மானுடத்தின் மீதான பெருங்காதல்: போரும் அமைதியும்

1 comment

எங்கள் தெருவிற்குப் புதிதாக வந்தாள் துளசி. வங்கிப் பணியில் இருந்த தனது தந்தை மற்றும் தாயுடன் மாற்றலாகி எங்கள் ஊருக்கு வந்திருந்தாள். ஏறக்குறைய, நகரின் அனைத்து இளம்பெண்களும் அப்போது சுடிதாருக்கு மாறியிருக்க, இவள் மட்டும் தாவணியில், தேவதை போல வலம் வந்தாள். ஊரில் இருந்த அனைத்து இளைஞர்களுக்கும், எங்கள் தெருவில், நண்பர்கள் இருப்பது அப்போதுதான் ஞாபகம் வந்தது. ஆனால், தனது அழகு மற்றவர்களை என்ன செய்கிறது என்பதைப் பற்றி கொஞ்சமும் அறியாத குழந்தைபோல், துளசி இருந்தாள். கல்லூரிவிட்டால் வீடு, அவ்வப்போது தனது தாயுடன் பெரிய கோயில் என சிறிய வட்டம். அதிர்ந்து பேசாத தன்மை, படிப்பில் கெட்டி என அவளைப் பற்றி வந்த அனைத்து செய்திகளுமே இனியவையாக இருந்தது.

அதே துளசி, பெண்களை வளைப்பதையே தன் வாழ்வின் இலட்சியமாய், எந்த வேலையுமின்றி, தந்தையின் காசில் சுற்றிவரும் அசோக்குடன், பைக்கில் கட்டி அணைத்தபடி, மூவாநல்லூர் சாலையில் செல்கிறாள் என்று சரவணன் சொன்னபோது வாழ்வின் அபத்தத்தை நினைத்து சிரிப்புதான் வந்தது. பிறகு, எத்தனையோ பெண்கள்.. மீண்டும் மீண்டும் காதல் என்ற பேரில், பேசிப்பழகும் வாய்ப்பு கிடைத்த ஒரே காரணத்தினால், எந்த வகையிலும் இந்த உலகில் தமது இருப்பை நியாயப்படுத்திக்கொள்ள முடியாத முட்டாள்களுடன் ஓடிப்போய், வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வந்து நிற்பதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.

பேரழகியும், முன்காலைப்பனி போன்ற புனிதமும் கொண்ட நடாஷாவை, இன்னொருவனுக்கு நிச்சயமானவளை, பொறுப்பற்று சுற்றிவரும் அனடோல் கவர்கிறான். அடுத்தவேளை உணவுக்கான சாத்தியம்கூட இன்றி, ஓடிப்போகத் திட்டமிடுகிறார்கள். ஏற்கனவே திருமணமான அனடோலுடனான கனவு வாழ்க்கையைப் பற்றி கற்பனையில் திளைக்கிறாள் நடாஷா. இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதை தல்ஸ்தோய் காட்சிப்படுத்துகிறார். ஒரு விருந்தில், நடாஷாவை சந்திக்கும் அனடோல், அவளது அழகு பற்றியே பேசுகிறான். அவளது அழகு தன்னை எப்படி பாதிக்கிறது என்பதைத் தொடர்ந்து வெளிப்படுத்துகிறான். பிறகு அவனது சகோதரியும் நடாஷாவை சந்திக்கும்போது, எப்படியெல்லாம் அனடோல், நடாஷாவினால் ஈர்க்கப்பட்டுள்ளான் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறாள்.

முட்டாள்களுக்கே உரிய அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையுடன் வலம் வருகிறான் அனடோல். தனது ஊதாரித்தனம் பற்றியோ, பொறுப்பின்மை பற்றியோ ஒருபோதும் அவன் சுயமதிப்பீடுகளுக்கும் சந்தேகங்களுக்கும் ஆளாவதில்லை. அதனாலயே அவனிடம் எந்தத் தயக்கங்களும் இல்லை. அனடோலாகிய நான் இப்படித்தானே இருக்கமுடியும் என்று சுற்றிவருகிற தன்னம்பிக்கை நடாஷாவை ஈர்க்கிறது.

இப்போது யோசித்துப் பார்த்தால் அசோக், அனடோல் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள் புலப்படுகிறது. வாழ்க்கை பற்றி தீர்மானமான முடிவுகளுடன் இவர்கள் இருப்பது போன்ற போலித் தோற்றமே, பெண்களை ஈர்க்கிறது. இவர்கள் வாழ்வில் உள்ள சாகசத்தன்மையே நடாஷாக்களை கனவினில் தள்ளுகிறது. அவர்கள் வெளிப்படையான புகழ்ச்சியுரைகளைப் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். சமூகத்தின் மதிப்பீடுகளை புறந்தள்ளக்கூடிய இவர்களது அலட்சியம், துளசி போன்று சமூகத்தின் மதிப்பீடுகளோடு வளர்க்கப்பட்டிருப்பவர்களுக்கு மயக்கத்தைத் தருகிறது.

