ஜே.சி. குமரப்பா: மறக்கப்பட்ட மாமேதை, பசுமைப் பொருளியல் அறிஞர்

by பாமயன்
0 comment

புத்திய (modern) பொருளியலின் தந்தை என்று அழைப்படும் ஆடம் சுமித் கட்டுப்பாடற்ற பொருளியலை உலகிற்குப் பரிந்துரைத்தார். அப்போது ஏற்பட்டிருந்த தொழில்புரட்சியும் அதன் பின்னணியில் உருவான முதலீடுகளின் குவியலும் அவரது நெறிமைகளை (principles) பெரிதும் விரும்பி ஏற்றுக்கொண்டன. அதன் பின்னர் காரல் மார்க்சு கட்டற்றுத் திறந்துவிடப்பட்ட பொருளியல் திரட்சியால் உருவான முதல் (capital), அதன் பெருக்கம், இதனால் ஏற்பட்ட சுரண்டல் இவற்றை கணக்கில் கொண்டு கட்டற்ற பொருளியலை மாற்றியமைக்கும் நெறிமைகளை உருவாக்கினார். ஆடம் சுமித் மறைந்து ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் பிறந்த குமரப்பா பொருளியலில் உலகச் சிந்தனையாளர்கள் வியக்கும் அளவிற்கு அழுத்தமான கருத்துகளை, நெறிமைகளை வகுத்துக் கொடுத்துச் சென்றுள்ளார். இன்று மிக ஆழமான முறையில் பேசப்பட்டு வருகின்ற நீடித்த மேம்பாடு (sustainable development) என்பது பற்றியும் திணையவியல் பொருளியல் (Ecological Economy) பற்றியும் மிக நுட்பமான வரையரைகளை விட்டுச் சென்றுள்ளார். திணைப்பொருளியலின் தந்தை (Father of Eco-economics) என்று இவரை எவ்விதத் தயக்கமின்றியும் அழைக்கலாம்.

தஞ்சையில் வாழ்ந்து வந்த ஒரு கிறித்துவக் குடும்பத்தில் 1892ஆம் ஆண்டு சனவரி மாதம் 4ஆம் நாள் ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்தார். இவரது பாட்டனார் மதுரையில் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர். அரசுப் பணியின் காரணமாக குடும்பம் தஞ்சைக்கு இடம்பெயர்ந்தது. தஞ்சை, சென்னை என்று கல்வியைப் பெற்று தனது 21ஆம் அகவையிலேயே இலண்டன் சென்று கணக்கியலில் பணியாற்றத் தொடங்கினார். இவரது தந்தை கல்வியின் முதன்மையை உணர்ந்து தனது அனைத்துச் சொத்துகளையும் விற்று பிள்ளைகளை நன்கு படிக்க வைத்துள்ளார். குமரப்பாவின் பெற்றோர் இட்ட பெயர் ஜோசப் செல்லத்துரை கொர்னீலியஸ், அவரது நண்பர்களும் உறவினர்களும் ‘செல்லா’ என்றே செல்லமாக அழைப்பர். ஆனால் அவர் பின்னர் தனது மரபு வழித் தமிழ்ப் பெயரான குமரப்பா என்றே அழைத்துக் கொண்டார். அவ்வாறே புகழும் பெற்றார்.

குமரப்பாவின் காலத்தில் இரண்டு பெரும் பொருளியல் சிந்தனைப் பள்ளிகள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. கட்டற்ற பொருளியலை முன்வைத்த முதலாளியம் ஒருபுறம்; முதலியத்தை அரசு கட்டுப்படுத்தி ஓரிடத்தில் குவியும் முதலத்தைப் பகிர்ந்து கொடுத்து சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பேசிய பொதுவுடமை ஒருபுறம். ஆனால் இந்த இரண்டு கோட்பாடுகளும் உருவாக்க முறைபற்றி பெரிதும் கவலை கொள்ளவில்லை. அறிவியல் நுட்பவியல் முன்னேற்றங்களால் பெருகும் பொருளாக்கம் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வாகி விடும் என்று கருதினர். அதாவது பொருளாக்கத்தில் முதலீடு + மூலப்பொருள் + உழைப்பு என்ற மூன்றை மட்டுமே கருத்தில் கொண்டனர். ஆனால் வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அத்துடன் பொருளாக்க முறை (Mode of Production) பற்றியும் அவர்கள் கலைப்படவில்லை. ஆனால், குமரப்பா அந்த இரண்டு கூறுகளையும் கணக்கில் கொண்டார். இயற்கை வளங்கள் தொடர்ந்து கிடைப்பதரிது என்றும் பெருமளவு பொருளாக்கம் தவறு பெருமளவு மக்களால் பொருளாக்கம் நடக்க வேண்டும் என்றும் கூறினார். வழமையான ஆடம் சுமித்தின் கோட்பாடுகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதற்கான மாற்றுகளையும் முன்மொழிந்தார். ‘மக்களின் பொருளியல் நடவடிக்கைகள் சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஒரே பேராவலிலேயே உள்ளன’.

