் கட்டுரைப் புத்தகம் ஒன்று வெளியானது. (அமேசான் தளத்தில் கிடைக்கிறது) ஈழத் தமிழர் பிரச்சினைகளைத் தொடக்கத்திலிருந்து புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் இது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வெளிவந்த ‘புது யுகம்’ என்ற இதழில் வெளிவந்துள்ளது. அதன் முதல்வரியே இப்படித்தான் ஆரம்பிக்கிறது:

இலங்கைக்குப் பிழைக்கப் போன தமிழர்கள் அங்கே தனிநாடு கேட்கிறார்கள் இது, இந்தியாவில் மெத்தனமான ஒரு சாராரின் அபிப்ராயம்.

யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில், பெருங்கற்படைக் காலத்தைச் (கி.மு.1000 முதல் கி.பி. 100) சேர்ந்த ’கோவேத’ என்ற தமிழ் வரிவடிவம் கொண்ட முத்திரை ஒன்று கிடைத்துள்ளது. யாழ் பகுதியில் தமிழ்மொழி கொண்ட எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. 7000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்கும் இலங்கைக்கும் தொடர்பு இருந்ததை ஒரே மாதிரியான தொழில்நுட்பத்தில் அமைந்த நுண்கற் கருவிகள் தமிழகத்தின் தேரிப்பகுதியிலும் இலங்கையிலும் கிடைப்பதிலிருந்து உறுதி செய்யப்படுகிறது. தொல்லியல் நோக்கில் சங்க காலம் என்ற புத்தகத்தில் தொல்லியல் ஆய்வாளர் கா.ராஜன் இந்தத் தரவுகளைத் தருகிறார்.

கீழடியில் முதற்கட்டமாக அகழாய்வு செய்யப்பட்டு மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டதில் அவை 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என உறுதி செய்யப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகள் செய்யப்பட்ட அகழாய்வில் 5000-த்திற்க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் வேந்தன், திசன், இயணன், சேந்தன், அவதி முதலிய சொற்களும், “வணிக பெருமூவர் உண்…” என்ற முழுமை அடையாத வாக்கியமும் தமிழ் பிராமியில் காணப்படுகின்றன. திசன் என்பது கி.மு. 250 முதல் கி.மு. 210 வரை இலங்கையை ஆண்டு வந்த மன்னனின் பெயர். முழுப்பெயர் தேவநம்பிய திசன். இதன் அர்த்தம் ’தெய்வங்களுக்கு மகிழ்வூட்டுபவன்’. வணிகத்தில் சிறந்த மன்னன் என்பதைக் குறிக்க இவ்வாறு பொறிக்கப்பட்டிருந்திருக்கலாம். இவரது ஆட்சிக்காலத்தில் தான் அசோகர் புத்த மதத்தைப் பரப்பும் பொருட்டு தூதுக் குழுவை இலங்கைக்கு அனுப்பினார்.

கி.பி. 400 வாக்கில் இலங்கைக்கு வந்த சீனப்பயணி பாஹியான் எழுதியுள்ள குறிப்பின்படி, முதலில் சிங்களத்தில் (சிங்களம் என்ற பெயர் சிங்கத்தின் மகனுடைய தீவு என்பதைக் குறிக்கிறது. வெளிநாட்டவர்களின் குறிப்புகளில் முதலில் தப்ரபானே என்றும் ஓரிடத்தில் அதற்கும் முன்புள்ள பெயராக பலீசிமுண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்களம் என்ற பெயர் தோராயமாக கி.பி. 200க்குப் பிறகே வருகிறது) முதலில் இலங்கையில் மனிதர்கள் யாரும் குடியேறியிருக்கவில்லை. தேவர்களும் நாகர்களுமே இருந்தனர். பொருட்களை விற்க வரும் வணிகர்கள் கண்ணுக்கு அவர்கள் தெரிய மாட்டார்கள். அவர்களுக்குப் பிடித்த பொருட்களுக்கு அவர்கள் தர விரும்பும் இணையான மதிப்புள்ள பொருளின் அடையாளத்தை வைத்து விடுவார்கள். வணிகர்கள் விலைக்குரிய பொருளை வைத்து விட்டு, இணையான பொருளை எடுத்துச் செல்வார்கள். பின்னர் பலநாட்டு மக்களும் அங்கே குடியேறத் தொடங்கினர். இதில் தேவர்கள், நாகர்கள் கட்டுக்கதை போலத் தோன்றினாலும், அவர்களைப் பூர்வ பழங்குடி இனமாகக் கருத வேண்டியிருக்கிறது, அதாவது சிங்களர்கள் முதல்முதலாக இங்கு வருவதற்கு முன்பு இருந்த பூர்வ குடிகள். மார்க்கபோலோ (கி.பி. 13ம் நூற்றாண்டு) தனது பயணக் குறிப்பில முன்பு மாலுமிகள் வரைந்திருந்த வரைபடங்கள் மற்றும் குறிப்புகளை ஒப்பிட்டும் வடக்கிலிருந்து வீசும் காற்று மிக வேகமாய் வீசுவதனால் இலங்கையின் ஒருபகுதி கடலில் மூழ்கி விட்டது என்று சொல்கிறார்.