இவ்வளவு நுட்பமாக தனது போரும் அமைதியும் காவியத்தில், மனித உணர்வுகளை எழுத முடிந்ததாலேயே தல்ஸ்தோய் இவ்வுலகின் மகத்தான நாவலாசிரியனாக போற்றபடுகிறான்.

நெப்போலியனின் படையெடுப்பைக் கதைக்களனாக வைத்துக்கொண்டு, ரஷ்ய பிரபுக்களை கதைமாந்தர்களாக்கி வாழ்வின் பொருளை, மகத்தான வரலாற்று சம்பவங்களின் பின்னணியில் உள்ள தற்செயல்களை, வெற்றி – தோல்வியை நிர்ணயிக்கும் சிறு நிகழ்வுகளை, மனித உணர்வுகளை, ஆன்மீகத் தேடல்களை விவரிக்கிறது தல்ஸ்தோய் 1869ல் எழுதிய போரும் அமைதியும் என்ற காவியம்.

19ம் நூற்றாண்டில், 1806க்கும், 1813க்கும் இடைப்பட்ட காலகட்டம். நெப்போலியனின் படைகள், ஐரோப்பிய நாடுகளை வெற்றிகொள்ளும் வெறியில், சில நாடுகளை வென்ற வெற்றிக் களிப்பில் ரஷ்யாவுக்குள் நுழைகிறது. ஃபிரெஞ்சுப் படைகளின் படையெடுப்பைப் பற்றியும், நெப்போலியனின் போர்வெறியைப் பற்றியும், ஒரு விருந்தில், ரஷ்ய பிரபுகுடும்பத்தினர் ஃபிரெஞ்சு மொழியில் பேசிக்கொள்ளும் போலித்தனத்தில் ஆரம்பிக்கிறது நாவல்.ஏறக்குறைய அனைத்து ரஷ்ய பிரபுக்களும், ராணுவதளபதிகளும் ஃபிரெஞ்சில் பேசிக்கொள்கிறார்கள். ஃபிரெஞ்சு மொழி மேட்டுக்குடியினரின் மொழியாக மகுடம் சூட்டியிருக்கிறது. நாவல் முழுவதும் நிலப்பிரபுக்கள் விருந்துகள் கொடுக்கிறார்கள், போகத்தில் திளைக்கிறார்கள். ஆடம்பரமான உணவுவகைகளைத் தயாரித்து தங்களது விருந்தினர்களை மகிழ்விக்கிறார்கள். எண்ணற்ற பண்ணையாட்களைக் கொண்டு பண்ணைகளைப் பராமரிக்கிறார்கள்.

அவர்களுடைய கடமை உணர்வு, மேன்மை, கீழ்மை, போலித்தனம், கட்டுப்பாடு என அனைத்தையும் விமர்சிக்கிறார் தல்ஸ்தோய். நிலப்பிரபுக்களில் ஒருவராய் தல்ஸ்தோயும் ஏராளமான சொத்துகளை கொண்டிருந்தவர்தான். ஒருகாலகட்டத்தில் இந்த நாவலில் வரும் பியரைப் போலவே, தனது சொத்துகளை பண்ணையாட்களின் நலனுக்குச் செலவழித்தார். பண்ணையாட்களைக் கொத்தடிமையிலிருந்து விடுவித்தார். எப்போதும் அறத்திற்கான குரலாய் தல்ஸ்தோய் இருந்தார். போரும் வாழ்வும் நாவலின் அடித்தளம் அறமும், மானுடத்தின் மீதான நேசமும்தான்.

தல்ஸ்தோய், தனது சமகாலத்திய இலக்கியங்களை, உலக காப்பியங்களைத் தேடித்தேடிப் படிப்பவராக இருந்திருக்கிறார். பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த அவரது நூலகத்தில் இருபதாயிரத்துக்கும் அதிகமான நூல்கள் இருந்திருக்கின்றன. தல்ஸ்தோய், தமிழ்மொழியின் அறநூலான திருக்குளை நேசித்திருக்கிறார். மகாத்மா காந்திக்கு எழுதிய கடிதத்தில் திருக்குறளை, ஹிந்துகுறள் என்று சொல்லி மேற்கோள் காட்டியிருக்கிறார். கீதையைப் பற்றி பேசியிருக்கிறார். ஆன்மீக சாரத்தைத் தனது பலமாகக் கொண்ட நாடான இந்தியாவை, எண்ணிக்கையில் பலமான இந்தியாவை, எந்தத் தத்துவப் பலமும் இல்லாத இங்கிலாந்து, எப்படி வென்றிருக்க முடியும் என்று ஆச்சரியப்படுகிறார் காந்திக்கான கடிதத்தில். காந்தி தனது பாதையாக அகிம்சையைத் தேர்ந்தெடுத்ததில் மிக முக்கியமான பங்கு தல்ஸ்தோய்க்கு இருந்திருக்கிறது. 

