மயங்குகிறாள் ஒரு மாது – சி.சரவணகார்த்திகேயன்

0 comment

கடந்த காலங்களில் ரமணிசந்திரன் எழுத்துகள் பற்றி நான் சமூக வலைதளங்களில் விமர்சன‌க் கருத்துகள் சொல்லி கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து இருக்கிறேன். அவரது வாசக பலம் அப்படி. கிட்டத்தட்ட ஒரு தற்கொலைப் படை மாதிரியான விசுவாசமான வாசகிகள் திரள். நான் முன்வைத்த கருத்துகள் பெரும்பான்மை பகடியானவை என்பதால் இது பற்றிய என் எண்ணங்களைக் கொஞ்சம் சீரியஸாக எழுதிப் பார்க்கலாம் எனத் தோன்றியது. அவ்வகையில் இது ஒரு சுயபரிசீலனை.

ரமணிசந்திரன் 1970லிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார். படைப்புலகில் அவருக்கு இது பொன்விழா ஆண்டு. அதற்கு முதலில் அவருக்கு வாழ்த்துகள். 2014ல் அவள் விகடன் பேட்டியில் அது வரை 157 நாவல்கள் எழுதியிருப்பதாகச் சொல்கிறார். ஸ்டாக் உண்டோ இல்லையோ என் அத்தனை நூல்களையும் பட்டியலிட்டிருக்கும் ஒரு தளம் காமன்ஃபோக்ஸ்.இன். அவர்கள் கணக்குப்படி இன்றைய தேதியில் ரமணிசந்திரன் 183 நாவல்கள் எழுதி இருக்கிறார். ஒருவேளை விடுபாடுகள் இருந்தாலும் அதிகபட்சம் 200 நாவல்கள் வரை போயிருக்கலாம் என்பதாக‌க் கணிக்கிறேன். கணக்குப் பார்த்தால் சராசரியாக ஆண்டுக்கு நான்கைந்து நாவல்கள் வருகின்றன. நல்ல எண்ணிக்கை தான்.

விபத்தாகவே எழுத்துத் துறைக்குள் வந்திருக்கிறார். ராணி, தினத்தந்தி என ஊடக உறவினர்கள் சூழ்பின்புலமானது அதற்கு முக்கியத் தூண்டுதலாய் இருந்திருக்கிறது.

ரமணிசந்திரன்

ரமணிசந்திரனில் ரமணி என்பது மட்டும் அவரது பெயர்; சந்திரன் அவர் கணவரின் கொடை. இந்தப் பெண் எழுத்தாளர்கள் பெரும்பாலும் ஏன் தம் கணவர் பெயரையும் தம் பெயருடன் இணைத்துக் கொள்கிறார்கள் என யோசித்திருக்கிறேன். இரண்டு காரணங்கள் தோன்றின. முதலாவது அதுவே ஒரு குறியீடு. தான் குடும்பம் எனும் வட்டத்துள் நின்று குடும்பப் பாங்கான கதைகளை மட்டுமே எழுதுவேன் என்ற மறைமுக அறிவிப்பு அதில் இருக்கிறது. அடுத்து அது கணவருக்கு வழங்கப்படும் நன்றி அல்லது லஞ்சம். தன்னை எழுத அனுமதிப்பதற்கும், அதற்கு வேண்டிய உதவிகள் செய்வதற்கும் பதிலீடாக அவரது பெயருக்குத் தரும் ஒரு கௌரவம்.