எத்தனை தரவுகள் நமக்குக் கிடைத்தாலும், தொன்றுதொட்டு இலங்கையோடு தமிழினத்துக்கு உறவுண்டு. நம் பூர்வகுடிகள் வாழ்ந்த நிலம் என்று சொன்னாலும் தமிழகத்தில் பெருகிப் போன நடுத்தர வர்க்கத்திடம் அது எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாது. இங்குள்ள தமிழ் மக்கள் கொஞ்சம் அசைந்து கொடுத்தார்கள் என்றால் பாலச்சந்திரன் பிரபாகரனின் படுகொலையை ஒட்டி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளைப் பார்த்த போது தான்.

சிங்களர்கள் இந்தியாவின் வங்கப் பகுதியிலிருந்து அல்லது வடபுறப் பகுதியிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள். சிங்களர்களின் புராணக் கதையான மகா வம்சத்தில் வங்கத்தில் ஓர் இளவரசிக்கு சிம்மம் ஒன்றின் மூலம் பிறந்த விஜயன் சிங்களவரின் மூதாதையாகக் காட்டப்படுகிறார். இங்கே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருவேறு பிராமி எழுத்துக்கள் (தமிழ் பிராமி, இலங்கை பிராமி) இலங்கையில் காணப்பட்டன என்பதற்கு இது விளக்கம் அளிக்கிறது. இந்தியாவில் அசோகர் காலத்தில் எழுதப்பட்ட பிராகிருதம் மற்றும் பாலி மொழிக் கல்வெட்டுகள், ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டிப் புரோலு என்னும் இடத்தில் புத்த பிரானின் புனித எலும்பு வைக்கப்பட்டுள்ள கற்பேழை மீது உள்ள கல்வெட்டு, அண்டை நாடான இலங்கையில் உள்ள சிங்களக் கல்வெட்டுகள் முதலிய அனைத்தும் ஏறத்தாழ ஒரே எழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ளன. சிங்களர்களின் வரலாறு விஜயனிலிருந்து துவங்குகிறது எனக் கொண்டால் அது கி.மு. 500+.

மகா வம்சத்தில் விஜயன் கடலில் அலைக்கழிக்கப்பட்டு கப்பல் இலங்கைக் கரையில் ஒதுங்க அங்கே கப்பலில் தனது நண்பர்கள் 201 பேருடன் (சிலர் 700 என்கிறார்கள்) அங்கே குடியேறுகிறார்கள். அனைவருமே ஆண்கள் என்பதிலிருந்து இவர்கள் நாடு கடத்தப்பட்டவர்கள் என்ற கருத்தை பிரமிள் முன்வைக்கிறார். அங்கே பூர்வகுடிப் பெண்ணான குவேனியை திருமணம் செய்து கொண்டு நாட்டை ஆள்கிறான். பின்பு பாண்டிய அரச பரம்பரையிலிருந்து பெண்ணெடுத்து அவளைப் பட்டத்தரசியாக்கிக் கொண்டான். இங்கே குவேனியை மணந்த விஜயன், அவளை விலக்கி விட்டே தன் நிலையை உறுதிப்படுத்திக் கொள்கிறான். அதாவது பூர்வகுடி மக்களின் உரிமையான இலங்கையை தந்திரமாக ஒரு கூட்டம் அபகரித்துள்ளது என்கிறார் பிரமிள். அவ்வாறே தங்களை ஆரியர்களாக சொல்லிக் கொள்ளும் சிங்களர்கள், ஒரு பூர்வகுடியிலும் திராவிட இனத்திலும் கலந்தபின் எங்ஙனம் அது உண்மையாகும்? புத்த பிக்குகள் ஏன் இப்படி கிறித்துவ போதகர்கள் போல நாடு நாடாய்ச் சென்று மதத்தைப் பரப்பினார்கள் என்றால், அக்காலத்தில் இங்கே இந்து மதத்தில் அவர்களுக்கு இருந்த கஷ்ட நஷ்டங்களையே காரணமாகச் சொல்லலாம். ஒருவேளை அவர்கள் அப்படி பிரயாணப்பட்டிருக்காவிட்டால் பௌத்தம் அதன் கிளைகளுடன் இந்தளவு தளிர்த்திருக்காது.