‘வணிகத்திலுள்ள தன்னலப்பண்பு என்ற ‘அருவக் கை’ (Invisible hand) பொதுமக்களின் நலனுக்காகச் செயலாற்றுகிறது’ போன்ற ஆடம் சுமித் சிந்தனைகளில் இருந்து குமரப்பா முரண்பட்டார். அவர் மக்களிடம் உள்ள அறப்பண்புகளை முன்னிறுத்தினார். அவற்றை விரிவான முறையில் பெரிதாக்க வேண்டும் என்றார். ரிக்கார்டோ என்ற பொருளியல் அறிஞரின் சிந்தனைகள் அன்று ஆடம் சுமித்தைப் போலவே புகழ்பெற்று இருந்தன. அவர் உழைப்பு என்பதும் பொருளைப் போல வாங்கவும் விற்கவும் கூடிய ஒன்று தான் என்றார். சந்தையின் போக்கை வைத்து உழைப்பை கூட்டிக் கொள்ளவோ குறைத்துக் கொள்ளவோ முடியும் என்றார். இதன் அடிப்படையில் அவர் பிரிட்டானிய நாடாளுமன்றத்தில் உழைப்பாளிகளின் குழந்தைகளுக்கு நாட்பராமரிப்பு நடுவங்களை (Daycare Centers) அமைப்பதை எதிர்த்து வாக்களித்தார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான வழியைத் தடுப்பது இதுவாகும் என்றார்! அதாவது பட்டாளி வகுப்பு அதிகமாகி விடும் என்பது அவரது கவலை. இவரது கருத்துகளுக்கு மாற்றான சிந்தனைகளும் உருவாயின, குராபோட்கின், லியோ டால்ஸ்டாய் ஆகிய அறிஞர்களின் வன்முறையற்ற பொருளியல் குமரப்பாவின் சிந்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. காந்திக்கு டால்ஸ்டாயின் தாக்கம் அதிகம் உண்டு. அவருடனான கடிதப் போக்குவரத்து அவரது பெயரில் உருவாக்கிய பண்ணை போன்றவை குறிப்பிடத்தக்கன. காந்தி உணவுக்கான உழைப்பு (Bread Labor) என்று பொருளாக்க முறையை வரையறுத்தார். குராபோட்கின் கூற்றுப்படி நல்வாழ்க்கை எனப்படும் உடலியல், அறவியல், அழகியல் தேவைகள் ஒருவருக்கு நிறைவு செய்யப்படும் போது அவரது உழைப்பு உச்ச அளவாக இருக்கும். எனவே ஒரு சமுகம் அனைவரது நலத்தையும் முன்னிறுத்தி இயங்குமானால் அங்கு தன்னார்வமாகவே  வேலைகள் நடைபெற்று விடும் என்கிறார். இது அடிமை உழைப்பு, வலுக்கட்டாய உழைப்பு இவற்றுக்கு மாற்றானது.

குமரப்பா இன்னும் ஒருபடி மேலே சென்று விளையாடும் போது நமக்கு களைப்பு ஏற்படுவதில்லை, உழைக்கும் போதுதான் களைப்பு தோன்றுகிறது, எனவே உழைப்பை விளையாட்டாக மாற்றி விட்டால் அதாவது விருப்பமிக்க ஒன்றாக விளையாட்டை மாற்றிவிட்டால் அது அதிக விளைச்சல் திறன் மிக்கதாயும் மகிழ்ச்சியூட்டக் கூடியதாகவும் இருக்கும் என்கிறார். மார்க்சின் அயன்மையாதல் என்ற கருத்தாக்கம் குமரப்பாவின் சிந்தனைக்கு வித்தாக இருந்துள்ளது. உழைப்பவன் தனது உழைப்பில் இருந்து கிடைக்கும் விளைச்சலை நுகர முடியாமல் போகும் போது அதன் மீது அவன் அயன்மைப்பட்டுப் போகிறான். இளம் மார்க்சின் எழுத்துகளில் இந்தக் கருத்து மிக ஆழமாக இருந்தது. தொழிற்சாலை மயமாகும் பொருளாக்கத்தில் அயன்மையாகுதல் அதிகமாகிறது. யாருக்காவோ தான் உழைப்பதாக உழைப்பாளி நினைக்கிறான், நுகர்பவனுக்கோ யார் உருவாக்கியது என்றே தெரியவில்லை. இதைப் பரவல்மயப்படுத்தப்பட்ட பொருளாக்கத்தின் மூலம் தீர்க்க முடியும் என்பது குமரப்பாவின் கருத்து.

குமரப்பாவின் கருத்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் அவரது ஆசிரியரான எட்வின் செலிக்மென் முதன்மையானவர். அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கைகளை தீர்மானித்தவர்களில் முதன்மையானவர். துணித்தொழில் பணியாளர்களுக்காகப் போராடியவர். அறப்பண்பாட்டு சங்கத்தின் (Society for Ethical Culture) தலைவராகப் பணியாற்றிவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசியராக இருந்த இவர் குமரப்பாவை இந்தியாவின் பொருளியல் வறுமை பற்றிச் சிந்திக்கத் தூண்டியவர். இவர் அம்பேத்கரின் ஆசிரியரும் ஆவார். இதில் சுவையான செய்தி என்னவெனில் பிரிட்டானிய இந்தியாவின் நிதியியல் பரிணாமத்தைப் (The Evolution of Provincial Finance in British India) பற்றிய ஆய்வை 1916ஆம் ஆண்டிலேயே அம்பேத்கர் செய்து முடித்துள்ளார். இதற்கு அறிமுக உரை கொடுத்தவர் பேராசிரியர் செலிக்மன்.