https://i.pinimg.com/originals/57/fb/b7/57fbb7cba6d625f3bcfab5540097dba3.jpg

போரும் அமைதியும் நாவலின் ஆரம்பத்தில், ஆன்னா பாவ்லோனா என்ற மேட்டுக்குடி பெண்மணி ஏற்பாடு செய்துள்ள விருந்தில் விரும்பத்தகாத விருந்தாளியாக நுழைகிறான் பியர். முறைகேடாக பிறந்த மகன் என்பதால் பிரபுக்கள் சமூகத்தில் எந்த மரியாதையும் இல்லாமல் வாழும் பியருக்கு, ஒரு கட்டத்தில் தனது தந்தை மூலம் ஏராளமான சொத்துகள் கிடைக்கப் பெறுகிறது. அதே சமூகம் பியரை தங்கத்தட்டில் வைத்துத் தாங்குகிறது. இந்த நாவல் முழுவதும் வரும் பியர், ஆன்மீகமான தேடல் உடையவனாக இருக்கிறான். பியரால், ஒரே சமயத்தில், ஊதாரியாகச் சுற்றி வரும் அனடோலுடனும், மேலான நெறிகளைக் கொண்டவனான ஆண்ட்ரூவுடனும் நட்பு பாராட்ட முடிகிறது.

ஆண்ட்ரூவின் தந்தை நிக்கலஸ் போல்கன்ஸ்கி மாஸ்கோவை விட்டு வெகுதூரம் தள்ளியுள்ள தனது மாளிகையில் வசிக்கிறார். தனது காலத்தில் இருந்து வெகுவாக மாறிவிட்ட உலகின் மீது உள்ள வெறுப்பை எல்லாம் தனது மகள் மேரியிடம் காட்டுகிறார். அவ்வாறு வெறுப்பைக் காட்டுவதினாலயே குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி, அந்தக் குற்றவுணர்ச்சியைப் போக்குவதற்காக மீண்டும் மேரியின் மீது வெறுப்பைக் கொட்டுகிறார். மாறிவிட்ட உலகின் அனைத்து விஷயங்கள் மீதும் நிக்கலஸுக்கு எள்ளல் இருக்கிறது. மனைவியை இழந்துவிட்ட அவருக்கு பெண்கள் தேவையில்லாத சுமையாகத் தெரிகிறார்கள். அவர்களால் எதையும் சரியாகச் செய்யமுடியாது என்று அலுத்துக்கொள்கிறார். அவருடன் வாழ்க்கை முழுவதும் வேலை பார்த்த உதவியாளன், தனது முதலாளியின் கோச் வண்டியில் நகரத்திற்குப் போகும் போது, ‘ஓ.. இந்தப் பெண்கள்!’ என்று தனது முதலாளியின் பிம்பமாய் அலுத்துக்கொள்கிறான். உலகின் ஒழுங்கின்மை எந்த வகையிலும் தன்னை எதுவும் பாதிக்காத வகையில், மகளுக்குக் கணித வகுப்பு, கட்டிட வேலைகள் என்று தொடர்ந்து இயங்கி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பாடுபடுகிறார் நிக்கலஸ்.

நாட்டுப்பற்றும் கடமையுணர்வும் கொண்ட ஆண்ட்ரூ, நெப்போலியனைத் தடுத்து நிறுத்துவதற்கான போரில் ஈடுபட, கர்ப்பிணி மனைவியை தனது தந்தை வசம் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறான். செயற்கரிய செயல்கள் செய்த நெப்போலியனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டவனாய் போரில் ஈடுபடும் ஆண்ட்ரூ காயம்பட்டு விழுகிறான். போரில் மடிந்துகிடக்கும் எண்ணற்றவர்கள் மத்தியில் காயத்துடன் விழுந்துகிடக்கும் ஆண்ட்ரூ, ஆகாயத்தைப் பார்க்கிறான். ‘அங்குதான் எவ்வளவு அமைதி?’ என்று வியக்கிறான். யாரை தனது ஆதர்ச நாயகனாக நினைத்து வாழ்நாள் முழுவதும் ஏங்கினானோ அந்த நெப்போலியன், போர்க்களத்தில் விழுந்து கிடக்கும் தனது அருகே வந்து நிற்கும்போது, ஆண்ட்ரூ ஆகாயத்தின் பேரமைதியை வியந்தபடி கிடக்கிறான்.