அசோகரின் மகன் மகிந்தனும் மகள் சங்கமித்ராவுமே பவுத்தத்தை இலங்கைக்குக் கொண்டு வந்தனர் என்கிறது மகாவம்சம். இவர்கள் இலங்கையில் சந்தித்த அரசனின் பெயர் தேவநம்பிய திஸ்ஸ. இது அப்பட்டமான ஒரு ஹிந்துப் பெயர். இவனது தலை நகரின் பெயர் பொல்லன் நறுவை. திஸ்ஸ என்பது தீர்த்த என்பதன் மரூஉ. தேவ நம்பிய திஸ்ஸவில் உள்ள நம்பி பாண்டிய நாட்டு பிராமணனைக் குறிக்கிறது. கேரளாவில் இன்றும் இப்பெயர் நம்பூதிரி, நம்பியார் என்ற பெயர்களில் வழங்கப்படுகிறது. பொல்லன் என்றால் கோல் கொண்டவன். நறுவை நறு+அவை என்பது நல்ல சபை. ஒரு கொள்ளைக்காரன் சொன்னதையும் கிரேக்க யாத்ரீகர்களிடமிருந்து திருடியதையும் சேர்த்துப் பிசைந்து பண்ணப்பட்ட மகாவம்சத்தின் கதையை விட, குமரிக் கண்டத்தைப் பற்றிய விபரங்களுக்கு உள்ள தமிழ்க் கவித்துவ ஆதாரங்கள் ஆழமானவை. இந்த குமரிக் கண்டம், கன்யாகுமரியின் நிலத்தொடராகவே இருந்திருக்கிறது. அவ்விதமானால், அது இலங்கையை இந்தியாவுடன் இணைத்த ஒரு நிலப்பரப்பாகவே இருந்திருக்கலாகும். இதனூடே, பஃறுளி என்ற ஆறு ஓடிய குறிப்புகளும் உள்ளன. குமரிக்கண்டம் என்ற நிலப்பரப்பு மறைந்த போது நடந்திருக்கக் கூடிய இயற்கையான விஷயம், இலங்கைப் பகுதியில் முதற்சங்க காலத்துத் தமிழர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதே. இவர்களுள் தேய்வடைந்தவர்கள் வேடர்களாகவும், மற்றையவர்கள் தமிழ்ப் பகுதியின் பூர்வகர்த்தாக்களாகவும் இருக்கலாம். இத்தொடர்பு சிங்களத் தொடர்பினை விட மிக மிகத் தொன்மையானது.

மெகஸ்தனிஸ் (கி.மு.350 – கி.மு.290) தனது குறிப்பில் தப்ரபானேவுக்கும் தலைநிலத்துக்கும் இடையில் ஓர் ஆறு ஓடுவதால் தப்ரபானே தலை நிலத்திலிருந்து பிரிந்து நிற்கிறது என்றும் அங்கு வாழும் மக்கள் பலையோகோனாய் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார். அதாவது தமிழகமும் இலங்கையும் பஃறுளி ஆறால் மட்டுமே தனியாக இருந்தன. “பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள” என்ற சிலப்பதிகாரச் செய்யுள் வரி இங்கே கவனிக்கத்தக்கது. இன்னொன்று கோடியக் கரையிலிருந்தும் இலங்கைக்கு அக்காலத்தில் நிறைய பயணிகள் போக வர இருந்துள்ளனர். கோடியக் கரையிலிருந்து ஜாஃப்னா தோராயமாக 70 கி.மீ. இருக்கும்.