அமெரிக்காவில் படிக்கச் சென்ற குமரப்பாவை உடன் படித்த நண்பர்கள் ஏன் இந்தியா அடிமைப்பட்டது என்ற வினாவை எழுப்பியதன் பயனாக அது பற்றிய ஆய்வை குமரப்பா  மேற்கொண்டார். குமரப்பா சமுதாய தேவாலயம் ஒன்றில் பிறகு ஏன் இந்தியா ஏழ்மையில் உள்ளது? (Why then is India poor?) என்ற தலைப்பில் பேசியதை செலிக்மன் கேள்வியுற்று குமரப்பாவை பொருளியல் ஆய்வில் நுழையுமாறு நெறிப்படுத்தியுள்ளார். குமரப்பா தனது ஆய்வுப் பொருளாக ‘பொதுநிதியும் இந்தியாவின் வறுமையும்’ (Public finance and India’s poverty) என்ற தலைப்பை எடுத்து ஆய்வு செய்தார். இதன் விளைவாக அவர் பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தார். பிரிட்டானிய அரசு எவ்வாறு இந்தியாவைச் சுரண்டுகிறது என்பதை பல்வேறு புள்ளியியல் தரவுகளாடு விளக்கினார். இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் யாவும் பிரிட்டனின் படைக் குவிப்பிற்கு பயன்படுத்தப்பட்டது. 1925-26ஆம் ஆண்டளவில் அமெரிக்கா தனது போர்ப்படைக்காக 48.8 விழுக்காடு செலவு செய்தபோது பிரிட்டனின் அடிமை நாடான இந்தியாவில் 93.7 விழுக்காடு செலவிடப்பட்டது. இதனால் பொதுப்பணிக்கான செலவினங்கள் மிகவும் குறைவாக இருந்தன. இதன் தொடர்ச்சியே பஞ்சங்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இவரது இந்த ஆய்வேடு காந்தியை வெகுவாகச் கவர்ந்ததும், குமரப்பாவும் காந்தியும் இணைந்து பணியாற்ற உதவியதும் ஆகும். நோபல் பரிசு பெற்ற அமார்த்திய சென் தனது நலன்மைப் பொருளியல் (Welfare Economics) என்ற கருத்தாக்கத்தை குமரப்பாவிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் காந்தியப் பொருளியல் பற்றி இவர் பேசுகிறார். இந்தியாவில் பஞ்சங்கள் வந்த போதெல்லாம் உணவுப் பொருள் ஏற்றுமதி ஆகியிருந்ததை சென் குறிப்பிட்டுள்ளார். இது குமரப்பா பிரிட்டானிய இந்தியா பற்றிய ஆய்வின் எதிரொலி போல் இருப்பதை மறுப்பதற்கில்லை.

மிகப் பகட்டான மேற்கத்திய உடையாளராக இருந்த குமரப்பா காந்தியைச் சந்தித்த பின்னர் நான்கு முழ வேட்டியில் உருவாக்கிய ‘தோத்தி ஜாமா’ (வடநாட்டார் பைஜாமா எட்டு முழுத்தில் இருக்கும்) என்ற எளிய உடையை அணிந்து வாழ்நாள் முழுவதும் இருந்தார். இவரது காந்தியுடனான சந்திப்பு மிகவும் உணர்ச்சிமயமானதும் சுவையானதுமாகும். இந்தி மொழியோ குசராத்தியோ தெரியாத குமரப்பா குசராத்தில் உள்ள மடார் வட்டத்தில் தனது பொருளியல் கணக்கெடுப்பை நடத்தி வறுமையின் உண்மையான உருவத்தை வெளி உலகிற்குக் காட்டினார். பெரும்பாலான பொருளியல் அறிஞர்கள் அறைகளுக்குள் அமர்ந்துகொண்டு செய்தித்தாள்களில் வரும் தரவுகளை வைத்து தலைவருமானம் போன்ற தரவுகளை நிறுவுவார்கள். இதன்படி அன்றைய காலகட்டத்தில் ஆண்டுத் தலைவருமானம் என்பது 60 ரூபாய்களுக்கு மேல் என்று கருதிக் கொண்டிருந்தபோது, உண்மையில் ஆண்டுக்கு 12 ரூபாய்க்கும் குறைவாக மக்களின் தலைவருமானம் உள்ளதை நேரடிக் களஆய்வு மூலம் நிறுவினார். நாட்டின் மிகப் பெரிய பணக்காரரின் வருமானத்தையும் எண்ணற்ற ஏழைகளின் வருமானத்தையும் நிரவை (சராசரி) போட்டுப் பார்க்கும் தவறான கணக்கீட்டை மறுதலித்தார். நடைமுறை சார்ந்த பொருளியல் மேதையாக இருந்ததால் மக்களின் நேரடிச் சிக்கல்களைக் கண்டறிய முடிந்தது.

குமரப்பாவைப் பல மேலை அறிஞர்கள் பொருளியல் மெய்யியலாளர் என்றே குறிக்கின்றனர். இவரது பொருளியல் சிந்தனைகள் வன்முறையற்ற, நீடித்த வாழ்வுக்கு வழிகாட்டும் இயக்கியல் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆடம் சுமித், ரிக்கார்டோ போன்றவர்கள் பணக்காரர்கள் எவ்வாறு மேலும் பணத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதற்கான சிந்தனைகளையே முன்வைத்தனர். குமரப்பா அறத்தைத் தனது முதல் மதிப்பீடாக வைத்துக்கொண்டார். தமிழகத்தின் திருக்குறள், சங்க இலக்கிய மரபு போன்றவை அறத்தை வலியுறுத்தும் கூறுகளைக் கொண்டவை. இந்த மரபில் வந்த குமரப்பாவிற்கு அறம் பற்றிய பார்வையும் ஈர்ப்பும் இயல்பாகவே இருந்தது. வழமையான கருத்தாக்கங்களான வேலையின் தன்மை, உழைப்புப் பிரிவினை, அரசின் பங்கு, சொத்துரிமை, பரிமாற்றத்தில் பணத்தின் பங்கு போன்றவற்றில் இவர் புதிய சிந்தனைகளைப் புகுத்தினார். பணத்தின் ஆளுமையை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து. பண்டமாற்று என்பதே பெரிதும் ஊரகப் பகுதிகளில் நடைபெற வேண்டும். தாளில் அச்சடித்த பணத்திற்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்றார். கிராம உத்யோக் பத்திரிகா இதழில் 1942ஆம் ஆண்டு ‘உணவுக்காக கல்’ (Stone for Bread) என்ற கட்டுரையில் பிரிட்டானிய அரசு சேமவங்கி (Reserve Bank) வெளியிட்ட பண மதிப்பிற்கும் உண்மையான பொருளுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கினார். மார்க்சும் அச்சடித்த பணத்தின் மைகளை விளக்கியுள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும். அரசு அதிகாரத்தின் குவியலைக் கொண்ட நடுவப்படுத்தப்பட்ட அமைப்பாக இருக்கக்கூடாது. பரவல்மயமான குறைந்த அதிகாரங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றார். வேலையின் தன்மையானது கடுமையைக் குறைத்து முழுமையாக உழைப்பாளியின் படைப்பாற்றலை வெளிக் கொணரும் வகையில் இருக்க வேண்டும். முந்தைய பொருளியல் சிந்தனையாளர்கள் வேலையைப் பிரித்துக் கொடுத்து திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் செய்ய வைத்தால் பொருளாக்கம் அதிகரிக்கும் என்றனர். ஆனால் அதில் எந்தவிதமான ஈடுபாடும், படைப்பாற்றல் திறனும் இருக்காது என்பது குமரப்பாவின் ஆழமான கருத்து. தனது ஏன் சிற்றூர் இயக்கம் (Why Village movement?) என்ற நூலில் இதை விளக்குகிறார். இதை காந்தியப் பொருளியலின் கொள்கை அறிக்கை என்றே கூறலாம். காந்தியின் எண்ணங்களுக்கு இலக்கண வடிவம் கொடுத்து காந்தியப் பொருளியல் என்றே குமரப்பா அழைத்தார். என்னிடம் வரும்போதே குமரப்பா அணியமாகி விட்டிருந்தார் (Readymade) என்று காந்தி கூறியுள்ளார். ஆனாலும் தனது தலைவருக்கு சற்றும் பிறழாது தனது ஆய்வுகள் யாவற்றையும் காந்தியப் பொருளியல் என்றே அழைத்தார். ஆக குமரப்பாயியல் என்பது காந்தியப் பொருளியல் என்று ஆகிவிடுகிறது.