ஆண்ட்ரூவுக்கும் நடாஷாவுக்கும் இடையிலான காதல் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இருக்கிறது. முதலில் இருவருக்குமிடையே தீவிரமான காதல் உருவாகிறது. பிறகு, நடாஷாவின் மனமாற்றத்தால் உடைகிறது. அனடோலுடன் வெளியேறுவதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்படுகிறாள் நடாஷா. அனடோல் பற்றிய உண்மைகள் தெரியவர, மனம் உடைந்தவளாய் அறையைவிட்டு வெளியே வராமல் இருக்கிறாள். போரிலிருந்து திரும்பிவரும் ஆண்ட்ரூ நடாஷாவை ஏற்க மறுக்கிறான். அனடோல் இராணுவத்தில் சேர்ந்துவிட்டதை அறிந்து, அவனைத் தண்டிக்க நினைக்கிறான் ஆண்ட்ரூ. ஃபிரெஞ்சுப் படைகளுடனான போரில் படுகாயம் பட்டு மருத்துவமனையில் கிடக்கையில், பக்கத்துப் படுக்கையில் இருக்கும் ஒருவனுக்கு கால் துண்டிக்கப்படுகிறது. அரைகுறை மயக்கத்தில் அவனை உற்றுப் பார்க்கிறான் ஆண்ட்ரூ. அது வேறு யாருமல்ல, அனடோல்தான். அனடோல் தண்டனை பெறுவது மாறா பிரபஞ்ச விதியான அறத்தின் அடிப்படையில் என்றால், ஆண்ட்ரூவும் அதே நிலையில் கிடப்பது எதன் அடிப்படையில்?

மரணப் படுக்கையில் கிடக்கையில், மாஸ்கோவைவிட்டு வெளியேறும் நடாஷா குடும்பத்தினரிடம் வந்துசேர்கிறான் ஆண்ட்ரூ. நடாஷா இரவு பகல் பாராது அவனுக்குப் பணிவிடை செய்து அவனருகேயே கிடக்கிறாள். மீண்டும் தனது காதலை கண்டுகொள்கிறான் ஆண்ட்ரூ. மரணம் அடையும் தறுவாயில் தனது நடாஷா, தனக்குத் திரும்பக் கிடைத்த விசித்திரத்தை நினைத்தபடி படுக்கையில் கிடக்கிறான். மரணம் ஒரு விடுதலை, சந்தித்தே ஆக வேண்டிய ஒரு எளிய நிகழ்வு என்று புரிந்துகொள்கிறான். இப்போது எந்தக் குழப்பமுமின்றி, சாவை எதிர்நோக்கியபடி காத்திருக்கிறான்.

பியரின் காதலோ, ஒரு எளிய தற்செயலாக மலர்கிறது. ஒரு விருந்தில் ஹெலனைச் சந்திக்கும் பியர் காமத்தால் உந்தப்படுகிறான். தனது வழக்கப்படி எந்த முடிவும் எடுக்கமுடியாமல் திணறி, தன்னைச் சுற்றி உள்ளவர்களால் உந்தித் தள்ளப்பட்டு, ஹெலனைத் திருமணம் செய்துகொள்கிறான். ஒரு சில நாட்களிலேயே தான் விரும்பியது ஹெலனை அல்ல என்று புரிகிறது. அதையும் மீறி, அவனுடைய ஆன்மீகத் தேடல்களால் அலைக்கழிக்கப்படுகிறான் பியர். ஒரு இரகசிய மதக்குழுவில் இணைந்து கொஞ்ச காலம் செயல்படுகிறான். தன்னுடைய எஸ்டேட்டில் பண்ணையாட்களாக உள்ளவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கல்விக்கூடங்கள் ஏற்படுத்துகிறான். உண்மையில் கல்வியால் அவர்களுக்கு என்ன பயன் என்று குழம்புகிறான். ஒரு சில நாட்களில் அந்தக் குழுவில் இருந்து வெளியேறுகிறன்.

பியரின் பாத்திரம், ஏறக்குறைய தல்ஸ்தோய்தான். எதிலுமே அமைதியடையாமல் அலைந்து திரியும் பியரின் மீட்சி, பிளாட்டேன் காரடேவ் மூலம் சாத்தியமாகிறது. எளிய குடியானவனான பிளாட்டேன், சந்தர்ப்பச் சூழ்நிலையால் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற நேர்கிறது. பிறகு ஃபிரெஞ்சுப் படையினரிடம் பிடிபட்டு முகாமில் வசிக்கிறான் பிளாட்டேன். ஃபிரெஞ்சுப் படைகள் மாஸ்கோவைக் கைப்பற்றிய பின்னரும் அங்கு இலக்கின்றிச் சுற்றித் திரியும் பியரை, ஃபிரெஞ்சு இராணுவம் கைது செய்து அதே சிறையில் அடக்கிறது. பிளாட்டேன், வாழ்க்கை முழுவதும் கடும் உழைப்பையும் கொடுமையான தனிமையையும் கொண்டவனாக இருக்கிறான். தான் இராணுவத்துக்கு வந்தது மூலம் தனது குடும்பம் நிம்மதியாக வாழ்வதைக் கண்டு, ஒரு எளிமையான விவசாயிக்கு எந்த விதத்திலும் பொருந்தாத, இராணுவப் பணிக்கே மீண்டும் திரும்புகிறான்.

