பழந்தமிழகத்தில் மெய்யியல்

0 comment

கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் பூதவாதம் பிராமணர்கள் கற்கத்தகுந்த மதிப்புடைய தத்துவமாக இருந்தது எனவும் அதனைப் படிப்பதற்காக வடஇந்தியத் தத்துவ அறிஞர்கள் தமிழகம் வந்தனர் எனவும் பேராசிரியர் சக்கரவர்த்தி நயினார் அவர்கள் கூறும் செய்தி, புத்தர் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பூதவாதம் என்கிற பொருள்முதல்வாதக் கருத்துகள் மிகவும் புகழ்பெற்ற, மிகவும்செல்வாக்குடைய கருத்துகளாக இருந்து வந்தன என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும் தென்னாட்டில் வழங்கிவந்த தத்துவங்களில் மிகவும் தொன்மையானது உலகாயதம் என்று தென்னாட்டுத் தத்துவங்களை ஆய்வு செய்த தத்துவ அறிஞர் தட்சிண நாராயண சாத்திரி அவர்கள் கூறுகிறார். அதனையே பேராசிரியர் சக்கரவர்த்தி நயினார் அவர்களும் கூறுகிறார். இவர்கள் தமிழ் இலக்கியச் சான்றுகளை ஆய்வு செய்யாமலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இத்தகைய முடிவிற்கு அவர்கள் வருவதற்குச் சமற்கிருத நூற்சான்றுகளே காரணமாக இருந்துள்ளன என நா. வானமாமலை அவர்கள் தனது நூலில் தெரிவித்துள்ளார். (1)

பேரரசுக் கொள்கையின் காரணமாக, உலகாய்தம், பூதவாதம், எண்ணியம், சிறப்பியம், ஆசிவகம் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகளின் வலிமையான அடித்தளம் சங்கம் மருவிய காலத்தில் (கி.மு. முதல் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடைக்காலம்வரை கிட்டத்தட்ட 3 நூற்றாண்டுகள்) மிகவும் பலவீனம் அடைந்திருந்தது. அதன் காரணமாக சங்கம் மருவிய காலத்தில் வைதீகச் சிந்தனையின் ஆதிக்கம் ஏற்படத் தொடங்கியது. இருந்த போதிலும், தமிழ்ச் சமூகத்தின் அடித்தளமாக, அறிவியலை அடிப்படையாகக் கொண்ட பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகளே இருந்து வந்தன. ஆனால் அது பலவீனமடைந்திருந்தது. அதன்பின் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் களப்பிரர்களின் ஆட்சியதிகாரத்தின் கீழ் ஆதரவுபெற்ற சமண பௌத்த மதங்களின் மெய்யியல் கருத்துகள் தமிழ்ச் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்ற கருத்துகளாக இருந்து வந்தன. உலகாயதம், பூதவாதம், எண்ணியம், ஆசிவகம் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள், ஆரம்பகாலத்தில் வைதீகக் மெய்யியல் கருத்துகளாலும், அதன்பின் களப்பிரர்களின் ஆட்சியதிகாரத்தாலும், சமண, பௌத்த மெய்யியல் கருத்துகளாலும்  தாக்குதலுக்கு உள்ளாகி, தமிழ் சமூகத்திலிருந்து அவை சிறிது சிறிதாக வெளியேற்றப்பட்டு வந்தன.

களப்பிரர்களின் ஆரம்பகால வன்முறையும், அதற்குப் பிந்தைய அதன் ஆட்சியதிகாரமும், களப்பிரர்களின் ஆதரவு பெற்ற சமண பௌத்த கருத்துகளும் முன்பே பலவீனமடைந்திருந்த தமிழ்ச் சமூகத்தின் பொருள்முதல்வாத மெய்யியல் அடித்தளத்தை அடியோடு அழித்தொழித்தன. அவை சம்பந்தமான நூல்கள் அனைத்தும் முழுமையாக இல்லாதொழிந்தன. தமிழகத்தின் சமூக அடித்தளமாக 1000 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த, அறிவியலை அடித்தளமாகக்கொண்ட பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள் அதன்பின் தலையெடுக்கவே இல்லை எனலாம். எனினும் பக்தி காலகட்டம் வரை பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள் தமிழ் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்ற கருத்துக்களாக இருந்து வந்தன.

தமிழகத்தில் வைதீக மெய்யியல் கருத்துகள் சங்ககாலத்தின் இறுதிக்காலம் முதல் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்றுச் சங்கம் மருவிய காலம் முதல் தமிழகம் முழுவதும் பரவிப் பொது மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரு கருத்தியலாக ஆகிக்கொண்டிருந்தது. அச்சமயத்தில் சமண பௌத்த மதங்களின் மெய்யியல் சிந்தனைகளும் மக்களிடத்தில் ஆங்காங்கு பரவத் தொடங்கி இருந்தன. கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் சமண பௌத்த மதங்கள் களப்பிர ஆட்சியின் முழு ஆதரவைப் பெற்று தமிழகத்தில் நன்கு காலூன்றத் தொடங்கின. அதற்கேற்றவாறு பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளை உள்வாங்கிக்கொள்வதும் அதன் சமூகப் பொருளாதார அடித்தளத்தை ஆட்சியதிகாரம் கொண்டு அழித்தொழிப்பதும் நடந்தேறியது. இருந்த போதிலும், தமிழ்ச் சமூகத்தில் பக்தி காலகட்டம்வரை, பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகளைவிட, ஒரு மேலாதிக்கம் பெற்ற மெய்யியல் கருத்தாக அவைகளால் உருவாக இயலவில்லை. பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள் தொடர்ந்து தமிழ் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்ற கருத்துகளாக இருந்து வந்தன. ஆனால் அதன் பொருளாதார அடித்தளம் களப்பிரர் காலத்தில் அழிக்கப்பட்டிருந்தது. அதன்  தத்துவார்த்த அடித்தளம் சமண பௌத்தக் கருத்துகளால் உள்வாங்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக சமண பௌத்த வீழ்ச்சிக்குப்பின் பக்தி காலகட்டத்தில் வைதீக மெய்யியல் கருத்துகள் தமிழ் சமூகத்தில் மேலாதிக்கம் பெறத் தொடங்கின.

