யெஹூதா அமிகாய் கவிதைகள்

by சசிகலா பாபு
1 comment

இஸ்ரேலைச் சேர்ந்த யெஹூதா அமிகாய் (Yehuda Amichai: மே 3, 1924 – செப்டம்பர்  22, 2000) கவிதையுலகில் தனித்துவமான புகழ்பெற்றவர். ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட இவருடைய கவிதைகள் 40 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

1924இல் ஜெர்மனியில் பிறந்தார் அமிகாய். அவருக்கு பனிரெண்டு வயதானபோது ஹிட்லரின் கொடூர ஆட்சிக்கு அஞ்சி அமிகாயின் குடும்பம் ஜெர்மனியை விட்டு வெளியேறி பாலஸ்தீனத்தில் குடியேறியது. அமிகாயின் முக்கிய மொழியாக ஜெர்மன் இருந்தபோதும் பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்வதற்கு முன்னதாகவே அவர் ஹீப்ரூ மொழியையும் சரளமாக கற்றுக்கொண்டார். 1948ஆம் ஆண்டில் நடைபெற்ற அரேபிய – இஸ்ரேலியப் போரில் இஸ்ரேல் படைசார்பாக அமிகாய் போரிடவும் செய்தார். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமிகாய் ஹீப்ரூ பல்கலைக்கழகம் சென்றார். ஹீப்ரு பல்கலைகழகத்திலும் பின்னர் அமெரிக்க கல்வி நிறுவனங்களான நியூயார்க் பல்கலைக்கழகம், கலிபோர்னியா – பெர்கிலி பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

மனிதனின் அன்றாட வாழ்வின் துயரங்களில் துவங்கி, வாழ்வும் இறப்பும் தொடர்பான தத்துவார்த்தமான கவிதைகள் வரை இவர் படைத்துள்ளார். இவரது கவிதைகள் மென்மையான முரண்நகைகளும், உண்மைத்தன்மைகளும், பிரமிக்க வைக்கும் படிமங்களையும் கொண்டிருந்தன. ஒரு தனிமனிதனின் வாழ்வில் நிகழும் காதல் போன்ற தனிப்பட்ட சம்பவங்கள் முதல் போர், அகதி வாழ்வு, சொந்த நிலத்தைப் பிரிந்து வாடுதல் என அனைத்து மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் தம் கவிதைகளின் மூலமாக அனைவரின் அனுபவங்களுமாக மாற்றிவிடக்கூடிய ரசவாதியாகத்தான் அவர் விளங்கினார்.

கவிதைகளின் மூலம் கவிமொழியிலேயே புரட்சிகரமானதொரு மாற்றத்தை உருவாக்கியதற்காக இஸ்ரேலின் உயர்ந்த பரிசான இஸ்ரேலின் கவிதைப் பரிசையும் அவர் வென்றிருக்கிறார். இவரது பெயர் நோபல் பரிசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

1. என் உடல் முழுதும் மயிர் அடர்ந்துவிட்டது

என் உடல் முழுதும் மயிர் அடர்ந்துவிட்டது.
எனதிந்த ரோமங்களைக் கண்டு என்னை வேட்டையாடி விடுவார்களோ என அஞ்சுகிறேன்.
 
எனது பல வண்ணச்சட்டையில் அன்பிற்கான அர்த்தமேதுமில்லை-
இரயில்நிலையமொன்றின் வான்வழிப் புகைப்படம் போலவே அது காட்சியளிக்கிறது.
 
இரவுகளில் போர்வைக்குள்ளே என்னுடல் திறந்துள்ளது, விழித்துள்ளது.
சுட்டுக்கொல்லப்படப் போகிறவனின் கண்கட்டுத்துணியின் உள்ளே விழித்திருக்கும் விழிகள் போலே,
 
அமைதியற்று அலைந்து திரிகிறேன்,
வாழ்வு மீதான பசியோடே இறக்கப் போகிறேன்.
 
எனினும் நான் அமைதிகொள்ளவே விரும்புகிறேன்,
அணைத்து நகரங்களும் அழிந்தபிறகு மீந்திருக்கும் மணல்மேடுகள் போலே,
சாந்தம்கொள்ளவே விரும்புகிறேன், நிறைந்துவிட்ட கல்லறைத் தோட்டம் போலே.