குமரப்பாவின் ஆய்வுகளில் முத்தாய்ப்பானது ‘மன்னுமைப் பொருளியம்’ (Economy of Permanence), இது இன்றைய உலகிற்கான கருத்தியலாக உள்ளது. சூழலியல் சீர்கேடுகளும், இயற்கை வளங்களின் பற்றாக்குறையும் அழிமானமும் உருவாகியுள்ள இச்சூழலில் பசுமைச் சிந்தனையை முன்வைத்த பெரும் மேதையாக குமரப்பா திகழ்கிறார். எந்த ஒரு பொருளாக்க முறையும் இயற்கையின் சுழற்சியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் புறம்பாகப் போகும்போது பெரும் தொல்லைகள் உருவாகும்.

அவர் கூறுகிறார்: நிலக்கரி, கன்னெய், இரும்பு, செம்பு, தங்கம் ஆகியவற்றைப் பெரிதும் சார்ந்து இன்றைய உலகம் உள்ளது. இவை ஒரு குறிப்பிட்ட அளவே இருக்கக்கூடியவை, குறைந்த காலத்திற்கு மட்டுமே கிடைக்ககூடியவை. ஆனால் ஆற்றில் ஓடும் நீரும், காட்டில் வளர்ந்துகொண்டு இருக்கும் மரமும் தொடர்ச்சியாகக் கிடைக்கக் கூடியவை. இவை மன்னியமானவை அதாவது நிரந்தரமானவை, தொடர்ந்து மக்களுக்குக் கிடைக்கக்கூடியவை.

கன்னெய் (பெட்ரோல்) வளம் பெருமளவு இருந்த காலத்திலேயே அதன் போதாமையைப் பற்றிச் சிந்தித்தவர் குமரப்பா. இவருக்கு புதுப்பிக்கக்கூடிய வளங்களைப் பற்றியும், புதுப்பிக்க இயலாத வளங்களைப் பற்றியும் (Renewable and Non-renewable resources) தெளிவான பார்வை இருந்துள்ளது. இவர் இதை தேக்கப் பொருளியம் என்றும் ஓட்டப் பொருளியம் என்றும் பிரிக்கிறார். அதுமட்டுமல்ல, சூழலைக் கெடுக்காத வளர்ச்சி அமைதி கொடுக்கும்; அவ்வாறு இல்லாமல் வரைமுறையற்று இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தால் முடிவற்ற போட்டி, குழம்பம் மற்றும் உலகப்போர்களுக்கே வழிவகுக்கும்.

சூமேக்கர் எழுதிய சிறியதே அழகு (Small is beautiful) என்ற நூலில் குமரப்பாவின் சிந்தனைகளை விளக்கியுள்ளார். ஆனால் அவர் புத்தவியப் பொருளியல் என்ற தலைப்பின் கீழ் குமரப்பாவின் கருத்துகளைப் பேசியுள்ளார். குமரப்பாவைப் பொருத்த அளவில் அவர் கிறித்தவராக இருந்தபோதிலும் தனது பொருளியல் கொள்கையில் எந்த மதத்தையும் முன்னிறுத்தவில்லை. உடலுக்குள் சரியான முறையில் எடுத்துக் கொள்ளப்படும் உணவு எவ்வாறு உடலை வளர்த்தெடுக்கின்றதா அதேபோல வேலையின் தன்மையும் மதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால் மிக உயரிய பயனைக் கொடுக்கும் என்று குமரப்பா விளக்குகிறார். மாந்தனிடத்தில் இருக்கும் விலங்குத்தன்மை அகன்று உயிரிய பண்புகளும் உச்சமட்ட உழைப்பின் பயன்களும் கிட்டும். பெரும்பாலான கருத்துகளை குமரப்பாவிடம் இருந்து கையாளும் சூமேக்கர் அவரைத் தனது நூலின் ஒரே இடத்தில் மட்டும் குறிப்பிடுகிறார்.

குமரப்பா தனது பொருளியல் கோட்பாடுகளை விளக்க வரும்போது ஐந்துவகையான மாதிரிகளை முன்வைக்கிறார்.