யுவான் சுவாங்க்:

கி.பி. 7ஆம் நூற்றாண்டு வாக்கில் (கி.பி. 640) தமிழகம் வந்திருந்த யுவான் சுவாங்க் அவர்கள் மலைக்கோட்டைப் பாண்டிய அரசில் இருந்த பொது மக்களின் சமயநிலை குறித்து,  “சிலர் உறுதியான கோட்பாடுகளை நம்பினார்கள்; சிலர் சமய மறுப்பாளர்களாக இருந்தனர்; அவர்கள் ஆன்மீக விடயங்களைத் தெரிந்து கொள்வதை உயர்வாகக் கருதவில்லை; வணிக நோக்குடனும், இலாபங்களையே குறிக்கோளாகக் கொண்டும் இருந்தனர். பெண்களின் கன்னிகா மடங்கள் பல இங்கு (இடிபாடுகளுடன்) காணப்படுகின்றன. இவற்றின் சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. மத நம்பிக்கை உள்ள ஒருசிலர் இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான பிராமணக் கோயில்கள் இருக்கின்றன. அதிக எண்ணிக்கையில் நிகிரத்தப் பிரிவைச் சேர்ந்த சமணத்துறவிகள் உள்ளனர். நகரத்தின் (மதுரையாக இருக்கலாம்) கிழக்குப்பகுதியில் ‘சங்காராமா’ எனப்படும் பௌத்தப்பள்ளி காணப்பட்டது. இதன் தலைவாயிலும் கூடமும் மட்டுமே எஞ்சியுள்ளன. இவற்றிலும் புதர்கள் மண்டி அடித்தளம் மட்டுமே எஞ்சியுள்ளது. இது அசோக மன்னரின் இளைய சகோதரர் மகேந்திரரால் கட்டப்பட்டது. இதன் கிழக்கில் தூபம் ஒன்று காணப்படுகிறது. இதன் பெரிய மதில்கள் மண்ணில் புதைந்துள்ளன. கவிந்த கூரைப்பகுதி மட்டுமே எஞ்சி உள்ளது. இது அசோக மன்னரால் கட்டப்பட்டது”  எனக் சொல்வதாக வின்சென்ட் ஆர்தர் சுமித் அவர்கள் கூறுகிறார் 2.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த நிலைமை இது எனக் கூறுகிறார் யுவான் சுவாங். பக்தி இயக்கம் தீவிரமாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் இது. மக்கள் இன்னும் பொருள் முதல்வாதக் கருத்துகளில் ஈடுபாடு கொண்டிருந்தனர் எனத் தெரிகிறது. ‘மத நம்பிக்கை உள்ள ஒருசிலர் இருக்கிறார்கள்’ என்கிறார் யுவான் சுவாங்க். அதாவது பொதுமக்களில் ஒருசிலர் மட்டுமே மத நம்பிக்கையோடு இருக்கின்றனர் என்கிறார் அவர். அதே சமயம் ‘சிலர் சமய மறுப்பாளர்களாக இருந்தனர்’ என்கிறார். இந்தச் சமய மறுப்பாளர்கள், பண்டைய பொருள்முதல்வாத மெய்யியல் கொள்கையை உடைய நாத்திகர்களாக இருக்கலாம். ‘சிலர் உறுதியான கோட்பாடுகளை நம்பினர்’ என்கிறார் அவர். அவர்கள் மத நம்பிக்கை உடையவர்கள் அல்ல. ஆனால் உறுதியான கோட்பாடுகளை நம்பினர் என்கிறார் அவர். உறுதியான கோட்பாடுகள் என்பது உலகாயதம், பூதவாதம், எண்ணியம் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் கோட்பாடுகளாக இருக்கலாம்.

பொது மக்களில் பலர் வணிக நோக்கோடும், இலாப நோக்கோடும் இருந்துள்ளனர். நூற்றுக்கணக்கில் பிராமணக் கோயில்கள் இருந்தன என்கிறார் அவர். பக்தி இயக்கத்தின் விளைவாகக் கோயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது எனலாம். சமணத்துறவிகள் அதிகளவில் இருந்தனர் என்கிறார் அவர். பௌத்தம் தமிழகத்தில் அழிந்த பின்னரும் 13ஆம் நூற்றாண்டுவரை சமணம் ஆங்காங்கு தமிழகத்தில் இருந்தது என்கிற செய்தி இதன் மூலம் உறுதிப்படுகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டு வாக்கில் சமணம் ஓரளவு வலுவாக இருந்ததன் காரணமாகவே அதனை அழிப்பதில் பக்தி இயக்கம் தீவிரம் காட்டியது.

பக்தி இயக்கம் தமிழ்ச் சமூகம் முழுவதும் பரவி, அவ்வியக்கம் தமிழகத்தில் வலுவாகக் காலூன்றிய காலமான கி.பி. 8ஆம், 9ஆம் நூற்றாண்டில்தான் இந்நிலை மாறி வைதீகச் சிந்தனையின் ஆதிக்கம் தமிழகம் முழுவதும் பரவி நிலைத்து விடுகிறது. ஆனால் 7ஆம் நூற்றாண்டிலேயே பௌத்த, சமண நிறுவனங்கள் அழிவை நோக்கிச் செல்லத்தொடங்கிவிட்டன என்பதைப் பௌத்தப் பள்ளிகளும் அதன் கன்னிகா மடங்களும் புதர்கள் மண்டி இடிபாடுகளுடன் இருந்தன என்பது அதனைக் காட்டுகிறது. பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள் தமிழ்ச் சமூகத்தில் வலிமை பெற்றிருந்தவரை தமிழ்ச் சமூகம் நல்ல வளர்ச்சி நிலையில் இருந்தது. சமண பௌத்த மதக் கருத்துகளின் ஆதிக்கத்திற்கு முன்பே, சங்ககாலத் தமிழ்ச் சமூகம் பரவலான கல்வியறிவை, பரவலான எழுத்தறிவைக் கொண்டிருந்தது. தொழில் நுட்ப வளர்ச்சியிலும், உற்பத்தித் திறனிலும், உலகளாவிய வணிகத்திலும் தொடர்ந்து வளர்ச்சி பெறும் சமூகமாக இருந்து வந்தது.