2. ஏற்றுக்கொள்ளாதே

மிகுந்த காலந்தாழ்த்தி வருகை தரும் இந்த மழையை ஏற்றுக்கொள்ளாதே.
அரை உயிராக இருப்பதே மேல்.
உன் வலியை ஒரு பாலைவனம் போல வடித்துக்கொள்.
சொல்ல வேண்டியவற்றை சொல்லியாகிவிட்டது எனச் சொல்.
மேற்கு நோக்கி உன் பார்வையைத் திருப்பாதே.
சரணடைய மறு.
இந்த வருடமும் நீண்ட கோடைகாலத்தை தனிமையில் கழித்திட முயன்றிடு.
உலர்ந்துகிடக்கும் உன் ரொட்டியை உண்.
கண்ணீரை விலக்கிடு.
அனுபவங்களிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளாதே.
என் இளைஞனே, உதாரணமாக,
இரவுகளில் நேரம் கடந்து நான் வீடு திரும்புவது,
கடந்தகால மழையில்தான் எழுதப்பட்டது.
இப்போதும் எந்த மாற்றமும் உண்டாகிவிடவில்லை.
உன் சம்பவங்களை என் சம்பவங்களாகக் காண்.
அனைத்துமே முன்னர்போல் ஆகிவிடும்.
ஆப்ரகாம் மீண்டும் ஆப்ரகாம் ஆகிவிடுவான்.
சாரா சாரை ஆகிவிடுவாள்.

3. அம்மாவிற்கு

பழைய காற்றாலையைப்போலே
வானைநோக்கிக் கூச்சலிட எப்போதும் இருகைகள் உயர்ந்திருக்கும்
இரு கைகள் அடுக்குரொட்டிகள் செய்ய தாழ்ந்திருக்கும்.
 
அவர் விழிகள் தூய்மையாக மினுங்கும்
பஸ்கா பண்டிகையைப் போலே.
 
இரவுவேளைகளில் அனைத்துக் கடிதங்களையும்
புகைப்படங்களையும் அருகருகே பரப்பிவைப்பார்,
அவற்றோடு சேர்த்து
இறைவனின் விரல் நீளத்தையும்
அளப்பார்.
 
அவரது விசும்பல்களின் இடையே இருக்கும்
ஆழமான பள்ளத்தாக்குகளில் நடந்துசெல்ல விரும்புகிறேன்.
 
அவரது அமைதியின் வெப்ப அலைகளில்
நின்றிட விரும்புகிறேன்.
 
அவரது வலிகளின் கரடுமுரடனான மரத்தூர்களின்மீது
சாய்ந்துகொள்ள விரும்புகிறேன்.
 
ஹேகார் இஷ்மாயிலை கிடத்தியதைப்போலே
அவர் என்னையும்
ஏதோவொரு புதரின் கீழே கிடத்தினார்.
 
இதன்மூலம்,
அவர் போரில் என் மரணத்தைக் காணாதிருக்க முடியும்,
ஏதோவொரு புதரின் கீழே,
ஏதோவொரு போரில்.