இந்தியாவிலிருந்து முதலில் இலங்கைக்குப் போனவர்களின் பரம்பரையே சிங்கள இனம் என்பது சிங்களவர் வாதம். ஆனால் அங்கே ஏற்கெனவே இருந்த பூர்வகுடிகளைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை. இலங்கையின் தெற்குப் பிராந்தியத்தில் வேடர்கள் பூஜிக்கிற புராதனமான முருகன் கோவில் ஒன்று உள்ளது. ‘கதிர்காமம்’ என்ற இதன் பெயர், சிங்களத்தில் மருவி ‘கதிரகம’ என்று வழங்கப்படுகிறது. சிங்களவருடையது என்று சொல்லப்படுகிற, தெற்கில் உள்ள இந்தக் கதிர்காமத்துக்கு சிங்களப் பெயர் என்று ஏதுமில்லை. மேலும், வேடர்களால் வழிபடப்படுகிற முருகன் அசல் பூர்வ திராவிடக் கடவுள். மேலும் இங்கே பூஜை செய்கிற பூசாரி வாயைத் துணியால் கட்டிக் கொள்வார். தீபாராதனை கிடையாது. மூலக்ரகம் எப்போதும் திரையிடப்பட்டே இருக்கும். காட்டுமிராண்டிகளின் பூஜை முறை சப்தங்களையே அனுசரிக்கும். ஆழ்ந்த விவேகிகளே மௌனத்தை அனுசரிப்பர் என்கிறார் பிரமிள்.

பிரமிளின் ஆய்வுமுறைகள் ஆச்சரியமூட்டுபவை. மிக உன்னிப்பாய் ஒரு விசயத்தை அணுகுகையில் வெறுமனே பௌதீகமாக அவர் ஆராய்வதில்லை. அதன் குணாம்சத்தையும் நுட்பமான உள்ளுணர்வுடன் உள்வாங்கி, மறுக்க முடியாதபடி தனது வாதத்தை வைப்பவர். இங்கே அந்த வேடர்கள் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அவர்களது இந்த வழிபாட்டுமுறையை எடுத்துக் கொள்கிறார். தமிழின் மொழிக் கூற்றியல் மூலம் கீழ்க்கண்டபடி தனது வாதத்தை வைக்கிறார்.

தமிழ்என்ற பெயர்ச்சொல்லை எடுத்தால், இதை =தம்முடைய, மிழ்=பேச்சு என்று பிரித்துப் பொருள்படுத்தலாம். மௌனம் அல்லது பேசாமை என்பது, இதே வழியில், ‘அமிழ்என்ற பதமாகிறது. =அல்ல, மிழ்=பேச்சு. நீரினுள் முங்குவதற்கேஅமிழ்என்பதனை இன்று உபயோகிக்கிறோம். நீரினுள் பேச்சு எழாது என்பதே, இந்தப் பொருள் இருமைக்குக் காரணம். ‘அமிழ்துஎன்பது, நீர் என்ற பொருளை இதே வழியில் பெறுகிறது. பேசாமை என்பது ஒரு நெறியாகும் போது கிடைப்பது மரணமிலாப் பெருவாழ்வு; எனவேதான், மரணமின்மைக்கு மருந்தாகஅமிர்தம்குறியீடாகிறது. உண்மையில் இது வெறும் உணவு அல்ல. கடைப்பிடிக்க வேண்டியபேசாமைஎன்ற நெறி; ‘சும்மா இருக்கும் திறன்‘. ‘வாழ்வுஎன்ற பதத்தின் மூலம் குறிப்பிடப்படுவது மரணமின்மையே ஆகும். இதனைப் பிரித்தால், = வலிமையுடன், ஆழ்வு = உட்செல்லல் என்றாகும். இது, தியான நிலையில் ஒரு தர்சி தன்னுள் ஆழ்ந்து நிலைத்த பெருநிலையைக் குறிக்கிறது. சமஸ்கிருதத்திலுள்ளஅம்ருதவின் பொருள், =அல்ல, மிருத்=மரணம் என்ற அளவுடன் நின்றுவிடும். அமிழ்தம் என்ற பதத்திலோ, மரணமின்மைக்கு உபாயம் மௌனம் என்ற விரிவு உண்டு.” –என்று சொல்லி கடவுள் முன் மௌனித்து நிற்பதே உண்மையான வழிபாடு என்பதை கோட்பாட்டு ரீதியாகப் பொருத்துகிறார்.