சங்கம் மருவிய காலத்தில் இவ்வளர்ச்சி மேலும் வளர்ந்து உச்சகட்டத்தைத் தொட்டது. அதே சமயம் சமூக மேல்தளத்தில் ஏற்பட்ட கருத்து மோதல்களும், சமூக அடித்தளத்தில் ஏற்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், உற்பத்தி முரண்பாடுகளும் வளர்ந்து உச்சநிலையை அடைந்தன. மணிமேகலைக் காப்பியம் சமூக மேல்தளத்தில் கடுமையான கருத்து மோதல்கள் நடைபெற்றன என்பதையும், சிலப்பதிகாரக் காப்பியம் சமூக அடித்தளத்தில் ஏற்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், வணிகர்கள் அரசனுக்கு எதிராக நின்றதையும் தெளிவு படுத்துகின்றது.

பேரரசுக் கொள்கை:

கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் மூவேந்தர்களிடம் இருந்த பேரரசுக் கொள்கையின் தாக்கம் ஆதிக்கக் கண்ணோட்டத்தை வளர்த்து, தமிழகத்தின் வடஎல்லையில் பாதுகாப்பு அரணாகவும், கொங்கு, தொண்டை மண்டலங்களில் சுதந்திரத் தனி  அரசுகளாகவும் இருந்து வந்த பல குறுநில மன்னர்களையும் வேளிர்களையும் அழித்து ஒழித்தது. அவர்களின் நகர்மைய அரசுகள் இல்லாது போயின. சுதந்திரத் தனி நகர அரசுகள் அழிக்கப்பட்டதும்; அதன்பின்னர் சங்கம் மருவிய காலத்தில் சமூகத்தளத்தில் ஏற்பட்ட கருத்து மோதல்களும்; ஏற்றத்தாழ்வுகளும்; தமிழ்ச்சமூகம் ஒரு தேக்கமடைந்த,  புரையோடிய சமூகமாக ஆகிப்போயிருந்ததும், இறுதியாக சர்வதேசக் காரணங்களால் ஏற்பட்ட தமிழக வணிகத்தின் வீழ்ச்சியும்; தமிழகத்தின் வடக்கே இருந்த சாதவ கன்னர்களின் வீழ்ச்சியும்; களப்பிரர் படையெடுப்புக்குக் காரணமாகி, தமிழகத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது எனலாம். இவை அனைத்திற்கும் காரணமான பேரரசுக் கொள்கைக்கு வைதீகச்சிந்தனை பேரளவான ஆதரவை வழங்கியது.

சர்வதேசக் காரணங்களும் தமிழகத்தின் வீழ்ச்சியும்:

தமிழ் அரசுகள் உரோம் பேரரசுடன் மிகப்பெரிய அளவில் வணிகம் செய்து வந்தன. கி.பி. 150 வாக்கில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட முசிரி – அலெக்சாண்ட்ரியா ஒப்பந்தப்படி, ஒரு தமிழ் வணிகன், ஒரு கப்பலில் ஒருதடவை செய்த வணிகத்தின் மதிப்பு இன்றைய அளவில் 100 கோடிக்கும் மேல் வருகிறது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீசருக்குபின் மார்க்கசு அரேலியசின் (காலம் கி.மு. 31 – கி.பி. 180 வரையான) காலகட்டம் உரோம் பேரரசின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இக்கால கட்டத்தில் உரோம் பேரரசு தமிழகத்தோடு மிகப்பெரிய அளவில் வணிகம் செய்து வந்தது. அதன்பின் உரோம் பேரரசு  வீழ்ச்சி அடையத் தொடங்கியது. கி.பி. 235 முதல் கி.பி. 284 வரை உரோம் பேரரசு மிகப்பெரிய அரசியல் வீழ்ச்சிக்கு உள்ளானது. அக்காலகட்டத்தில் உரோமுடனான தமிழக வணிகம் நின்று போனது. பலவிதங்களிலும் முன்பே புரையோடிப் போயிருந்த தமிழகம், கிபி. 235க்குப்பின் உரோம் மூலம் கிடைத்து வந்த வணிக வருவாயை இழந்ததால், மிகப்பெரிய அளவிலான பொருளாதார வீழ்ச்சியை அடைந்தது. இக்காலகட்டத்தில்தான், கி.பி. 250க்குப்பின் களப்பிரர் படையெடுப்பு தமிழகத்தில் நடந்தது. அதன் காரணமாக 1500 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவந்த பழம்பெரும் தமிழக நாகரிகம், மிகப்பெரிய வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் உள்ளானது. அதில் இருந்து தமிழகம் மீளவே இல்லை எனலாம்.