ஒட்டுண்ணிப் பொருளியம், கொள்ளைப் பொருளியம், முனைவுப் பொருளியம், கூட்டிணக்கப் பொருளியம், தொண்டுப் பொருளியம் என்று வரிசைப்படுத்தி ஒவ்வொன்றின் தன்மைகளைக் குறிப்பிடுகிறார். உழைக்கும் மக்களிடம் இருந்து உறிஞ்சிக் கொழுக்கும் முறை முதல் வகையாகும். பல கொடுங்கோன்மை அரசுகள் இதைச் செய்து வந்தன. அதைப் போலவே கொள்ளைப் பொருளிய முறை மக்களிடம் கடும் வன்முறையைப் பயன்படுத்தி அவர்களது உழைப்பைக் சுரண்டுவதாகும். இந்த இரண்டிலும் வன்முறை மிகக் கடுமையாக இருக்கும். முனைவுப் பொருளியம் என்பது சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு யார் ‘திறமையாளர்களோ’ அவர்கள் செல்வத்தைத் திரட்டிக் கொள்ளும் முறை. பல மக்களாட்சி நாடுகளில் இது நடைமுறையாக உள்ளது. கூட்டிணக்கப் பொருளியம் முற்றிலும் பகிர்வை அடிப்படையாகக் கொண்டது. தேனீக்கள் எவ்வாறு தமக்காக மட்டும் உழைக்காமல் தமது கூட்டமைப்பில் உள்ள யாவருக்காகவும் உழைக்கின்றது. பொதுவுடமைச் சிந்தனை யாளர்கள் இம்மாதிரியான முறையையே கனவு கண்டார்கள். இறுதியாக உள்ளது பிறருக்காக உழைப்பது. தனது தேவைகளைக் குறைத்துக்கொள்வது. தன்னார்வ வறுமை இதன் அடிப்படை. பொதுவாக காந்தி தனது தேவைகளைப் பெரிதும் குறைத்துக் கொண்டார். இந்தியாவின் கடைசி ஏழைக்கு மின்சாரம் கிடைத்த பின்பே தனது குடிசைக்கு மின்சாரம் வர வேண்டும் என்றார். இந்த முறை மாந்தனின் பண்பாட்டு வளர்ச்சியை, மிக உயர்ந்த சான்றாண்மையை அடிப்படையாகக் கொண்டது. வள்ளுவர் இதை செந்தண்மை என்று கூறுகிறார். உயர்ந்த விழுமியங்களை உள்ளடக்கியது. பொருளை உருவாக்கு பவர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் இடையில் அறம் இருக்க வேண்டும். பட்டினப்பாலை என்ற சங்க இலக்கியம் ‘கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது’ என்று கூறுகிறது. இப்படிப்பட்ட அறத்தை, விழுமியத்தை வலிறுத்துகிறார் குமரப்பா. இன்று மிகப் பரவலாகப் பேசப்படும் உணவுத் தொலைவு சூழலியல் மாசுபாட்டுக்கு காரணமாக இருப்பதை அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது இந்தியாவில் விளைவிக்கப்படும் தேயிலை அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்படும்போது அதற்காக செலவிடப்படும் எரிபொருள் மாசுபாட்டை உருவாக்கும். எனவே அந்தந்தப் பகுதியில் விளைவிக்கப்படும் பொருள்கள் அங்கேயே நுகரப்பட வேண்டும். இந்தக் கருத்துக்கு முன்னோடி குமரப்பா அவர்களே என்றால் மிகையாகாது. உள்ளூர்மயம் என்பதை மிகவும் அழுத்தமாகப் பரிந்துரைக்கிறார் குமரப்பா. இன்றைய உலகமயம் என்ற பன்னாட்டு வணிகமயத்திற்கு மாற்றாக அவர் கூறிய உள்ளூர்மயம் (Localization) மிக இன்றியமையாதது.

நிலத்தைப் பொருத்த அளவில் நீர், காற்றைப்போல பொதுவானதாக இருக்க வேண்டும் என்பது குமரப்பாவின் கருத்து. உழுபவர்களுக்கு நிலத்தை உரிமையாக்குவது இவரது அடிப்படை நோக்கமாக இருந்தது. இவரது தலைமையில் 1948ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிலச்சீர்திருத்தக் குழுவில் இவர் அளித்த பரிந்துரைகள் மிக முற்போக்கானவை. ஆனால் இவை முறையாக நிறைவேற்றப் படாதது குறித்து மிகுந்த மனவருத்தம் அடைந்தார். குத்தகை முறையை நீக்கி உழுபவர்கள் நேரடியாக நிலத்தில் இருந்து கிடைக்கும் பயனைப் பெறவேண்டும். ஆனால் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தும் இதன் சாரம் நீர்த்துப்போகச் செய்தனர். உழுபவர்களின் கைகளுக்கு நிலம் போவது கைநழுவிப் போனது. குமரப்பாவை இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக ஆக்க வேண்டும் என்று காந்தி விரும்பினார். ஆனால் அது நடக்கவே இல்லை. கெடுவூழாக காந்தியின் மறைவு மிக வேகமாக 1948ஆம் ஆண்டிலேயே நடந்தேறி விட்டது.

வேளாண்மையில் வேதி உரங்களின் வரைமுறையற்ற பயன்பாட்டை அன்றே எதிர்த்தார் குமரப்பா. இவரது மறைவுக்குப் பின்னர் வெளியான ராய்ச்சல் கார்சனின் ‘மௌன வசந்தம்’ பூச்சிகொல்லிகளின் மைகளை விரிவாகக் கூறியது. இவரது நூலகத் தொகுப்பில் ருடால்ஃப் ஸ்டெய்னரின் உயிரித்துனைமப் பண்ணையம் (Bio-dynamic farming) பற்றி நூல் இருந்துள்ளது. உழவர்கள் தற்சார்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதில் குமரப்பா உறுதியாக இருந்துள்ளார். உழவர்களின் கைகளில் வேதியுரங்களைக் கொடுப்பது அடிமுட்டாள்தனம் (Sheer folly) என்று எழுதினார். (Gram Udyog Patrika, 9(9),9(10), September and October 1947)