அப்படி இராணுவத்துக்கு திரும்புகின்ற நாளில், பிளாட்டேனின் தந்தை, சகோதரர்கள் அனைவரையும் அழைத்து பிளாட்டேனின் காலில் விழச் செய்கிறார். பிளாட்டேனுக்குப் பிறந்த ஒரே பிள்ளையும் சிறுவயதில் இறந்துவிடுகிறது. ஆனால், அவனுக்கு யார் மீதும், எதன் மீதும் எந்தக் குற்றச்சாட்டுமில்லை. வாழ்க்கையை சிறிய புல் போன்ற எளிமையுடன், உண்மையை மட்டும் துணையாகக் கொண்டு எதிர்கொள்கிறான். தனக்கு என்று எதையும் இறுக்கிவைத்துக் கொள்ளாத அவனுக்கு எந்தத் துன்பமுமில்லை. அவனுக்கு என எந்த நண்பர்களுமில்லை. ஆனால் எதிர்ப்படும் எல்லா மனிதர்களுடனும் அவனால் நட்பு பாராட்ட முடிகிறது, உதவ முடிகிறது. 

முகாமில் பகல் முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு இரவுப் பொழுதில் கதை பேசியும் பாடியும் பொழுதைக் கழிக்கிறான் பிளாட்டேன். தனக்குத் தெரிந்த பாடல்களை தனக்கு வருகின்ற ராகத்தில் பாடுகிறான். குற்றமே செய்யாமல், சிறையில் வாழ்நாள் முழுவதும் கழித்து இறுதியில் குற்றமற்றவன் எனத் தெரிந்து விடுதலை செய்தி வருகின்ற போது, சிறையிலேயே இறந்துவிடுகின்ற ஒரு அப்பாவிக் கைதியைப் பற்றிய கதையை, திரும்பத் திரும்பச் சொல்கிறான். அந்த அப்பாவிக் கைதியை அரசாங்கம் விடுவிக்கும் முன், இறைவன் விடுவித்துவிட்டான் என்று சொல்லி அமைதியில் ஆழ்கிறான். இறப்பு என்பது விடுதலை மட்டுமே என்று பிளாட்டேன் சிந்திக்கிறான். 

மாஸ்கோவை கைப்பற்றிய பிறகு, நீண்ட காலப் போரினால் ஏற்பட்ட மன உளைச்சலினாலும் களைப்பினாலும் ஃபிரெஞ்சுப் படையினர் கட்டுப்பாட்டை இழக்கின்றார்கள். ரஷ்யாவின் படைகள் தொடர்ந்து பின்வாங்கும் தந்திரம் மூலம் ஃபிரெஞ்சுப் படையைச் சோர்வடையச் செய்கிறது. வெற்றியுமில்லாமல், தோல்வியுமில்லாமல், தொடரும் இந்த நீண்டநெடிய போரினால், கடும் மனச்சோர்வுக்கு ஆளாகும் ஃபிரெஞ்சுப் படையினர் தம்மிடம் உள்ள கைதிகளை வேறு இடத்திற்கு நடத்தி அழைத்துச் செல்கிறார்கள். நடக்க முடியாமல் பின் தங்குபவர்களை நாயைச் சுடுவது போல் சுட்டுக்கொல்கின்றனர்.

பிளாட்டேன், இனி நடக்க விரும்பாது ஒரு மரத்தடியில் அமர்கிறான். அவனிடம் வந்து பேசும் ஃபிரெஞ்சு ராணுவத்தினன், துப்பாக்கியை எடுக்கிறான். அதைப் பார்க்கும் பியர், எந்தச் சிந்தனையுமின்றி முன்செல்கிறான். பிளாட்டேன் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அவனிடம் வளரும் நாய் ஊளையடுகிறது. எதற்கு இப்படி இந்த முட்டாள் நாய் ஊளையிடுகிறது என்று எண்ணியபடி முன்செல்கிறான் பியர். மரணம் குறித்தல்ல, மரணம் குறித்தான பிளாட்டேனின் கருத்துக்கு அஞ்சியே பியர் அந்தச் சாவைத் தெரிந்துகொள்ள விரும்பாது முன்செல்கிறான். பிளாட்டேன் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டான் என்று அவனுக்கு உரைக்கும்போது, பல ஆண்டுகளுக்கு முன் பெர்சிய அழகியுடன், தனது பங்களாவின் வராந்தாவில் கூடலில் ஈடுபட்டது அவனுக்கு நினைவு வருகிறது.  சாவின் மர்மத்துடன் காமத்தை இணைக்கிறார் தல்ஸ்தோய்.  