தமிழ்ச்சிந்தனை மரபின் வீழ்ச்சி:

இந்தியத் தத்துவத்தில் பொருள்முதல்வாத மெய்யியல் குறித்துப் பேசும் அனைவரும் இனக்குழு காலத்திய மந்திர தந்திரக் கூறுகள், பூதவாதம் என்கிற உலகாய்தம், கபிலரின் எண்ணியம், கணாதரின் வைசேடிகம், அளவையியல் என்கிற நியாயம், ஆசிவகம், யோகம் ஆகியவைகளைப்பற்றிப் பேசியுள்ளனர். இதில் யோகம் என்பது ஒரு தத்துவம் அல்ல; அது ஒரு பயிற்சி முறைகளின் தொகுப்பு. யோக சூத்திரங்களை எழுதிய பதஞ்சலி ஒரு தொகுப்பாசிரியர்தான். சிந்துவெளி காலத்திலிருந்து இப்பயிற்சிகள் வழக்கிலிருந்தன 3. மந்திர தந்திரக் கூறுகள் என்பது ‘போலச்செய்தல்’ மூலம் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியும், தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்கிற இனக்குழு கால நம்பிக்கையாகும். அவற்றின் தத்துவக்கூறுகள் பூதவாதம் என்கிற உலகாயதத்தில் இணைக்கப்பட்டுவிட்டன.  ஆகவே பூதவாதம் என்கிற உலகாயதம், கபிலரின் எண்ணியம், கணாதரின் வைசேடிகம், நியாயம், ஆசிவகம் ஆகியவற்றில் நியாயவியல் தவிர பிற அனைத்துப் பொருள்முதல்வாத மெய்யியல் தத்துவங்களும் மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபில் தோன்றியவையே என்கிறார் க. நெடுஞ்செழியன்.  நியாயவியலின் அளவையியலும் இன்னபிறவும் உலகாயதம், எண்ணியம், சிறப்பியம் ஆகியவற்றில் அடக்கம். ஆகவே க. நெடுஞ்செழியன் அவர்களின் கருத்துப்படி இந்தியாவின் பொருள்முதல்வாத மெய்யியல் வரலாறு என்பது, தமிழகத்தில் தோன்றி சிறப்புடன் இயங்கி வந்த பூதவாதம் என்கிற உலகாயதம், எண்ணியம், சிறப்பியம், ஆசிவகம் ஆகிய நான்கு பொருள்முதல்வாத மெய்யியல் தத்துவங்களின் வரலாறு தான் எனக் கூறலாம். நமது கருத்துப்படி நியாயவியலின் கோதமனாரும் தமிழரே. ஆகவே க. நெடுஞ்செழியன் அவர்களின் கூற்று மறுக்கப்பட முடியாததாகும்.

கி.மு. 3ஆம் நூற்றாண்டுவரை இந்திய அளவில் புகழ் பெற்றவையாக இருந்த இத்தத்துவங்கள் கிறித்துவ காலத்துக்குப்பின் தமிழக அளவில் மட்டும் ஓரளவு செல்வாக்கு மிக்கவனாக இருந்து வந்தன. கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழகத்திலும் செல்வாக்கு இழந்து, இல்லாது போயின. கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியும், பல்லவர் ஆட்சியும், வடஇந்தியாவில் குப்தர் ஆட்சியும் நடந்தன. இவைகளால் இந்தியா முழுவதும் வைதீகமயமாதலும்,  சமற்கிருதமயமாதலும் கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டுவரப்பட்டு, கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குள், அறிவியல் அடித்தளத்தைக்கொண்ட பொருள்முதல்வாத மெய்யியல் தத்துவங்கள்  இல்லாது போயின. தமிழகத்தில் ஏற்பட்ட களப்பிரர் ஆட்சியின் காரணமாகவும், பொளத்த, சமண, வைதீக மத ஆதிக்கங்களின் காரணமாகவும், சமற்கிருதமயமாக்கலின் காரணமாகவும் மூலச் சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு தனக்கான அடித்தளமாக இருந்த அறிவியல் அடிப்படையைக்கொண்ட பொருள்முதல்வாத மெய்யியலை முழுமையாக இழந்தது எனலாம். கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குப்பின் இந்தியாவிலிருந்த அனைத்தும் சமற்கிருத மயமாக்கப்பட்டு, அனைத்துத் தத்துவங்களையும் வைதீக மரபின் கீழ் கொண்டுவரும் பணி வெற்றிகரமாக நிறைவேறியது. தத்துவமே இல்லாத வேதம், தத்துவங்களிலேயே தலைமையானதாகவும் கேள்விக்கு அப்பாற்பட்டதாகவும்  ஆக்கப்பட்டது.

பழந்தமிழகத்தில் கல்வியும் பொருள்முதல்வாதமும்:

சமண, பௌத்த மதக் கருத்துகளின் ஆதிக்கத்திற்குப் பின்னரே தமிழ்ச் சமூகம் பரவலான எழுத்தறிவையும், கல்வியறிவையும் பெற்றிருந்தது எனக் கருதப்படுகிறது. அது உண்மையல்ல. சமண, பௌத்த மதக் கருத்துகள் மிக அதிக ஆதிக்கம் பெற்ற வட இந்தியாவிலும், தமிழகம் தவிர்த்த பிற தென்னிந்தியப் பகுதியிலும் பரவலான கல்வியறிவோ, எழுத்தறிவோ இருக்கவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்வது நல்லது. மேலும், சமண, பௌத்த மதக் கருத்துகள் சங்கம் மருவிய காலத்திற்குப் பின்னர் களப்பிரர்கள் காலத்தில் தான் தமிழகத்தில் ஆதிக்கம் பெற்றன. ஆனால் அதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே தமிழகம் பரவலான எழுத்தறிவையும் கல்வியறிவையும் பெற்றிருந்தது.

தமிழ்ச் சமூகத்தில் மிக நீண்டகாலமாக இருந்து வந்த பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகளும், தமிழகத்தின் நகர்மைய அரசுகளில் இருந்த, சுதந்திரமான தனி அரசுகளும் தான் இந்தப் பரவலான கல்வி அறிவுக்கும், எழுத்தறிவுக்கும் காரணமாகும். தமிழகத்தின் தொழிநுட்பம்,  உற்பத்தித் திறன் வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, உலகளாவிய வணிக வளர்ச்சி போன்றவைக்கும் இவையே காரணம் ஆகும். இதனை பண்டைய கிரேக்க நகர அரசுகளின் வளர்ச்சியோடும், ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் இத்தாலியில் உள்ள வெனிசு, நேபிள்சு போன்ற சுதந்திரத் தனி நகரங்களில் ஏற்பட்ட வளர்ச்சியோடும் ஒப்பிடலாம்.