அதேபோல கி.பி. 433ல் இலங்கையை ஆண்ட தாதுசேனன் என்ற சிங்கள பௌத்த அரசன், சிங்கள-தமிழ் கலப்புமணங்களைத் தடுக்க வேண்டி மலையாளத்திலிருந்து வருபவர்களை ஊக்குவித்தான். இதன் தாக்கத்தை கேரளா மற்றும் சிங்களர்களின் உடைகளில் பார்க்கலாம். மலையாளப் பதங்களும் சிங்கள மொழியில் காணப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இது திராவிட இரத்தம். இங்கே இனப்பிரிவினை என்பதே அபத்தமான ஒன்று என்பதை பிரமிள் சுட்டிக்காட்டுகிறார்.

அதே போல, பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்த்துக்கீஸியரின் ஆதிக்கத்தில் இலங்கை வந்த போது அங்கே வடகீழ்ப் பகுதிகள் தமிழரது அரசாகவும், மத்திய தென்மேற்குப் பகுதிகள் சிங்கள அரசாகவும் தனித்து இருந்திருக்கின்றன. கி.பி. 600க்குப் பிறகு இலங்கைக்கு வந்த வெவ்வேறு வெளிநாட்டுப் பயணிகள் குறிப்பிலும் இலங்கையில் இரண்டு அரசர்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். 1619ல் போர்ச்சுக்கீசியர்கள் தமிழ்ப் பகுதியைக் கைப்பற்றி அரசாண்டு வந்த சங்கிலி குமாரனைத் தூக்கிலிட்டனர். அவர்களுக்குப் பின் வந்த டச்சுக்காரர்களும் இரண்டு பகுதிகளையும் இணைக்காமல் தனித்தனியாகவே ஆண்டிருக்கின்றனர். 1833ல் பிரிட்டிஷ் ஆட்சியில் தான் ஒரே ராஜீய அமைப்பாக மாறியது. 1840க்கும் 1950க்கும் இடையில் மலையகக் காஃபித் தோட்டங்களில் உழைக்க, தமிழர்கள் இலட்சக்கணக்கில் வற்புறுத்தி அழைத்துச் செல்லப்பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கல்வி இந்த மலையகத் தமிழருக்குக் கிடைக்கவில்லை. மேலும் இலங்கைத் தமிழரே இவர்களை கீழ் ஜாதியினர் போல பார்த்தனர். இலங்கை சுதந்திரமடைந்த போதும் இவர்களுக்காக எதுவும் செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட நூறாண்டுகள் இலங்கையில் வாழ்ந்து, இலங்கைக்காகவே உழைத்த இவர்களுக்குச் செய்யப்பட்ட அநீதி பிரிட்டிஷ் அரசியல் சாசனத்திற்கே விரோதமானதாகும் என்கிறார் பிரமிள்.

சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் நடந்த போது மலையகத் தமிழர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. அவர்கள் ஏழு பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பினர். ஆனால் அடுத்த தேர்தலில் அவர்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டது. அதற்கு ரொம்பவும் பின்னர், இந்த பத்து இலட்சம் மக்களில் ஒரு இலட்சம் பேருக்கு மட்டும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. இவ்விசயத்தில் மலையகத் தமிழர் தவிர்த்த இலங்கைத் தமிழரின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை. இத்தகைய எளிய மக்களுக்காக காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்திய அறவழிப் போராட்டத்தை இங்கே பிரமிள் பொருத்திப் பார்க்கிறார். இலங்கைத் தமிழரிடமிருந்த இந்த பூர்ஷ்வா குணாம்சம் அடிமட்ட நிலையில் உள்ளவர்கள் குரல் எழும்புவதை விரும்புவதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.