வேளாண்மை என்பது தொழிற்சாலைமயப்படுத்தப்பட்டதன்று; அது வாழ் தொழில் முறையானது (Industry Vs Occupation) என்றார். உணவுப் பொருள் விளைச்சலில் அதிகம் கவனம் செலுத்துவது, மண்ணை மட்கு உரம், தொழுவுரம் இவற்றால் செழிப்பூட்டுவது என்று வேளாண்மைக்கான திட்டத்தை முன்வைத்தார். அதுமட்டுமல்ல, மக்களுக்கான ஊட்டம் மிக்க உணவை உருவாக்கக்கூடிய சாகுபடித் திட்டத்தைப் பரிந்துரைந்தார் என்பதைப் பார்க்கும்போது அவரது நெடிய ஆழமான பார்வை வியக்க வைக்கிறது. இதை அவர் சமத்துவ சாகுபடி (Balance cultivation) என்று குறிப்பிட்டார். குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கான தவசங்கள், பருப்புகள், காய்கறிகள், பால் இவற்றை உள்ளடக்கிய 2800 கலோரியைக் கொடுக்கும் வகையிலான சாகுபடியும் அவர்களுக்குத் தேவையான துணியைத் தரக்கூடிய அளவிலான பருத்தியும் விளைவிக்க வேண்டும் என்று விவரித்தார். அதுமட்டுமல்ல, பண்ணையாளரின் விருப்பத்திற்கான சாகுபடிக்கு மாற்றாக உள்ளூர் மக்களின் தேவைக்கான சாகுபடியே வேண்டும் என்றார். கியூபாவில் முதலில் ஒட்டுமொத்தமாக கரும்பை விளைவித்ததும் பின்னர் கடும் நெருக்கடியைச் சந்தித்து இப்போது பரவல்மயப்படுத்தப்பட்ட ‘குமரப்பா பாணி’ வேளாண்மையில் ஈடுபட்டு சிக்கலில் இருந்து மீண்டதையும் நாம் அறிவோம். இவரது கணக்குப்படி ஆளன்றிற்கு 14 செண்ட் பரப்பளவில் போதுமான உணவை விளைவித்துக் கொள்ளமுடியும்.

பரவல்மயப்பட்ட பொருளாக்கமுறைதான் இந்தியாவிற்கு ஏற்றது என்பதை அறிவியல் வகையில் குமரப்பா விளக்கினார். செல்வம் = உழைப்பாளிகள் + முதலீடு (W= E+M). செல்வ வளம் உழைப்பாளிகளின் உழைப்பாலும் அதில் போடப்படும் முதலீடு கருவிகள் இதர ஏந்துகளாலும் உருவாவது. இந்தியாவைப் பொருத்த அளவில் E அதிகம் ஆனால் M குறைவு. எனவே திட்டமிடும்போது அதிக அளவில் உழைப்பாளிகள் (E) ஈடுபடுத்தப்படுவதோடு குறைந்த அளவு முதலீடும் எந்திரங்களும் (M) பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். இன்று பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்து சில ஆயிரம் பேர்களுக்கு வேலை தரும் போக்கு உள்ளது. அதற்காக அவர் பெரும்பாடுபட்டார். அனைத்திந்திய சிற்றூர் தொழில்கள் இணையத்தை (All India Village Industries Association) ஏற்படுத்தி அதில் செயலராக இருந்து பணியாற்றினார். இதன் தலைவராக காந்தி இருந்தார். இதில் இவர் எண்ணற்ற ஆராய்ச்சிகளைச் செய்து பொருள்களை உருவாக்கினார். மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தாவில் மகன்வாடி என்ற இடத்தில் அவரது ஆய்வுகள் நடந்தன. சேவா கிராம ஆசிரமத்தில் காந்திக்காகக் கட்டப்பட்ட வீட்டைவிடவும் மிக எளிமையாக குறைந்த விலையில் (அன்றைய மதிப்புப்படி 150 ரூபாயில்) கட்டியுள்ள வீடு இன்றும் உள்ளது. மண்ணெண்ணெய்க்கு மாற்றாக தாவர எண்ணெயில் எரியும்படியான விளக்கு, எளிமையாக நெல் அரைக்கும் திரிகைகள், பந்துபொறுத்திகள் (Ball bearing) இணைக்கப்பட்ட மாட்டுவண்டி என்று எத்தனையோ கண்டுபிடிப்புகள். இதை அவர் தனது கிராம உத்யோக் பத்திரிகா இதழில் வெளியிட்டும் வந்தார். இவரது நூல்கள் யாவும் கையால் செய்யப்பட்ட தாளில் அச்சானது என்பதோடு இன்றைய தாள்களின் தரத்திற்கு சற்றும் குறைவின்றி அவை இருந்தன என்பதைப் பார்த்தால் வியப்பு மேலிடுகிறது.

அயல்நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும் போரில் அனைவரையும் காந்தி அழைத்தார் என்பதோடு உள்நாட்டில் எந்திர ஆலைகளில் உருவான துணிகளையும் குமரப்பாவும் காந்தியும் மறுத்தார்கள். தற்சார்பிற்கான விளக்கமாக நமது உழைப்பும் விளைவிப்பும் நமது அண்டை மக்களுக்கு முதலில் பயன்படுமாறு இருக்க வேண்டும். அதிகத் தொலைவில் உள்ளவர்களுக்காக இருக்கக்கூடாது. அத்துடன் உள்ளூர் பொருள்களை ஒதுக்கி வெளிநாட்டுப் பொருள்களை வாங்குவது இந்தியாவின் வறுமைக்கான காரணமாக இருந்தது. உள்ளூர் பொருள்களை உருவாக்கவும் அதைச் சந்தைப்படுத்தவும் முனையும்போது வறுமை நீங்குகிறது என்று தொலைநோக்குடன் சிந்தித்தார் குமரப்பா. இன்று அமெரிக்காவே தனது நாட்டில் உள்ளூர் தொழில்களுக்கு முதன்மை கொடுக்க முன்வந்ததைக் கவனிக்க வேண்டும். மூலப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் அதனால் எண்ணற்ற உள்ளூர் மக்கள் வேலையிழப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஊரக மேம்பாட்டின் குறியீடு என்ன என்பதை குமரப்பா விளக்குகிறார்: ‘சாலைகள் அமைப்பதோ கிணறுகள் தோண்டுவதோ வேதியுரங்களை வழங்குவதோ அல்ல, திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பு சில ஏழை உழவர்களை அழைத்து அவர்களது விலா எலும்புகளை எண்ண வேண்டும், திட்டங்களை செயல்படுத்திய பின்னர் அவர்களை மீண்டும் அழைத்து அவர்களது விலா எலும்புகளை மூடும்படியான சதை வளர்ந்து இருக்குமேயானால் அதுதான் திட்டத்தின் உண்மையான வெற்றி.’