எனவே சங்க இலக்கியங்களைக் கொண்டு மட்டும் சங்ககால வரலாற்றைக் கண்டறிவது என்பது குருடர்கள் யானையைப் பற்றி அறிந்துகொண்டது போலாகிவிடும். சங்ககாலத்தில் வைதீக மதக் கருத்துகள், சமண பௌத்த மதக்கருத்துகள் போன்ற பல கருத்துமுதல்வாத மெய்யியல்கள் இருந்த போதிலும், தமிழ்ச் சமூகத்தின் அடித்தளமாகப் பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துகளே அன்று இருந்தன. இன்றைய நவீன சமூகத்தில் பல கருத்துமுதல்வாத மெய்யியல் கருத்துகள் இருந்த போதிலும், அதன் அடித்தளமாக இருப்பது பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகளே. அதைப் போன்றுதான் சங்ககாலத்திலும் இருந்தது. அதனைச் சங்க இலக்கியம் கொண்டு மட்டும் கண்டறிவது இயலாது. அக்காலத் தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல், மொழியியல் போன்ற பல்வேறு துறைகளின் ஆய்வுகள் மூலமே அதனைக் கண்டறிய இயலும்.

சங்ககாலக் கல்வெட்டியல் சங்ககாலத்தில் சமண பௌத்த மதக் கருத்துகள் ஆதிக்கம் பெற்றிருந்தன என்ற தோற்றத்தைத் தருகிறது. சங்க இலக்கியங்களோ வைதீக மதக் கருத்துகள் ஆதிக்கம் பெற்றிருந்தன என்ற தோற்றத்தைத் தருகிறது. இவை இரண்டுமே உண்மையல்ல! தமிழகத்தில் சங்ககாலத்தில் அறிவியலை அடித்தளமாகக்கொண்ட பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகளே ஆதிக்கம் பெற்ற கருத்தியலாக இருந்து வந்தது. இவைகளை அகழாய்வுகள் கொண்டு ஓரளவு உறுதிப்படுத்த முடியும். தமிழகத்தில் சங்ககால ஊர்கள் பல தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்றவற்றில் இதுவரை ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான ஆய்வே நடந்துள்ளது; மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் நடந்த ஆய்வு பழந்தமிழகத்தில் நகர நாகரிகம் இருந்தது என்பதையும் மதச்சார்பற்ற சிந்தனைகளே பழந்தமிழகத்தில் இருந்தன என்பதையும் வெளிக்கொண்டு வந்துள்ளன. முழுமையான அதிக அளவிலான அகழாய்வுகள் மூலம் மட்டும்தான் தமிழகத்தின் முழுமையான வரலாற்றை வெளிக்கொண்டு வர இயலும். தமிழகத்தில் கிடைத்த பல ஆயிரம் கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளும் இன்னும் படியெடுத்துப் படிக்கப் படவில்லை. ஆகவே அதிக அளவிலான அகழாய்வுகள் செய்யப்படவும்  தமிழகக் கல்வெட்டுகளையும், ஓலைச் சுவடிகளையும் படியெடுத்துப் படிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மாநில, மத்திய அரசுகள் எடுக்கவேண்டும். இவற்றைச் செய்வதன் மூலம் மட்டுமே பழந்தமிழக வரலாறு குறித்த புரிதல் முழுமையடைய முடியும்.

மெய்யியலில் தமிழக அறிஞர்கள் – முனைவர் க. நெடுஞ்செழியன்:

தொல்கபிலர், பக்குடுக்கை நன்கணியார், கணாதர், நரிவெரூத்தலையார், பூரணகாயபர் போன்ற இந்திய அளவில் புகழ்பெற்ற மெய்யியல் அறிஞர்கள் தமிழர்கள்தான் என முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள் தக்க சான்றுகளுடன்  உறுதிப்படுத்தியுள்ளார் என்பதை முன்பே குறிப்பிட்டோம். இம்மெய்யியல் அறிஞர்கள் குறித்து அவர் தரும் தகவல்களைக் காண்போம்.

தொல்கபிலர்:

“பார்ப்பனர்கள், பார்ப்பனத்தன்மை ஆகியவற்றின் செல்வாக்கும் பாதிப்பும் மிகக் குறைவாக இருந்த இந்தியப் பிரதேசங்களில்தான் முதல்முதலாக நம் வாழ்வு என்பது நமக்குப் புரியாத புதிராய் இருப்பதை பகுத்தறிவு கொண்டு விடை தேடும் முயற்சி செய்யப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டால்தான் எண்ணியத்தின் மூலத்தொடக்கத்தை விளங்கிக்கொள்ள முடியும். எண்ணியம் சாராம்சத்தில் நாத்திகமானது மட்டுமில்லை, வேதத்திற்கும் விரோதமானது. அதன் உள்ளடக்கம் வேதச் சார்புடையதன்று. பார்ப்பனர்களின் சம்பிரதாயத்திற்கும், மரபுக்கும், ஆட்படாமல் இருப்பது”  எண்ணியத்தின் தோற்றம் குறித்து கார்பே அவர்கள் கூறும் கருத்தின் சுருக்கம் இதுவாகும். சாங்கியம் எனப்படும் எண்ணியத்தின் தோற்றுநரான தொல்கபிலரின் பாடல் சங்க இலக்கியத்தில் உள்ளது எனவும், அவரைத் தொல்கபிலர் என சங்க இலக்கியம் பாராட்டுகிறது எனவும், எண்ணியக் கோட்பாட்டின் மூலச்சுவடுகள் அனைத்தும் தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது எனவும் இவைகளின் காரணமாக, கார்பே அவர்கள் குறிப்பிடும் அந்த இந்தியப் பிரதேசம் தமிழ்நாடுதான் எனவும் கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன் 4. தொல்கபிலர் பாடியதாக 6 சங்கப் பாடல்கள் உள்ளன. அவை, அ: 282; குறு: 14; நற்: 114, 276, 328, 399 ஆகியன. மேலே தரப்பட்ட சான்றுகளின் மூலம் எண்ணியத்தின் மூலவரான தொல்கபிலர் தமிழர்தான் என்கிறார் பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன்.