ரமணிசந்திரனை நான் என் ஒன்பதாம் வகுப்பு கோடை விடுமுறையில் வாசித்தேன். அப்போது நான் ராஜேஷ்குமார் ரசிகன் (அன்று அவரது பாணியில் ஒரு சிறுநாவலும் எழுதியிருந்தேன்). பொன்னியின் செல்வன் வாசித்திருந்தேன். குமுதம், ஆனந்த விகடன் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். கோவையில் பிஎஸ்என்எல்லில் பணிபுரிந்து கொண்டிருந்த என்னுடைய‌ அத்தை கிருஷ்ணவேணி தன் அலுவலக நூலகத்திலிருந்து தினம் இரண்டு நூல்கள் எனக்கு எடுத்து வருவார். இப்போது binge watching என்கிறார்களே, அது போல் binge reading நாட்கள். அப்படி அறிமுகமானவர்கள் தாம் சாண்டில்யன், பாலகுமாரன், லக்ஷ்மி, அநுத்தமா, ரமணிசந்திரன் முதலானோர்.

அப்படி சுமார் 20 ரமணிசந்திரன் நாவல்கள் வாசித்திருப்பேன். ஐந்தாறு லக்ஷ்மி நாவல்கள். ஓரிரு அநுத்தமா நாவல்கள். அப்போதே ரமணிசந்திரன் நாவல் ஏதும் பெரிதாய் ஈர்க்கவில்லை. அவருக்கு முற்காலத்தவர்களான லக்ஷ்மி மற்றும் அநுத்தமாவின் எழுத்துகள் மேலானதாகத் தோன்றின. (குறிப்பாக லக்ஷ்மியின் மிதிலா விலாஸின் காட்சிகள் இப்போதும் நினைவில் இருக்கின்றன.) இந்தப் பெண் எழுத்தாளர்கள் எல்லோரையும் விட பாலகுமாரன் மனதுக்கு நெருக்கமானவராக இருந்தார். அவரே பெண்களையும் அவர்த‌ம் மனதையும் நேர்மையாகக் காட்டியதாக எண்ணினேன். ரமணிசந்திரனின் பாத்திர வார்ப்புகள் செயற்கையாக, யதார்த்தத்தில் இருந்து விலகி, அந்தரத்தில் நின்றதாகத் தோன்றின. அது ஒரு விலகலை அளித்தது. (அப்போது எனக்கு பதின்வயது என்பதையும் இங்கே அடிக்கோடிட விரும்புகிறேன்.)

அப்புறம் எது இல்லையென்றாலும் நடை ஒரு வெகுஜனப் புனைவுக்கு மிக முக்கியம் எனக் கருதுகிறேன். சுஜாதாவின் பல தொடர்கதைகள் உள்ளடக்கம் சற்று முன்பின் இருந்தாலும் தப்பித்தது அவரது அபாரமான நடையால் தான். பாலகுமாரன் குமுதம் இதழில் தொடராக எழுதிய ‘இது தான் காதல் என்பதா’ ஒரு கதைக்குரிய அம்சங்கள் கொண்டிருக்கவில்லை என்றாலும் பிழைத்தது நடையால். ரமணிசந்திரனுடையது சற்றே அலுப்பூட்டும் நடை. அதுவும் அந்த மனவிலக்கத்துக்கு முக்கியக் காரணம்.

அது தான் கடைசி. அதிலிருந்து இன்று சுத்தமாய் இருபதாண்டுகள் ஓடி விட்டன. பிறகெப்போதும் ரமணிசந்திரனை வாங்கியதோ, வாசித்ததோ, வாய்ப்பிருந்தும் நூலகத்தில் எடுத்ததோ இல்லை. இது தான் ரமணிசந்திரனுக்கும் எனக்குமான உறவு.

*

இவ்விடத்தில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் வெகுஜன எழுத்துக்கு (அல்லது சினிமா உள்ளிட்ட எந்த வெகுஜனப் படைப்பு வடிவிற்கும்) எதிரானவன் அல்லன். இவ்விஷயத்தில் ஜெயமோகனிலிருந்து மிக வேறுபடுகிறேன்.

“வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. உண்மையில் அது இலக்கியத்தை மறைக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது. வணிக எழுத்தே இலக்கியம் என்று சொல்லப்பட்டு நம்பப்படுகையில் அடுத்தக்கட்ட இலக்கியத்துக்கான தேடலே இல்லாமல் ஆகிறது. கணிசமான கேளிக்கை வாசகர்களின் மனநிலை இது. அவர்களுக்கு இலக்கியம் தற்செயலாக அறிமுகமானால்தான் உண்டு” என்பது தான் ஜெயமோகனின் கருத்து.