இங்கிலாந்தின் அரசியல் முற்றாளுமையில் (Imperialism) இருந்து விடுபட்டு அமெரிக்க பண முற்றாளுமைக்குள் இந்தியா விழுந்துவிடலாகாது என்று குமரப்பா மிகத் தெளிவாக எச்சரித்தார். ஆனால் நேருவின் விருப்பங்களும் அணுகுமுறைகளும் இந்தியாவை முழுமையாக அமெரிக்கப் பொருளியல் முற்றாளுமைக்குள் தள்ளிவிட்டது. அது இன்னும் தொடர்கதையாகி வருகிறது. இந்தியா மட்டுமல்லாது கொரியா, சீனா, ஈராக் போன்ற நாடுகளின் மீது பல்வேறு வகையில் அவற்றின் உள்ளார்ந்த வளர்ச்சியைத் தடுக்கும்பொருட்டு போர், உதவி, தொண்டு என்று தலையிட்டு வருவதை 1953ஆம் ஆண்டிலேயே உத்யோக் பத்திரிகாவில் எழுதினார். சோவியத் நாட்டுடன்தான் இந்தியாவிற்கு நட்புறவு உண்டு என்று கருதியபோது அமெரிக்காவுடன் நேரு அரசாங்கம் கொண்டிருந்த ‘நட்பை’ போட்டு உடைத்தார் குமரப்பா என்றே கூற வேண்டும். குறிப்பாக உணவு தவசங்களையும், நிதியையும் கொடுத்து தனது ஆளுமையைத் திணித்தது அமெரிக்கா. அதன் விளைவாகவே இந்திய உழவர்களை ஓட்டாண்டியாக்கிய பசுமைப் புரட்சி இந்தியாவினுள் நுழைந்தது.

இந்தியாவில் ‘சிவப்புக் காய்ச்சல்’ வந்துவிடக் கூடாது என்று போலியாக அச்சுறுத்தி அன்றைய இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரான செஸ்டர் பவுலசு மூலம் பரப்புரைகள் நடந்தன. அதன் பின்னணியில் இந்தியாவிற்கு ‘உதவி’யாக ஒரு பெரும்பேராயிரம் டாலர்கள் (பில்லியன் – 100 கோடி) கொடுக்கப்பட்டது. இதை குமரப்பா இந்தியாவின் கழுத்தில் அமெரிக்கா மாட்டும் சுருக்குக் கயிறு என்றே எழுதினார். நேரு சோவியத்தின் நண்பர், அமெரிக்காவின் எதிர்ப்பாளர் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அறிவாணர்களுக்கு அது சற்று அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கக் கூடும். அதிக உணவுப்பயிர் வளர்ச்சி (Grow-More-Food) என்ற பெயரில் ஆல்பெர்ட் மேயர் என்ற அமெரிக்கரைக் கொண்ட திட்டத்தை நேரு அனுமதித்தது குமரப்பாவிற்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. இத்திட்டம் 1948-52 ஆண்டளவில் உத்திரபிரதேச எடாவா என்ற இடத்தில் செயல்படுத்தப்பட்டது. ஏற்கெனவே மிகத் தெளிவாக இந்திய ஊரகப் பகுதிகளுக்கான திட்டங்கள் காந்தியப் பொருளியல் முறையில் ட்டப்பட்டு இருந்தன. இதற்காக குமரப்பா கடுமையாக உழைத்து மக்களின் உண்மையான நிலைமைகள் என்ன என்பது பற்றிய தரவுகள் திரட்டி உருவாக்கி இருந்தார். ஆனால் அதற்கு மாற்றாக அமெரிக்கப் பொறியாளர் ஒருவரைக்கொண்டு சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தை முன்மொழிந்ததை குமரப்பாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமெரிக்க ‘வல்லுநர்’களின் வருகையால் இந்தியா தனது தற்சார்பான வளர்ச்சியை இழந்ததோடு தனது சிக்கல்களைத் தானே தீர்த்துக்கொள்ளும் திறனையும் இழந்துவிட்டதை வேதனையுடன் குறிப்பிட்டார். (Gram Udyog Patrika, 14(9), September 1952)

அவர் அச்சப்பட்டது போலவே நடந்தது. முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களில் சமுதாய மேம்பாட்டிற்காக 15%க்கும் குறைவாகவே செலவிடப்பட்டது. குமரப்பாவினால் வளர்த்தெடுக்கப் பட்ட அனைத்திந்திய சிற்றூர் தொழில்கள் இணையமும் நூற்போர் இணையமும் அரசாங்கத்தினால் ‘எடுத்துக் கொள்ளப்பட்டது’. குமரப்பா கிட்டத்தட்ட ஒரு வெளியாள் போலவே ஆக்கப்பட்டு விட்டார். ஒருமுறை புதியதாக உருவாக்கப்பட்ட அனைத்திந்திய காதி மற்றும் சிற்றூர் தொழில்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அப்போது அங்கே ஃபேபர் கும்பணியின் பென்சில் கொடுக்கப்பட்டது. அதைத் தூக்கி எறிந்து பெருந்தொழிற் சாலையில் உருவாக்கப்பட்டு வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட அப்பொருளைப் பயன்படுத்துவதைப் பற்றி சினத்துடன் பேசினார். அப்போதைய அமைச்சர் அரேகிருஷ்ணா மகதாப் ‘நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அரசாங்கம் இதைத்தானே விரும்புகிறது. நீங்கள் வேண்டுமென்றால் தெருக்களில் கருப்புக் கொடியுடன் ஊர்வலம் போங்கள்’ என்றார்.