பியரின் தேடல் முடிவுக்கு வருகிறது. பிளாட்டேனிடம் இருந்து, எல்லையில்லா அன்பைக் கற்கிறான் பியர். சக உயிர்களை நேசிக்க எந்தக் காரணமும் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகிறான். மனிதர்களைக் கண்டவுடன் அவனுக்குள் அன்பும் பெருங்கருணையும் ஊற்றெடுக்கிறது. இந்த ஞானத்தை அடையாமல், தனது மனைவி ஹெலன் இறந்துவிட்டாளே என்று பரிதாபப்படுகிறான். அதற்குப் பிறகு அவனுக்கு எந்தத் துன்பமுமில்லை. பிளாட்டேன் தன்னை, பியருக்குள் விதைத்துவிட்டு, சென்றுவிடுகிறான். 

பிளாட்டேன் போன்ற மண்ணுடன் நேரடியான உறவில் இருக்கும் எளிய விவசாயிகளே ஆன்மீக ஞானத்தை எளிதில் அடைவார்கள் என்று தல்ஸ்தோய் காட்டுகிறார். 

*

இளம் வயதிலேயே தாய் தந்தை இறந்துவிட, வயதான பாட்டியுடன் வளர்ந்தார்கள், செண்பகமும் அவளது தம்பி சீனிவாசனும். செண்பகம் மிக எளிமையாக உடை உடுத்துவாள். ஆனால் அந்த எளிமையிலும் அழகு மிளிரும். சீனிவாசன் இளவயதிலேயே தனது குடும்ப நிலையைக் கருத்தில்கொண்டு, படிப்பில் கருத்தாக இருந்தான். பி.காம் முடித்த பிறகு, தொடர்ந்து பல அரசாங்க வேலைகளுக்கு மனு போட்டு, தகுதித் தேர்வுகள் எழுதிக்கொண்டு காத்திருந்தான். ஒவ்வொரு முறையும் சீனிவாசன் தேர்வு எழுதச் செல்லும்போது, செண்பகம் வீட்டுக்கு வருவார். அம்மாவிடம் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, கைமாற்றாக பணம் கேட்பார்.

பிறகு சீனிவாசனுக்கு வங்கி வேலை கிடைத்தது. வேலை கிடைத்த சில ஆண்டுகளில், தன்னுடன் வேலை பார்த்த பெண்ணைக் காதல் திருமணம் செய்தான். குழந்தைகளை கான்வெண்டில் படிக்க வைத்தான். ஹீரோ ஹோண்டா பைக் வாங்கினான். செண்பகம் மட்டும் அதே சாயம் போன தாவணியுடன், இட்லிக்கு மாவு அரைத்து, குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பி, தம்பி மனைவிக்குப் புடவை தேய்த்துக் கொடுத்து, இருவரையும் வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு, கிணற்றடியில் உட்கார்ந்து, தம்பி வாங்கிக் கொடுத்த கையடக்க டிரான்சிஸ்டரில், “என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்” பாட்டு கேட்டாள். நாற்பதைக் கடந்தபின்னரும், செண்பகம் தாவணிதான் கட்டுகிறாள். இப்போதெல்லாம், தனியாக உட்கார்ந்து பேசிக்கொள்ள வேறு கற்றுக்கொண்டுவிட்டாள்.

போரும் வாழ்வும் சோனியாவின் பாத்திரத்துக்கும் செண்பகத்துக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. சுயநலமில்லாத உழைப்பை, எந்தக் குற்றவுணர்ச்சியும் ஏற்படுத்தாத வண்ணம் மற்றவர்களுக்கு வழங்க, ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது.

நடாஷாவின் சகோதரன் நிக்கோலஸ் ரோஸ்டோவுக்கும் சோனியாவுக்கும் இடையிலான உறவு விசித்திரமானது. ஆதரவற்ற குழந்தையாக நிக்கோலஸ் குடும்பத்தினரிடம் வந்து சேர்ந்தவள் சோனியா. பள்ளிப் பருவத்தில் நிக்கோலஸுக்கும் சோனியாவுக்குமிடையே காதல் மலருகிறது. தனது அன்பை நிக்கோலஸ் பிரதிபலிக்கிறானா என்று முதலில் சந்தேகப்படுகிறாள். இருப்பினும் பிரதிபலன் பாராது நடாஷாவின் குடும்பத்தின் மீது தனது அன்பைப் பொழிகிறாள். விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் நிக்கோலஸின் நண்பன் டோல்கோவுக்கு சோனியாவின் மீது காதல் மலருகிறது. மிகுந்த பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் நடாஷாவின் குடும்பத்திற்கு இந்தக் காதல் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