வெகுஜன எழுத்து வாசிப்பானது கொஞ்சம் சதவிகித வாசகர்களையேனும் நிச்சயம் சீரியஸ் இலக்கியத்தின் பக்கம் நகர்த்தும் என நான் நம்புகிறேன் என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஜெயமோகன் சொல்வது உண்மையே என்றாலும் அதற்காக வெகுஜன எழுத்தைப் புறந்தள்ள முடியாது. அது ஒரு ரசனை நுகர்வுப் பண்டம் என்கிற அடிப்படையில் சமூகத்தில் ஜீவித்திருக்க வேண்டியது மிக அவசியம். சுதந்திர, ஜனநாயக தேசத்தில் மக்கள் தமக்குப் பிடித்த விஷயத்தைப் பெற எந்தத் தடையும் இருக்கக் கூடாது – அந்த விஷயம் உயர்வு அல்லது தாழ்வு என்கிற மதிப்பீடுகள் எல்லாம் தாண்டி. அதனால் வெகுஜன எழுத்தின் இருப்பை ஆதரிக்கிறேன். அதன் செழிப்பை வரவேற்கிறேன். அவ்வகையில் ரமணிசந்திரன் மாதிரி எழுத்துக்களும் சமூகத்தில் நிச்சயம் இருக்கலாம். அதை வாசகர்கள் போஷிக்கலாம். தவறே இல்லை.

இத்தனை வாசிப்பிற்குப் பின்பும் சுஜாதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகிய வெகுஜன‌ எழுத்தாளர்களை இன்னமும் விரும்பி வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன். சமீப ஆண்டுகளில் சிறந்த வெகுஜன எழுத்தாளராக உருவாகியுள்ள ஷான் வரை இந்த‌ எழுத்துக்களின் தேவை அவசியம் என‌ அழுத்திச் சொல்கிறேன்.

ஆக, நான் என் வாசிப்புத் திமிரைக் காட்டும் அற்ப எண்ணத்தில், வெகுஜன எழுத்து கேவலம் என்றெண்ணி ரமணிசந்திரன் எழுத்துகள் மீதான என் விமர்சனத்தை வைக்கவில்லை. பிறகு என்ன தான் பிரச்சனை? ரமணிசந்திரன் அவரது எழுத்தின் இயல்பை உணர்ந்த, அதை விரும்பும் வட்டத்துக்காக மட்டும் தானே எழுதுகிறார்? இரு தரப்பும் பரஸ்பரம் மகிழ்ச்சியாக இருக்கிறது, இதில் உனக்கு என்ன வந்தது என்பது வழமையான பழமையான கேள்விக‌ள். அக்கேள்விகள் நியாயமானவை தாம்.

ரமணிசந்திரன் எழுத்துகளில் எந்தத் தரிசனமும், தத்துவார்த்தமும் கிடையாது – எந்தவொரு வெகுஜன எழுத்தையும் விட அவரது நாவல்களில் அது சுத்தமாக இல்லை என்றே சொல்லலாம். அவரது எழுத்திலிருந்து வாசகன் பெற்றுக் கொள்ள ஏதுமில்லை. ஆனால் அவரே அவரது எல்லையைத் தெளிவாக‌ வகுத்துக் கொண்டு விட்டதால் இதை எதையும் நான் அவரது எழுத்துகளில் எதிர்பார்க்கவும் இல்லை.