நேருவின், அவரது உடன் ஆட்சியாளர்களின் அணுகுமுறை குமரப்பாவிற்குப் பெரும் அதிர்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ‘எனது பழைய தோழர்கள் இன்று (விடுதலைக்குப் பிறகு) அரசாங்கத்தையும் தில்லி அரண்மனைகளையும் எடுத்துக் கொண்டுள்ளார்கள். அதைப் பெருமைப்படுத்துவதிலும் கொண்டாடுவதிலும் ஈடுபட்டுள்ளார்கள். விரக்தியும் வேதனையுமே மிஞ்சுகிறது’ என்று எழுதினார். நேரு ஒரு அரசரைப் போலவே வாழ்ந்தார். இந்திய அரசின் கொழுத்த அதிகாரத்தைச் சுவைப்பதில் மகிழ்ந்தார் என்று கூடச் சொல்லலாம். ஏனெனில் காந்தியின் கனவான அதிகாரப் பரவலை சற்றேனும் செய்யவில்லை. நடுவப்படுத்தப்பட்ட பெருந்தொழில்களுக்கே முதன்மை கொடுத்தார். ஏற்கெனவே கூறியது போல சோசலிச விரும்பியாகக் காட்டிக்கொண்டே அமெரிக்காவின் திட்டங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்தார். அதன் தொடச்சியாக இந்திராகாந்தி, ராசீவ் காந்தி, மன்மோகன் என்று விரிவாகி வந்துள்ளது. 1950 முதல் 1966ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் நுகர்வுப் பொருள்களின் ஆக்கம் 68 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக விழுந்தது. அதுமட்டுமல்லாது அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் கடன் சுமை ரூ.3200 லட்சம் கோடியில் இருந்து ரூ.603000 லட்சம் கோடியாக உயர்ந்தது.

முதலாளியப் முறைப் பொருளாக்கமும் பொதுவுடமை முறைப் பொருளாக்கமும் ஒருவகையாகவே உள்ளதாக குமரப்பா கருதினார். தனி முதலாளிகளின் கட்டுப்பாட்டில் பெருந்தொழில்கள் இயங்குவதைப்போலவே பொதுவுடமை அரசிலும் நடுவப் படுத்தப்பட்ட கட்டுப்பாட்டில் பெருந்தொழில்கள் அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக சோவியத் நாட்டின் பொருளியல் முறையை திறனாய்வுக்குள்ளாக்கினார். அங்கு சில கட்சித் தலைவர்களிடம் மட்டும் அதிகாரம் குவிவதைச் சுட்டிக் காட்டினார். அதன் விளைவாகவே சோவியத் நாடு வீழ்ந்ததை அறிய முடிகிறது. 1950களில் குமரப்பா சீனாவிற்கும் சோவியத் ருசியாவிற்கும் சென்று வந்தார். அது பற்றி தொடர்ச்சியான கட்டுரைகளை எழுதினார். அந்நாடுகளில் எழுந்து வரும் தற்சார்பு உணர்வுகளைப் பெருமையுடன் சுட்டிக்காட்டின. சோவியத்தில் உள்ள பொதுவுடமையைத் தாண்டிய ‘உண்மையான பொதுவுடமை’ வர வேண்டும் என்று எழுதினார். இதனால் இவரை ‘கம்யூனிஸ்ட்’ என்றும் கூறினார்கள்.

தமிழகத்தில் மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் தனது கடைசி நாட்களில் பணியாற்றினார். தொடர்ந்து பயிற்சி வகுப்புகள், கூட்டங்கள் என்று சோர்ந்துவிடாது பணியாற்றினார். அவரது தம்பி பரதன் குமரப்பாவின் மறைவும் இந்திய அரசியலின் போக்கும் அவரது உடல்நிலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தின. கடுமையான இரத்த அழுத்த நோயால் துன்பமுற்றார். புதிய உலகிற்கான மாற்றுப் பொருளியலை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல் அதை நடைமுறைப்படுத்தியும் காட்டிய இந்தப் பேரறிஞர் தான் பிறந்த தமிழ் மண்ணில் உரிய போற்றுதலின்றி 1960ஆம் ஆண்டு சனவரி 30ஆம் நாள் தனது தலைவரான காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அதே நாளில் மறைந்தார். குப்பைக்கும் சப்பைக்கும் விழா எடுக்கின்ற அரசுகள் சான்றாண்மை மிக்க பேரறிவாளனைக் கண்டுகொள்ளவே இல்லை. இவரைப் போன்ற மாண்பாளர்களை மறந்துவிடுவதும் மறைத்துவிடுவதும் இந்தியாவின் துயரத்திற்கும் தமிழகத்தின் துன்பங்களுக்குமான காரணங்களாக இருக்கின்றன.

ஆனால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இன்றைய உலகினை விடுவிக்கும் சிந்தனைகளை விதைத்துச் செயல்படுத்த முனைந்த இந்த அறிஞரது கருத்துகளே இனி ஏதோ ஒருவகையில் ஆட்சி செய்யப்போகிறது.

சான்று நூல்கள்:

  1. Public Finance and Our Poverty: The Contribution of Public Finance to the Present Economic State of India, – J C Kumarappa.
  2. The Gandhian Economy and Other Essays – J C Kumarappa.
  3. Village Movement – J C Kumarappa.
  4. Economy of Permanence: A Quest for a Social Order Based on Non-Violence – J C Kumarappa.
  5. The Economics of Peace : The Cause and the Man.
  6. J C Kumarappa, Mahatma Gandhi’s Economist – Mark Lindley
  7. Building a Creative Freedom, J C Kumarappa and His Economic Philosophy – Venu Madhav Govindu, Deepak Malghan (EPW).