இங்கே நுட்பமான இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும். கி.மு. இருபத்தியொன்றில் ரோமானியப் பேரரசர் அகஸ்டஸின் அவைக்கு பாண்டியர் அரசவையிலிருந்து ஒரு தூதுக் குழு செல்கிறது. அதில் பாண்டிய மன்னன் அவர் நட்புறவை பெரிதும் விரும்புவதாகவும், தன் நாட்டின் வழி அவர் செல்வதாக இருந்தால் அதற்கு ஆதரவளிப்பதாகவும், வேறு ஏதேனும் பெரும்பணி இருந்தால் அதற்குத் தாம் உதவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்தக் குழுவில் இருந்த ஒருவன் தீக்குளித்து அங்கே உயிரை விட்டிருக்கிறான். காரணம், வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் பார்த்தாயிற்று. இனி இருந்தால் துன்பம் வந்துவிடக் கூடும். அதை அனுபவிப்பதற்குப் பதில் இதோடு முடித்துக் கொள்ளப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறான். தீயில் புன்னகையோடு இறங்கியதாக இக்குறிப்புகளை எழுதிய ஸ்ட்ராபோ சொல்கிறார். அதே போல, அந்தக் குழுவில் இருந்த இன்னொருவன் ஏதென்ஸ் மக்களுக்கும் அகஸ்டசுக்கும் தன் தைரியத்தைக் காட்டவோ என்னவோ அவனும் தீயில் குதித்து இறந்திருக்கிறான். எதற்காக அவன் அப்படிச் சாக வேண்டும்? இந்த அதீத உணர்வுமயமான, விபரீத தைரியம் இந்த இனத்துக்கே உரிய குணமாக உள்ளது. தலைவனுக்காக தீக்குளிப்பது, ஏதாவது பிரச்னைக்காகத் தீக்குளிப்பது, துன்பம் தாங்காமல் தீக்குளிப்பது என்று இப்போதும் தொடர்வதை நாம் பார்க்கிறோம். பலரது கவனம் தன் மீது குவிகையில், அதற்குத் தகுதியானவனாகக் காட்டிக் கொள்ளச் செய்யும் முயற்சியாகவும் அதைத் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையாகவும் மட்டுமின்றி வேறு யாராலும் துணிய இயலாத ஒன்றாகக் கூட இது வெளிப்படுவதைப் பார்க்கலாம்.

1958-வாக்கில் தமிழ்த் தலைமையின் உணர்ச்சிகரமான ‘வீரப் பேச்சு’ சிங்களர்களிடையே பீதியைக் கிளப்பிற்று. இலங்கைத் தமிழர்கள் தமிழக திராவிட இயக்கத் தலைவர்களின் பிரச்சார மேடைப் பேச்சு மாதிரிகளை அப்படியே இறக்குமதி செய்தது எதிர்விளைவை ஏற்படுத்தியது. இத்தகு தமிழரின் ரொமாண்டிக்கான தற்பெருமை சிங்களரிடையே வக்ரபீதியைக் கிளப்பி விட்டது என்கிறார் பிரமிள். தமிழருக்கு பெருமைப்பட்டுக் கொள்ள ஆயிரம் உண்டு. ஆனால் தமிழகத்திலும் சரி, ஈழத் தமிழரிடையேயும் சரி, இந்த வீராவேசம் அலுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தும் ஒன்றாகி விட்டது. இன்று ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல’ என்ற வாக்கியம் கேலிக்குரியது. இன்று தமிழகத்தில் மேல்தட்டு மக்களில் இருந்து அவர்களை பிரதி செய்யும் நடுத்தர மக்களின் குடும்ப மொழியாக ஆங்கிலமே இருக்கிறது. நம் கண்முன்னே மொழி இறந்து கொண்டிருக்கிறது. தமிழில் எழுதப்பட்ட இலட்சக்கணக்கான நூல்கள் இன்று சீந்த நாதியில்லாமல் கிடக்கின்றன. இங்கே இதற்கு மேலும் போனால் பல பக்கங்கள் தாண்டி விடும். இந்தக் கட்டுரை பிரமிள் படைப்புகள் வரிசையில் தொகுப்பு 4ல் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்தத் தொகுப்பையோ அல்லது அமேசானில் தனிப் புத்தகமாகக் கிடைக்கும் ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை நூலையோ வாங்கலாம். இணையத்தில் தேடிய போது இந்தப் புத்தகம் குறித்து எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் ஒரு பதிவு மட்டும் வாசிக்கக் கிடைத்தது. மேலும் பிரமிளும் தனது கட்டுரையொன்றில் “மாமல்லனின் தீவிர முயற்சி மூலமே, ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை நூல் வடிவம் பெற்றுள்ளது.” (க்ரியா பதிப்பகம் பதிப்பிக்க மறுத்து விட்டது) எனக் குறிப்பிடுகிறார்.