பிறகு ஏன் ரமணிசந்திரன் எழுத்துகளை விமர்சிக்கிறேன்? அவரது எழுத்தில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. அதைச் சுட்டுவதே என் விமர்சனங்களின் மைய நோக்கு. அவர் ஒரே ஒரு டெம்ப்ளேட்டை கடந்த ஐம்பது ஆண்டுகளாக எடுத்தாண்டு கொண்டிருகிறார். தலைப்பு, அட்டையை அகற்றி விட்டால் அவரது நாவல்கள் எல்லாமே ஒன்று தான். அவரது சுமார் இருபது நாவல்களை வாசித்திருப்பதாகச் சொன்னேன். அவற்றில் ஒன்றின் தலைப்பு கூட இன்று நினைவில்லை. ஒரே விஷயத்தை வெவ்வேறு கதாபாத்திரங்களையும், மாற்றப்பட்ட புன்புலங்களையும் வைத்து ஆண்டுக்கணக்கில் எழுதித் தள்ளிக் கொண்டிருப்பதால் யாருக்கு என்ன லாபம்? எழுத்தாளனும் ஓர் அங்குலம் கூட நகரவில்லை; வாசகரையும் கொஞ்சமும் முன்னேற விடவில்லை என்று தானே அர்த்தம்! எழுத்தாளரோ, வாசகரோ இயந்திரம் அல்ல. செக்கு மாடு அல்ல. அவர்கள் மெதுவாகவேனும் நகர வேண்டும். அது அரை நூற்றாண்டாக நடக்கவில்லை என்பது ஒருவித‌ சலிப்பை அளிக்கிறது.

எனக்குப் பிடித்த வெகுஜன எழுத்தாளர்களாய் நான் குறிப்பிட்ட மூவரிலும் இந்தப் பிரச்சனை இல்லவே இல்லை என்பதையும் இவ்விடத்தில் சுட்ட விரும்புகிறேன்.

அடுத்து அவரது எழுத்தின் உள்ளடக்கத்திற்கு வருவோம். அது வாழ்க்கையைப் பேசுவதில்லை. யதார்த்தத்தைக் காட்டுவதில்லை. அது காட்டுவதெல்லாம் ஒரு கற்பனை உலகை. ஒரு பகற்கனவை. அதில் ஓர் ஆபத்து இருக்கிறது. அந்த எழுத்து வாசகரை ஒரு கற்பனாவாத உலகிற்கு இழுத்துச் சென்று, அதை உண்மை என நம்ப வைக்கிறது, அது போல் வேண்டும் என எதிர்பார்க்க வைக்கிறது. அது ஒரு நப்பாசை. நப்பாசை என்றே தெரியாத நப்பாசை. (ஒருவகையில் ரமணிசந்திரன் நாவல்களின் ஒளி ஊடக வடிவம் தான் திருமுருகனின் தொலைக்காட்சி சீரியல்கள் எனலாம்.)

அந்தரத்தில் மிதக்கும் அழகிய கற்பனை. பூமியில் கால் பதித்த நிஜ வாழ்வில் அது இல்லை என்றாகும் போது கடும் ஏமாற்றத்தையும் உளைச்சலையும் நிஜ வாழ்வில் வாசகருக்கு அளிக்கிறது. சில சமயம் அதன் பாதிப்பு நிஜ வாழ்வில் பிரதிபலிக்கிறது.

இந்த‌ விஷயம் வணிகரீதியாகத் திட்டமிட்டே செய்யப்படுகிறது என்றே நம்புகிறேன். எல்லா பெண்கள் மாத‌ நாவல்களின் அட்டையிலும் ஓர் அழகான‌ பெண்ணின் முகம் தான் ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கும் அல்லது ஏதேனும் ஒரு நடிகையின் நிழற்படத்தைப் போட்டிருப்பார்கள். ஏன்? அது அந்த நாவலை வாசிக்கும் ஒவ்வொரு பெண்ணையும் அந்நாவலின் நாயகியாக உணரச் செய்யும் உத்தி. அந்தக் கனவுலகில் தன்னைப் பொருத்திக் கொள்ள புத்தக அட்டையிலிருந்தே பொறி வைக்கிறார்கள். உடைத்துச் சொல்வதாக இருந்தால் உளவியல்பூர்வமாக‌ ஏமாற்றுகிறார்கள். அது வாசகருக்கு இழைக்கப்படும் துரோகம் என்றே சொல்வேன். போதை மருந்து போல்.