https://i.pinimg.com/originals/02/d5/58/02d558370716def23670466bc78163bd.jpg

ஆனால், சோனியா அந்தக் காதலை நிராகரிக்கிறாள். இந்தப் பரிசுத்தமான அன்பைக் கண்டு நிக்கோலஸ் நெகிழ்கிறான். நிக்கோலஸுக்கு வசதியான பிரபுகுடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்வதன் மூலம், பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீள நினைக்கும் அவனது தாய், சோனியாவின் காதலை விட்டுத்தரும்படி கோருகிறாள். அதை ஏற்று இராணுவத்திலிருக்கும் நிக்கோலஸுக்கு கடிதம் எழுதுகிறாள் சோனியா. முதலில் அதை மறுக்கும் நிக்கோலஸ், காலவோட்டத்தில், மிகவும் வசதியான ஆண்ட்ரூவின் தங்கை மேரியைக் காதலித்து மணம் முடிக்கிறான். அவர்களுடனே தங்கி, அந்தக் குடும்பத்திற்குப் பணிபுரியத் தொடங்குகிறாள் சோனியா.

குற்றவுணர்ச்சியில் தவிக்கும் மேரி, நடாஷாவிடம் சோனியா பற்றி கேட்கும் போது, நடாஷா மிக எளிதாகச் சொல்கிறாள். சோனியா ஒரு அழகான மலட்டு மலர். மற்றவர்களுக்கு உதவியாக இருப்பதிலேயே சோனியா தனக்கான வாழ்க்கையை வாழ்ந்துமுடிக்கின்றவள். ஒருபோதும் தனக்கு என்று அவள் வாழப்போவதில்லை என.

நடாஷாவின் உயிர்த்தோழி சோனியா. ஆனால் நடாஷா அனடோலுடன் ஓடிப்போக எத்தனிக்கையில், இரவு முழுவதும் விழித்திருந்து அதைத் தடுக்கிறாள். அவ்வாறு செய்வதன்மூலம் அந்தக் குடும்பத்திற்கும் தனது காதலானான நிக்கோலஸுக்கும் தனது கடமையைச் செய்வதாக நினைக்கிறாள். எந்த நேரமும், அந்தக் குடும்பத்திற்கு உதவுவதிலேயே தனது காலத்தைக் கழிக்கிறாள். ஆனால் அவள் மீது ஒருவருக்கும் உண்மையான அன்பும் கரிசனமும் தோன்றவில்லை. இதை அழகாக இருவரிகளில் சொல்லிச் செல்கிறார் தல்ஸ்தோய். “நமக்கு உதவி செய்பவர்களை, நாம் காதலிப்பதில்லை. நாம் உதவி செய்பவர்களையே, காதலிக்கத் தொடங்குகிறோம்.” எவ்வளவு சரியான தரிசனம்?

காலம் முழுவதும் உதவிசெய்யும் சோனியா மறுதலிக்கபடுகிறாள். ஆனால் விவசாயிகளின் கலகத்தில் மாட்டிக்கொள்ளும் மேரியை சரியான நேரத்தில் காக்கிறான் நிக்கோலஸ். மேரி மீது நிக்கோலஸுக்கு காதல் மலருகிறது. உதவியை ஏற்கும் போது நமது தன்னகங்காரம் காயப்படுகிறது. உதவி செய்யும்போது தன்னகங்காரம் திருப்தியடைகிறது. அது காதலாக கனிவு காட்டுகிறது. உண்மையில் தல்ஸ்தோய், காதல் தோல்வியால் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த தனது அத்தை ஒருவரை மனதில் வைத்தே சோனியா பாத்திரத்தை உருவாக்கியுள்ளார். 

https://i.pinimg.com/originals/f9/61/d0/f961d0f9308e9222bba66ff84b468cf1.jpg

டோல்கோவின் காதலை, நிக்கோலஸ் மீது கொண்ட பேரன்பினால் மறுக்கிறாள் சோனியா. உடனே டோல்கோவ், நிக்கோலஸை சீட்டாட்டத்திற்கு அழைக்கிறான். நட்பின் அடிப்படையில் என்று நினைத்து அந்தச் சூதாட்ட விடுதிக்குச் செல்லும் நிக்கோலஸை, கொஞ்சம் கொஞ்சமாக மீள முடியாத கடனில் சிக்க வைக்கிறான் டோல்கோவ். கண்ணெதிரே சிறிதுசிறிதாக தனது பணத்தை இழக்கும் நிக்கோலஸின் மனநிலையை ஒரு சிறந்த சூதாடியினால்தான் காட்சிப்படுத்த முடியும். ஆட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் நிக்கோலஸ் எவ்வாறு தன்னை இழக்கிறான் என்று விவரிக்கிறார் தல்ஸ்தோய். நாற்பத்து மூன்றாயிரம் ரூபிள்களை டோல்கோவிடம் இழக்கிறான் நிக்கோலஸ். நாற்பத்து மூன்றாயிரம் என்பதை ஆட்டம் தொடங்கும்போதே மனதில் வைத்துக்கொள்கிறான் டோல்கோவ். ஏன் என்றால், 43 என்பது அவனது வயதையும் சோனியாவின் வயதையும் கூட்டினால் வரும் எண்.