இந்தக் கட்டுரையை மேற்கொண்டு தொடர மூன்றாவது முறையாக வாசிக்க எடுத்து, எழுதும் நோக்கமே மறந்து போய் 200 பக்கங்கள் கடந்து விட்டேன். இதில் 1985ல் லயம் இதழில் வெளியான மௌனி நினைவுகள் என்ற கட்டுரை குறிப்பிடத்தக்க ஒன்று. ஓர் அஞ்சலிக் கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம் இது. முதலில் வைதீகத்துக்கு எதிராக இருந்த மௌனி, பிரமிள் இரண்டாம் முறை சந்திக்கையில் தீவிர வைதிகத்துக்கு மாறி விட்டிருக்கிறார். அவருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும். ஒருவருக்கு மனச்சிக்கல் உண்டு. இரண்டு மகன்களும் இறந்தது அவருள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்கிறார். மௌனியைத் தமிழிலக்கிய உலகில் பிரமிளைத் தவிர யாரும் அத்தனை அணுக்கமாக உணர்ந்தவர் இல்லை. ஒருமுறை வ.ராமசாமி மௌனியிடம் எதற்கு பூணூலைப் போட்டுக் கொண்டு திரிகிறார். எடுத்து ஆணியில் மாட்டு என்றதற்கு, மௌனி ‘I will rather cut my cock and put it there’ என்று சொல்லியிருக்கிறார். இது இன்று வரை இங்கே மௌனியின் ஜாதீய வெறிக்கு உதாரணமாகச் சொல்லப்பட்டு வருவது. ஆனால் பிரமிள் இங்கே கூட இதை வேறொரு கோணத்தில் பார்க்கிறார். பூணூலைத் துறப்பதில் அர்த்தமில்லை. உடலின் இச்சைகளுக்குக் கேந்திரமான காமத்தைத் துறப்பதே அர்த்தபூர்வமானது என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறார். பிரமிள் மௌனியின் வைதிகத்தைக் கூட அதற்கான காரணங்கள், அர்த்தங்களுடன் புரிந்து ஏற்றுக் கொள்கிறார். ஆனால் மௌனி தனது சிந்தனைகளை வெளிப்படுத்துமளவுக்கு தமிழ் வளர்ச்சியடையவில்லை என்று சொன்னதைத் தான் பிரமிளால் ஏற்க முடியவில்லை. இந்தக் கட்டுரையை இவ்வாறு முடிக்கிறார்:

“’எதற்காக நான் எழுத வேண்டும். அதனால் புண்ணியமா புருஷார்த்தமா? என்று கேட்ட மௌனிக்கு மிஞ்சியுள்ளது, அவரது கதைகள் தந்த புருஷார்த்தம் மட்டும் தான். அவரது எழுத்து, நான் ஏற்கெனவே அடிக்கடி கூறியுள்ளது போல், அவரது தனிமனிதக் குறைபாடுகளை முறியடித்த உன்னதங்களை மட்டுமே சமைத்துள்ளன. படிப்பவருக்கு இத்தகைய மனவெழுச்சியை ஏற்படுத்தும் அளவில், அது ஒரு புண்ணிய கைங்கர்யம் தான். இதுவே அவரது ஆத்மாவின் பயணத்தை உன்னத மார்க்கத்தில் சேர்க்கும் என நாம் நிச்சயிக்கலாம்.