ராஜேஷ் குமார் நாவல் வாசித்து அதைப் போல் கொலை செய்வேன் என்று யாரும் கிளம்பி இருக்கிறார்களா? அது ஒரு சமூகத் தொந்தரவற்ற வெகுஜன எழுத்து. மாறாக ரமணிசந்திரன் வாசகிகள் அவரது நாவலை வாசித்து விட்டு அம்மாதிரி வாழ்வுக்கு, அம்மாதிரி வாழ்க்கைத் துணைக்கு ஆசைப்படுகிறார்கள். உண்மையில் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தாலுமே தன் கணவன் ரமணிசந்திரன் நாயகனின் இந்தக் குணம் இல்லையே, அந்நாவலின் ஹீரோ மாதிரி இச்சூழலில் நடந்து கொள்ளவில்லையே என எண்ணிக் குமைகிறார்கள். அதைத்தான் அது விளைவிக்கும் ஆபத்து என்கிறேன்.

இன்னொரு விஷயம் அவரது நாவல் நாயகிகளின் லட்சியவாதத் தன்மை. அவர்கள் எத்தனை கஷ்டத்திலும் நேர்மையாக இருப்பது போல் இருக்கும். அதுவும் வாசிக்கும் பெண்களுக்கு ஒரு மயக்கத்தை ஊட்டுகிறது. தான் நிஜத்தில் அப்படி இல்லையே என தன்னிரக்கம் எழுகிறது. அதற்கு அடுத்தபடியாக யதார்த்தத்தை உதறி விட்டு தானே அந்நாயகி என்று கற்பனை செய்து கொள்ள வைக்கிறது. அது அவர்களுக்கு ஒரு தற்காலிக மகிழ்ச்சியையும் குற்றவுணர்ச்சிகளிலிருந்து விடுதலையையும் அளிக்கிறது. அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. நிஜத்தில் ஏதும் மாற்றத்தைச் செய்ய எத்தனிப்பதில்லை. இந்த உளவியல் தான் அவரது நாவல்களின் பெருவெற்றி!

சில பெண்கள் – ரமணிசந்திரனின் தீவிர வாசகிகள் – ஆண்களுக்கு எப்படி சரோஜா தேவி புத்தகங்களோ பெண்களுக்கு அதே போல் தான் ரமணிசந்திரன் நாவல்கள் என சமூக வலைதளங்களில் எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். (எழுத்தாளர் சவிதா வெங்கடகிருஷ்ணன் நேற்று கூட ரமணிச்சந்திரன் பற்றிய குறிப்பொன்றில் இதைச் சொல்லி இருந்தார்.) அதாவது நல்ல அர்த்தத்தில். பெண்கள் உடற்காமத்தை விட மென்மையாக மனதை வருடும் விஷயங்களின் மூலமாகத் தான் பெரும் திருப்தியை எய்துவார்கள், அதை அவர் எழுத்துக்கள் தருகின்றன என்ற பாஸிடிவ் அர்த்தத்தில்.

அவரது வாசிப்போ, வெளியுலக அறிமுகமோ அத்தனை விரிவானதல்ல என அவரே பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். அதிகபட்சம் ஜெர்ஃப்ரி ஆர்ச்சர். ஆக, ஒரு house-wifeனால் லட்சக்கணக்கான house-wifeகளுக்காக எழுதப்பட்டவை ரமணிசந்திரன் நாவல்கள். இந்தியக் கலாசாரத்துக்குள் நின்று எழுதப்பட்ட Mills & Boon இப்புதினங்கள்.