ஏற்கனவே தனது ஆடம்பரத்தால் பொருளாதாரச் சிக்கலில் வீழ்ந்திருக்கும் நிக்கோலஸின் தந்தை, சூதாட்டத்தினால் ஏற்படும் கடனையும் ஏற்கிறார். நிக்கோலஸ் மனம் ஒடிந்து இராணுவத்திற்கே திரும்புகிறான். பிறகு வசதியான மேரியைத் திருமணம் செய்துகொள்கிறான். தன்னிடமுள்ள சொத்துகளை விட இருமடங்கு கூடுதலான கடனுடன் செத்துப்போகிறார் நிக்கோலஸின் தந்தை. தனது தந்தை வழிச்சொத்துகளை மறுதலிப்பதன்மூலம் கடனையும் ஏற்க வேண்டியதில்லை என்று அவனது நண்பர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். அதனை ஏற்காமல், சொத்துகளை ஏற்று, அனைத்து கடன்களையும் அடைக்கிறான் நிக்கோலஸ் .

ஃபிரெஞ்சுப் படைகள் ஒவ்வொரு நகரமாக வெற்றிகொண்டு உள்ளே நுழையும்போது, நிலச்சுவான்தார்களான பிரபுக்கள் தமது பண்ணையைக் கைவிட்டு நகரத்தை விட்டுவெளியேறுகிறார்கள். அப்படி மேரியும் வெளியேற எத்தனிக்கையில் எழும் விவசாயிகளின் கலகத்தை அழகாக சித்தரித்திருக்கிறார் தல்ஸ்தோய். பண்ணையை விட்டு வெளியே செல்லமுடியாதபடி, விவசாயிகள், மேரியைச் சிறைபிடிக்கிறார்கள். ரஷ்ய இராணுவத் தளபதியான நிக்கோலஸ் படைகளும் பின்வாங்கியபடியே உள்ளது. மேரியின் பண்ணைக்குச் செல்லும் நிக்கோலஸ், கூடி நிற்கும் விவசாயிகளிடம் சற்று குரலை உயர்த்தியவுடன், விவசாயிகளே, விவசாயிகளின் கலகத்தை முறியடிக்கிறார்கள். “இதெல்லாம் தப்பு பார்த்தியா?” என்று பேசியபடி கலைந்துசெல்கிறார்கள். மேரியின் பொருட்களை வண்டியில் ஏற்ற உதவுகிறார்கள். “பார்த்து, உடையாம ஏத்துப்பா” என்று குரல் கொடுத்தபடி அக்கறையுடன் பொருட்களை ஏற்றுகிறார்கள். காலங்காலமாக அடிமைத்தனத்தில் வாழ்ந்த அவர்களது கலகம், நொடிப்பொழுதில் உடைந்து விழுகிறது.

மேரியைத் திருமணம் செய்துகொண்டு, தனது புது வாழ்வைத் துவக்கும் நிக்கோலஸுடன் செல்கிறாள் சோனியா. தனது காதலனது குடும்பத்திற்குச் சேவகம் செய்துகொண்டு, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை வளர்த்துக்கொண்டு தனது மிச்ச வாழ்வைக் கழிக்கிறாள். 

வாழ்வின் பொருளின்மையை அல்லது வாழ்வின் பொருளை, புரிந்துகொள்ள முடியாமையின் துயரத்தை, மாபெரும் போரின் பின்னணியில் சொல்லி முடிக்கிறார் தல்ஸ்தோய். கதை, திரைக்கதை ஏதுமற்ற நீண்ட நெடிய நாடகத்தின் ஒரு பகுதியாக நாவலின் பாத்திரங்கள் வருகிறார்கள். அவர்கள் காலங்காலமாக இங்கு வாழ்ந்து மடிந்த மனிதக் கூட்டத்தின் நுட்பமான பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். அவர்கள் சண்டையிடுகிறார்கள், சந்தேகம் கொள்கிறார்கள், காதலிக்கிறார்கள், துரோகம் இழைக்கிறார்கள், தியாகம் செய்கிறார்கள், மடிகிறார்கள். நாவல் முடிகையில் ஒரு மாபெரும் வெறுமையை நாம் உணர்கிறோம்.

1 comment

புத்தகக்குறி – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020 November 22, 2020 - 4:14 pm

[…] மானுடத்தின் மீதான பெருங்காதல்: போரும… – ரா. செந்தில்குமார் […]

Comments are closed.