முன்னரே குறிப்பிட்டபடி 1980-லிருந்து பிராமணியத்தின் மீது கடுமையான தாக்குதலைத் தொடுக்கிறார் பிரமிள். தமிழிசை எவ்வாறு பிராமணர்களால் கைக்கொள்ளப்பட்டு கர்நாடக இசையாக பரிணமித்தது, நாதசுரத்தையும் தவிலையும் மட்டும் இவர்கள் விலக்கி வைத்திருப்பது, இலக்கியத்திலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட மிக நுட்பமாய் இவர்கள் இயங்கும் விதம், படைப்பின் தரம் குறித்தன்றி இனம் பார்த்து அவர்களை உயர்த்திப் பிடிப்பது இதையெல்லாம் விரிவாய் ஒருபக்கம் சொல்லிச் செல்லும் அதே வேளையில், இடதுசாரிகளை மந்தைக் கூட்டம் என்று விமர்சிக்கிறார். ஆரம்பத்திலிருந்து பிரமிளின் எழுத்துகளை வாசித்தோமென்றால், அவருடைய நிலைப்பாடுகளில் எந்த மாறுதலையும் காண முடியாது. அறிதலின் நிலை நகர்வுகள் மட்டுமே நம் பார்வையில் தெரியும். வைதீகம், இடதுசாரியம் இரண்டுமே உயிர்ப்பான மனிதர்களைச் சமூகத்திலிருந்து திட்டமிட்டு அகற்றும் என்று எச்சரிக்கிறார்.

உதாரணத்திற்கு இந்திய மத மரபு என்ற கட்டுரையில் சமஸ்கிருதம் என்பது பிராமணரல்லாதோர் பலராலும் பயிலப்பட்டு வந்த மொழி என்பதற்கான வாதங்களை முன்வைக்கிறார். உபநிஷத்துகளைத் தந்தவர்கள் ‘ரிஷிகள்’ என்றும் ஒரு மரபை உருவாக்கி, இந்த ரிஷிகள் பிராமணர்கள் என்ற புளுகையும் ஸ்தாபித்துள்ளார்கள். சமஸ்கிருதத்தில் இதிகாசம் படைத்த வால்மீகி ஒரு திருடனும் கீழ்க்குலத்தவனுமாவான். இதேபோல கீழ்க்குலத்தில் பிறந்தவர் தான் காளிதாஸனும்.

சங்கரரின் அத்வைதம், உபநிஷத்துக்களின் பிரம்மம் ஆகியவற்றை வேதங்களின் இனவாதப் பௌராணிகச் சரித்திரத்துக்கு முடிச்சுப் போடும் இயக்கமே பிராமணீயமாகும். இந்த முடிச்சை வெகு சமத்காரமாக நிறைவேற்றியவர் சங்கரர். சாண்டோக்யத்தில், தனது ஜாதி என்னவென்று தெரியவில்லை என்று கூறியவனிடம் நீ உண்மை பேசினாய், ஆகவே நீ பிராமணன் என்று கூறும் சாண்டோக்யம், பொய் பேசுவோன் பிராமணனில்லை என்ற கருத்தைத் தர்க்கப்பூர்வமாக முன்வைக்கிறது. ஆனால் பிராமணீய மரபு, உபநிஷத்துக்களில் தனக்குப் பாதகமாகப் பொதிந்துள்ள மேற்கூறிய வகையான சகல உள்விபரங்களையும் மழுப்பி விடுகிறது

எவ்வித அடிப்படையும் இன்றி ‘நாஸ்திகர்’ என்று புத்தரை நிராகரித்த இந்துத்துவத்துக்கு சற்றும் குறையாதது ஐரோப்பாவின் இருண்ட காலங்களில் ஒருவரை ஒழித்துக் கட்டுவதற்காக அவரை சூனியக்காரர் (Witch) என்ற பட்டம் கட்டுவதும். ஹிட்லரின் ஆதிக்கத்தில் ஒருவரை ஒழிக்க வேண்டுமானால் அவரை யூதர் என்று அடையாளப்படுத்தினால் போதும். இன்று இடதுசாரிகள் செய்வதும் இதைத் தான். இடதுசாரியாக இரு. அப்படியில்லையெனில் நீ செய்யும் எதுவும் பாசிசத்துக்குத் தான் அவியளிக்கும். நீ ஒரு மனித விரோதி, மக்கள் விரோதி என்று தூற்ற ஆரம்பித்து விடுவார்கள். பிரமிளுக்கு நிகழ்ந்ததும் அது தான்.

– தொடரும்.