நான் ரமணிசந்திரன் தீவிர வாசகர்களைப் புரிந்து கொள்கிறேன். ரமணிசந்திரனைக் குறை சொல்வது அவர்களின் அறிவின் உயரத்தை நேரடியாகத் தாக்குவதாகவே புரிந்து கொள்கிறார்கள் என‌. துரதிர்ஷ்டவசமாக அது உண்மையும் கூடத்தான்.

அவர்களுக்கு என் அன்பான வேண்டுகோள், கண்டும் காணாமல் கடப்பது தான் இதைக் கையாளும் எளிய வழி. நவீன இலக்கியம் என்பது விமர்சனங்களால் செழுமையுறுவது. அதனால் இந்தத் தரப்பிலிருந்து கடுமையான கருத்துகள் வந்து கொண்டே தான் இருக்கும். நீங்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் நவீன இலக்கிய ஆட்களால் அவ்வப்போதேனும் பொருட்படுத்தி விமர்சிக்கப்படும் இடத்தில் இன்றும் ரமணிசந்திரன் இருக்கிறார் என்பது தான்.

காரணம் அவரது வாசகப் பரப்பு மற்றும் விற்பனை வீச்சு. நவீனப் பெருங்கவி அடையாளம் கூடத் காணப்படாமல் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு காவல் நிலையத்தில் உட்கார்ந்திருக்கும் போது எந்த ஓர் ஆழமும் இல்லாத எழுத்து லட்சக்கணக்கில் விற்று உச்ச நட்சத்திரமாகக் கருதப்படுவது எரிச்சலை ஊட்டும் தான். உலகம் எங்கிலும் உள்ள ஓர் சிற்றிலக்கிய வட்ட மனநிலை தான் இது.

அம்மாதிரியான நவீன வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களை ரமணிசந்திரன் தீவிர விசிறிகள் பாவம் பார்த்து மன்னித்து நகரலாம். மாறாக அவர்கள் விமர்சனத்தை மேட்டிமைத்தனம், மண்டைக் கொழுப்பு என எண்ணினால் அது சிறுபிள்ளைத்தனம்.

*

எனில் என்ன அர்த்தம்? ரமணிசந்திரன் நாவல்களை வாசிக்கவே கூடாதா? அப்படி இல்லை. பதின்மங்களில் ரசித்துக் கூட‌ வாசிக்கலாம். கற்பனை செய்யலாம். அது அறியாத வயது. பிறகு அதெல்லாம் ஒரு பகற்கனவு எனப் புரிந்து விட வேண்டும். அதன் பிறகும் வாசிக்கலாம். ஆனால் அது ஒரு ஃபேன்டஸி என்ற பிரக்ஞையுடன். தன் சொந்த வாழ்வைப் பாதிக்காத அளவில். ஆனால் அதற்கு மனமுதிர்ச்சி வேண்டும். அது பெரும்பான்மை இந்தியப் பெண்களிடம் கிடையாது என்பதால் இதெல்லாம் சிலருக்கே சாத்தியம். மற்றவர்கள் கடைசி வரை ரமணிசந்திரன் நாயகர்களை எண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

அவருடையவை எளிய மனங்களுக்கான எழுத்து. கெட்ட ஆண்களைக் காதல் மூலம் திருத்தி தன்னை உருகக் காதலிக்க வைக்கலாம் என்ற நாடகீய நம்பிக்கைகளை விரும்புபவர்களுக்கானது. அவரை ரசிக்க ஏராள அப்பாவியாய் இருக்க வேண்டும். தமிழகத்தில் இத்தனை லட்சம் அப்பாவிகள் இருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