பக்குடுக்கை நன்கணியார்:

புறம் 194ஆம் பாடலைப்பாடிய பக்குடுக்கை நன்கணியார், இந்திய அளவில், ‘சாங்கியம்’ என்கிற எண்ணியக் கோட்பாட்டின் தலைவராக கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இருந்தார். இவரது சங்கமே இந்திய அளவில் அன்று ஒரு பெரிய சங்கமாக இருந்தது. இந்த எண்ணியம் என்பதையே, அணுவியக் கோட்பாடாக இவர் வளர்த்தெடுத்தார். பாலி மொழியில் உள்ள பௌத்த இலக்கியமான ‘சாமண்ண பால சூக்தம்’ இவர் வரலாற்றை அறிய உதவுகிறது. பௌத்த மரபில், பக்குடக் கச்சாயனா, பக்குடுக்கக் காச்சாயனா, கணியாரா என்றெல்லாம் இவர் அழைக்கப்படுகிறார். இந்திய மொழிகளில் எண்ணியத்தின் கடவுள் மறுப்பிற்கும், ஆசிவகத்தின் கடவுள் மறுப்பிற்கும் எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவது இவரின் புறம் 194ஆம் பாடலே என்பது வியப்பூட்டும் விடயமாகும். புத்தரின் சமகாலத்தில் வாழ்ந்தவர்களில் புத்தரைப் போலவே மக்களால் அதிகளவு மதிக்கப்பட்ட ஆறு அமணர்களில் இவரும் ஒருவராவார். இவை முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள் தரும் தகவல்களாகும் 5.

கணாதர்:

கணி+ஆதன் = கணியாதன் என்கிற தமிழ்ப் பெயரே கணாதர் என வடமொழி வடிவம் கொண்டதாக ஆகியது. கணி ஆதன் என்கிற இவரால் ‘சிறப்பியம்’ என்கிற வைசேடிய கோட்பாடு ஆரம்பிக்கப்பட்டது 6. இந்த கணாதர், வைசேடிக சூத்திரத்தின் ஆசிரியர். அணுவியலின் தனித்த மெய்யியல் வடிவமே கணாதரின் சிறப்பியம். பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சியைத் தருக்கவியல் அடிப்படையில் நிலைநாட்டுவதுதான் அணுவியலின் தனித்தன்மை. இது குறித்துத் தமிழில் அமைந்த ஒரு  அரிய, சிறுநூல்தான் “அகத்தியத் தருக்கச் சூத்திரம்” என்கிற 20 நூற்பாக்களைக் கொண்ட நூல் ஆகும். இதன் காலத்தை அறிய இயவில்லை. 1908இல் கோ. வடிவேலு செட்டியார் அவர்களால் தமிழில் உரை கண்ட தருக்க பரிபாடை என்கிற நூலின் தொடக்கத்தில் இந்த 20 நூற்பாக்களும் இடம் பெற்றுள்ளன. இந்நூல் ஒரு அரிய செல்வம். இந்நூலை அணுவியம் எனக் கருதி இந்நூலுக்கு அறிஞர் குணா அவர்கள் உரைவிளக்கம் தந்துள்ளார். இவை முனைவர் க. நெடுஞ்செழியன் தரும் தகவல்கள் 7.

பூரணகாயபர்:

ஆசிவகத் தோற்றுநர்களில் ஒருவராகிய பூரணகாயபர் ஒரு தமிழர்தான் என  பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் கூறுகிறார்.. “ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியல்” எனும் தனது நூலில் 30 பக்கங்களில் தமிழ் இலக்கியங்கள், தமிழ் கல்வெட்டுகள் பிற இந்தியத் தமிழகத் தத்துவநூல்களின் துணைகொண்டு ஆய்வு செய்து பூரணகாயபர் தமிழர்தான் என்பதை அவர் உறுதி செய்துள்ளார். அதற்கான காரணங்களாக பின்வரும் விளக்கங்களை அவர் அதில் கூறியுள்ளார்.  ஆசிவகத்தில் நிறக்கொள்கையை அறிமுகப்படுத்திய பூரண காயபர் தமிழகக் கல்வெட்டுகளில் காயபன், செங்காயபன், மூத்த அமணன் செங்காயபன், வெண்காயபன் எனச் சுட்டப்பட்டுள்ளார் என்கிறார் அவர். புத்தரின் தலைமாணாக்கர் ஆனந்தர், ஆசிவக நெறியில் கழிவெண்பிறப்பு நிலையை அடைந்த மூவருள் ஒருவர் பூரணகாயபர் என்கிறார். அவரது கூற்றை தமிழ் இலக்கியமான நற்றிணையில் (பாடல் எண்கள்; 250, 369) வரும் மதுரை ஓலைக்கடையத்தனார் நல்வெள்ளையார் எனும் பூரணகாயபரின் பெயர் உறுதிப்படுத்துகிறது. தமிழ் இலக்கியங்களில் வரும் நல்வெள்ளையார் என்பது கழிவெண்பிறப்பு நிலையை அடைந்தவர்களைக் குறிக்கிறது. மதுரை ஓலைக்கடை என்பது ஆசிவகச் சமயத்தின் தலைமை இடமாக இருக்கலாம். மாங்குடி மருதனார் எழுதிய “மதுரைக்காஞ்சி” மதுரையில் ஆசிவகப்பள்ளிகள் இருந்ததை உறுதி செய்கிறது. தமிழ் மரபுக்கு ஏற்ப பூரணரும் தாழியில் தவம் இருந்தநிலையில் உயிர்விட்டுள்ளார். இவை பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் தரும் தகவல்கள். 8

கோதமனார்:

அளவையியல் எனப்படும் நியாயவாதத்தை தோற்றுவித்தவரின் பெயரும், புறம் 366ஆம் பாடலைப் பாடியவரின் பெயரும் கோதமனார் ஆகும். புறம் 366ஆம்   பாடல் அறவோனாக இருந்த ஒரு அரசனின் மகனுக்கு அறிவுரை கூறப் பாடியதாகத் தெரிகிறது. அறவோன் மகன் என்பதால் பிற்காலத்தவர் பாடப்பட்டவரைத் தருமபுத்திரன் என எழுதியுள்ளனர். அவருடைய காலத்தை அறிய இயலவில்லை. புறம் 366ஆம் பாடலைப் பாடிய கோதமனார் தான் நியாயவாதத்தை தோற்றுவித்தவர் எனலாம். பாடலின் கருத்தும், பெயரின் பொருத்தமும் இருவரும் ஒருவரே என்பதைக் காட்டுகின்றன. மேலும் இப்பாடல் நிலையாமை குறித்துப் பேசுவதும், இதன் திணை காஞ்சியாகவும், இதன் துறை பெருங்காஞ்சியாகவும் இருப்பதும் இதனைப் பாடியவர் ஒரு தத்துவ அறிஞர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

கோதமனார் எழுதியதுதான் நியாய சூத்திரம். கோதமனாரை கவுதமர் எனவும் சட்டோபாத்தியாயா குறிப்பிடுகிறார். இந்த நியாயவியல், சிறப்பியம் என்கிற வைசேடிகத்தோடு இணைக்கப்பட்டு நியாயவைசேடிகம் என்றே அழைக்கப்பட்டது. நியாயவைசேடிகத்தின் மூலவர்களான கணாதர், கோதமனார் ஆகியவர்களின் வரலாறு தெரியாது எனவும் இவ்விருவருடைய தத்துவங்களின் தனிச்சிறப்பான அம்சங்கள் இந்திய தத்துவ மரபுக்குப் புதியவை எனவும் சட்டோபாத்தியாய கூறுகிறார். 9 இந்தியத் தத்துவ மரபுக்குப் புதியது எனும்பொழுது அது வட இந்திய மரபில் தோன்றவில்லை என்றாகிறது. நியாயவைசேடிகத்தில் உள்ள சிறப்பியம் என்கிற வைசேடிகம் தமிழரான கணாதரின் படைப்பாகும். ஆகவே வட இந்திய மரபுக்குப் புதியது எனவும் கோதமனாரின் வரலாறு தெரியாது எனவும் சட்டோபாத்தியாய அவர்கள் குறிப்பிடுவதால் சிறப்பியம் போன்று நியாயசூத்திரமும் தமிழ் மரபைச் சார்ந்ததுதான் எனக் கருத வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த அடிப்படையிலும் கோதமனார் தமிழர்தான் எனலாம்.  கௌதமனார் தனது நியாய சூத்திரத்தில் எண்ணியக்கோட்பாட்டிற்கு எடுத்துக்காட்டாகப் பக்குடுக்கை நன்கணியாரின் புறம் 194ஆம் பாடலை மேற்கோள் காட்டுவது இவர் ஒரு தமிழர்தான் என்கிற கருத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. 10

அளவையியலும் தமிழ் மரபும் – க.நெடுஞ்செழியன்:

தொல்காப்பியம், திருக்குறள் இரண்டும் எண்ணிய, யோக, உலகாய்த மெய்யியலையும், அவற்றிற்குரிய அளவை இயலையும் அடியொற்றி அமைந்தவை எனவும் திருக்குறளில் அதன் அளவை இயலே அடிப்படையாய் அமைந்துள்ளது எனவும் க. நெடுஞ்செழியன் கூறுகிறார். மேலும் எண்ணியம், யோகம், உலகாயதம் ஆகிய மெய்யியல்களுக்குரிய அளவை இயலை அடியொற்றி அமைந்த இலக்கியங்கள் இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே அமைந்துள்ளன என்பதும், அவ்விலக்கியங்களும் அகத்திணை இலக்கியங்களே என்பதும் தெளிவு எனவும், தொல்காப்பியர் கூறும் அகத்திணை மரபுகள் அனைத்தும் அம்மெய்யியல்களின் அளவை இயலை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இலக்கியங்கள் என்பது உறுதி எனவும், இதனைத் தமிழர் அளவை இயலும் அகத்திணை மரபுகளும் எனும் தனி ஆய்வாகவே காணலாம் எனவும் கூறுகிறார் க.நெடுஞ்செழியன். 11 இவற்றின் காரணமாகவும் கோதமனாரின் அளவையியல் எனப்படும் நியாயவியல் தமிழ் மரபைச்சேர்ந்ததுதான் எனலாம். தமிழர் அளவையியல் மரபு நன்கு வளர்ச்சியடைந்திருந்ததின் காரணமாகவே இடைக்காலத்தில் தின்னாகர், தருமகீர்த்தி போன்ற இந்திய அளவில் புகழ்பெற்ற அளவையியல் அறிஞர்கள் தமிழகத்தில் தோன்றினர். கோதமனார், கோதமர், கௌதமனார், கவுதமர் ஆகிய பெயர்கள் அனைத்தும் நியாய சூத்திரத்தின் ஆசிரியரையே குறிக்கின்றன.