4. இவ்வுலகின் ஒருபாதி மக்கள்

இவ்வுலகின் ஒருபாதி மக்கள்
மறுபாதி மக்களை நேசிக்கின்றனர்,
ஒருபாதி மக்கள்
மறுபாதி மக்களை வெறுக்கின்றனர்.
இந்தப் பாதியாலும் அந்தப் பாதியாலும்
மழையின் சுழற்சிபோலே
நான் அலைந்துகொண்டும், முடிவேயில்லாது மாறிக்கொண்டும்
இருக்கவேண்டுமா?
பாறைகளினிடையே உறங்கி,
ஆலிவ் மரத்தூர்கள் போலே கரடுமுரடாக வளர்ந்து,
நிலவு என்னை நோக்கிக் குரைப்பதைக் கேட்டு,
துயரங்களால் என் காதலை உருமாற்றி,
இரயில் தண்டவாளங்களிடையே அஞ்சி நடுங்கும் புற்களைப் போலே முளைத்து,
துன்னெலி போல் நிலத்தின் கீழே வாழ்ந்து,
கிளைகளில் அல்லாமல் வேர்களிலேயே தங்கி,
தேவதைகளின் கன்னத்தோடு என் கன்னத்தை இழைக்காமல்,
முதல் குகைக்குள் காதல்புரிந்து,
பூமியைத் தாங்கிநிற்கும் சூரியக்கதிர்களின் கவிகையின் கீழே
என் மனைவியை மணந்து,
எனது இறுதிமூச்சு வரை, எனது இறுதி வார்த்தைகள் வரை,
எதுவுமே புரியாமல்,
என் இறப்பை இயற்றிக்காட்டி,
எனது வீட்டின் உச்சியில் கொடிக்கம்பங்களையும்
வீட்டின் கீழே குண்டுகள்தாக்கா புகலிடத்தையும் அமைக்க வேண்டுமா?
திரும்பி வருவதற்காய் மட்டுமே அமைக்கப்பட்டிருந்த 
சாலைகளில் நடந்து,
அச்சுறுத்தும் அனைத்து இரயில்நிலையங்கள் வழியாகவும் கடந்து 
பூனை, கழி, தீ, நீர், கசாப்பு கடைக்காரன்,
குழந்தைக்கும் இறப்பின் தேவதைக்கும் இடையே வாழ வேண்டுமா?
 
ஒருபாதி மக்கள் நேசிக்கின்றனர்,
ஒருபாதி மக்கள் வெறுக்கின்றனர்.
வாகாய் பொருந்திப் போகும் அந்தப் பாதிகளின் இடையே
என் இடம் எது?
அவற்றின் எந்தப் பிளவின் வழியே
எனது வெண்ணிற இல்லங்களின் கனவை,
மணலில் வெற்றுக்கால்களுடன் ஓடுபவர்களை,
அல்லது மணற்மேடுகளின் அருகே
ஒரு பெண்ணின் கைக்குட்டையின் அசைவையேனும் காண்பேன்!

5. என் நாசிக்குள் பெட்ரோல் மணம்

என் நாசிக்குள் பெட்ரோல் மணம்,
எழும் உன் ஆன்மாவை என் உள்ளங்கையில் ஏந்துகிறேன்
இளம்பருத்தியாலான கிண்ணத்தில் உள்ள எலுமிச்சையைப் போலே
ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும்
என் தந்தையும் இதையே செய்வார்.
 
ஆலிவ் மரம் வியப்பதை நிறுத்திவிட்டதுஅது அறியும்
இங்கு பருவங்கள் உள்ளன, செல்வதற்கான நேரம் வந்துவிட்டது.
உன் முகத்தை துடைத்துக்கொள், என் பெண்ணே, சிறிதுநேரம் என்னருகே நில்.
குடும்பப் புகைப்படத்தில் உள்ளதைப் போலே, புன்னகைசெய்.
 
எனது சட்டையை, எனது மனச்சோர்வை மூட்டைகட்டிவிட்டேன்,
என் அறையில் இருக்கும் பெண்ணே, உன்னை நான் மறக்க மாட்டேன்,
சாளரங்களே இல்லாது, போர் மட்டுமேயுள்ள
பாலைவனத்தையும், உறைந்த குருதியையும் அடையும் முன்னர் இருக்கும் என் இறுதிச் சாளரமே.
 
முன்பெல்லாம் நீ சிரிப்பாய், இப்போதோ உன் விழிகளில் அமைதிதான் குடிகொண்டுள்ளது,
அன்பிற்குரிய நாடு அழவே அழாது,
கசங்கிக் குலைந்த படுக்கையில் காற்று சலசலத்தோடும் –
நம் தலையோடு தலை இணைத்து இனியெப்போது உறங்குவோம்?
 
இந்தப் பூமியில், மூலப்பொருட்களெல்லாம் தம் சுவடை விட்டுச்செல்கின்றன,
நம்மைப்போல் அமைதியிலும் இருளிலுமிருந்து அவை பிரித்தெடுக்கப்படுவதில்லை,
அனைவருக்குமான அமைதியை ஜெட் விமானம் ஆகாயத்தில் உருவாக்குகிறது,
நமக்காகவும், இலையுதிர் காலத்தில் காதல்கொள்ளும் அனைவருக்காகவும்.

1 comment

anbu Alagan June 27, 2021 - 8:11 am

Amazing translation

Comments are closed.