ரமணிசந்திரனுடைய நாவல்கள் எவரது மனதையும் புண்படுத்தாத ரம்மியமானவை. அவரது கதைகளில் வன்முறை இராது, பிரிவுகள் இராது, நோய்கள் கிடையாது, கெட்டவர்கள் கிடையாது, மரணம் இராது, சோகமே இல்லாத ஒரு கற்பனாலோகம் அவருடையது. இதை அவர் தெரிந்தே செய்கிறார். “என் கதைகள் கற்பனைகள் மட்டுமே. நிஜ வாழ்க்கையை என் எழுத்துக்குள் நான் கொண்டு வருவதே இல்லை. இன்றைக்குச் சண்டை போட்டவர்கள் இன்னும் சில வருடங்களில் சமாதானமாகி விடலாம்; அவர்கள் சண்டை போட்ட காலத்தில் அவர்கள் வாழ்க்கையைக் கதையாக எழுதி, அதை அவர்கள் சமாதானம் ஆன பின்பு படித்தால் எவ்வளவு வலிக்கும்?” என அவரே வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். அவரது நோக்கம் என்றுமே உண்மை வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதல்ல. இது மிக எலிமெண்டரியான பார்வை. ஆனால் பாவம், அவரது வாசகிகளுக்குத் தான் அந்தப் புரிதல் இல்லை.

இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. ரமணிசந்திரனின் வணிக வெற்றியைப் பார்த்து அவரை நகல் செய்து சுமார் நூறு பெண் எழுத்தாளர்களேனும் இன்று மாதம் ஒரு நாவல் என எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ரமணிசந்திரன் போலவே அவர்களும் ஏகமாய் விற்கிறார்கள். (அவர்களில் பலருக்கு அது ஒரு தற்சார்பை அளிக்கிறது என்ற அளவில் அதை வரவேற்கிறேன்.) எல்லோருமே அதே டெம்ப்ளேட். அதே உணர்ச்சிகள். அதே கற்பனாலோகம். அதே கண்கள் சொருகிய ஏகாந்த நிலை வாசிப்பு. தொடக்கப் புள்ளியான ரமணிசந்திரனே சக்கை என்று சொல்லி விட்ட பிறகு இதெல்லாம் ஏன் எழுதவும் வாசிக்கவும் படுகின்றன என ஆதங்கமாய் இருக்கிறது.

இதை எழுதுபவர்களும், வாசிப்பவர்களும் கொஞ்சம் முயன்றால் ஒரு வேளை இன்னும் வேறு மாதிரி எழுத்துக்கு நகரலாம். ஆனால் செய்யாமல் தேனில் விழுந்த வண்டு போல் இதிலேயே கிடக்கிறார்கள். எத்தனை பெரும் மனித வள இழப்பு!

இந்தத் திசையில் ரமணிசந்திரன் சொல்லியிருக்கும் விஷயம் இது: “என்னைக் கேட்டா எல்லாப் பெண்களுமே எழுத்தாளர்கள்னுதான் சொல்வேன். பெண்களுக்கே கற்பனைத்திறன் ரொம்ப அதிகம். குழந்தைகளை வளர்க்கிறப்பவே தினமும் ஏதாவது கதை சொல்லிச் சொல்லித்தானே வளர்க்கிறோம். கதை சொல்லத் தெரிஞ்ச நம்மால், கதை எழுத முடியாதா என்ன?”. எழுத்தை இவ்வளவு அலட்சியமாக ஒரு வெகுஜனப் படைப்பாளி கூட அணுகக்கூடாது. அதற்கென்று ஒரு மரியாதையும் உழைப்பும் இருக்கிறது. பக்கத்தை நிரப்புவதும் பணம் சம்பாதிப்பதும் மட்டும் படைப்பு அல்ல.

ரமணிசந்திரன் மீது (அல்லது அவரது நூற்றுக்கணக்கான நகல் எழுத்தாளர்கள் மீது) எனக்கு எந்த தனிப்பட்ட காழ்ப்போ பொறாமையோ அல்ல. ஆனால் நவீன இலக்கிய வாசகனாகவும், சமூகத்தின் மீதும் சமூகத்தில் சரிபாதியான பெண்கள்மீதும் அக்கறை கொண்டவனாகவும் சில கருத்துக்களைப் பதிவு செய்வதே என் மேலான விருப்பு.