நரிவெரூஉத் தலையார்:

அசிதம் = நரி, கேசம் = தலைமுடி என மொழிபெயர்த்து நருவெரூஉத் தலையார் என்கிற தமிழ்ப் பெயரை பாலி முதலான வடமொழிகளில் அசித கேச கம்பாளர் என்பர். இவரை மணிமேகலை ‘நரிமகன் அல்லனோ கேச கம்பாளன்’ எனச் சுட்டும். ஆதலால் அசிதகேச கம்பாளர் என்பவர் தான் நரிவெரூஉத் தலையார் ஆவார். அதனை நரிவெரூஉத் தலையார் பாடிய சங்கப்பாடல்களைக் கொண்டும் பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள். உறுதி செய்கிறார். 12 இந்தியாவில் சாங்கியம் என்கிற எண்ணியத்தைத் தோற்றுவித்தவர் தொல்கபிலர்; வைசேடிக சூத்திரம் என்கிற நூலை எழுதி சிறப்பியத்தைத் தோற்றுவித்தவர் கணாதர்; சாங்கியம் என்கிற எண்ணியக் கோட்பாட்டின் தலைவராக இருந்து அணுக்கோட்பாட்டினை வளர்த்தெடுத்தவர் பக்குடுக்கை நன்கணியார்; உத்தேசவாதம் என்கிற சிதைவுக் கோட்பாட்டை உருவாக்கியவர் அசித கேச கம்பாளர் எனப்படும் நரிவெரூத்தலையார்; தற்செயல் கோட்பாட்டை உருவாக்கியவர் பூரண காயபர்; அளவையியல் எனப்படும் நியாயவாதத்தைத் தோற்றுவித்தவர் கோதமனார். இவர்கள் அனைவரும் சங்ககாலத் தமிழகத்து மெய்யியல் அறிஞர்கள் ஆவர்.

இடைக்காலம் – தின்னாகர்:

சங்ககாலத்தில் மட்டுமில்லாது அதன் தொடர்ச்சியாக இடைக்காலத்திலும் தமிழ் அறிஞர்கள் மெய்யியலில் இந்திய அளவில் முன்னோடியாக இருந்தனர் என்பதை நா.வானமாமலை அவர்கள், தனது தமிழர் பண்பாடும் தத்துவமும் என்ற நூலில் தெரிவித்துள்ளார். தமிழரான தின்னாகரே பௌத்த தருக்கவியலின் முதன்மையான ஆசிரியர். இவரைப்பற்றி பாரத்சிங் உபாத்யாயா, “பௌத்த தருக்கவியல் வரலாற்றில் முதன்மையான பெயர் தின்னாகர். இவர்தான் பௌத்த தருக்கவியலின் தந்தை…. இந்திய நாட்டின் தலைசிறந்த அளவைநூற் புலவர் இவர் என்பதில் ஐயமில்லை. இவரது பெயரைக் குறிப்பிடாத அளவை நூல் இவரது காலத்திற்கு பின் இல்லை எனலாம்” என்கிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட தருக்க நூல்களை எழுதியதாக திபெத்தியச் சான்றுகள் கூறுகின்றன. புகழ்பெற்ற சில நூல்கள் இன்றும் உள்ளன. தின்னாகருக்கு முன் அளவை நூல்கள் எதுவும் இல்லை. இவரது காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு. 13

தர்மகீர்த்தி:

தின்னாகரைப் பின்பற்றி அளவை இயலை வளர்த்தவர் தர்மகீர்த்தி. இவரும் தமிழரே. இவர் நாளந்தா சென்று அங்கு பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த தமிழரான தருமபாலரிடம் பௌத்த அறிவியல்வாத நூல்களைக் கற்றார். தின்னாகரின் மாணவரான ஈசுவர சேனரிடம் தருக்கவியலைக் கற்றார். தர்மகீர்த்தி அவர்களை, ‘இந்தியாவின் கான்ட்’ என அழைக்கிறார் செர்பாட்சுகி என்கிற இரசிய அறிஞர். இவர் காலம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு. இந்த இருவர் போக, தருமபாலர் நாளந்தா பல்கலைகழகத்தின் தலைவராக இருந்து பௌத்த மத நூல்களை மாணவர்களுக்கு போதித்து வந்தவர். திக்நாகர், தருமபாலர், போதி தருமர் ஆகியோர் காஞ்சியில் வாழ்ந்து பின் நாளந்தாவில் அறம் போதித்தவர்கள் என்பதைக் குறிப்பிடுகிறார் தெ.பொ.மீ. தின்னாகர், தருமபாலர் போன்றோர் தமிழராக இருந்தும் அனைத்தையும் சமற்கிருதத்தில் தான் எழுதினர். கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சமற்கிருதம் இந்தியாவின் பொதுமொழியாகவும் அறிவியல் மொழியாகவும் ஆகியிருந்தது.  சங்ககாலத்தில் மட்டுமில்லாது அதன் தொடர்ச்சியாக இடைக்காலத்திலும் தமிழ் அறிஞர்கள் மெய்யியலில் இந்திய அளவில் முன்னோடியாக இருந்தனர் என்பதை மேற்கண்ட தகவல்கள் உறுதி செய்கின்றன.

சங்ககாலத் தமிழகத்து மெய்யியல் அறிஞர்களில் தொல்கபிலரும், கணாதரும் மிகவும் புகழ்பெற்றவர்கள். தொல்கபிலரின் காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டாகும். பக்குடுக்கை நன்கணியார், பூரணகாயபர் ஆகியவர்களின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டாகும். அவர்களுக்குப்பின் வந்த கணாதர், கோதமனார் ஆகியவர்களின் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு எனலாம். நரிவெரூஉத் தலையாரின் காலம் கி.மு. 4ஆம் நூற்றாண்டாகும். இடைக்கால மெய்யியல் அறிஞர்களான, தின்னாகர், தருமபாலர், திக்நாகர், தர்மகீர்த்தி, போதி தருமர் ஆகியவர்களின் காலம் கி.பி. 5ஆம், 6ஆம் நூற்றாண்டாகும்.

சங்க காலத்தில் கல்வி:

கல்வியின் வளர்ச்சியும், பொருள்முதல்வாத மெய்யியலின் வளர்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்ததாகும். சங்ககாலக் கவிஞர்கள், அரசன் முதல் ஆண்டி வரை அன்றைய தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தரப்பிலும் இருந்துள்ளனர் என்ற செய்தி அன்றைய தமிழ் சமூகத்தில், பரந்துபட்ட அளவில், அனைத்து தரப்பு மக்களும் கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதை உறுதி செய்கிறது. தற்காலத் தொல்லியல் சான்றுகளும் அதை உறுதி செய்கின்றன. இந்து நாளிதழ், 24.6.2010 இல் தொல்லியல் கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், சங்க காலத் தமிழகத்தில், மிகப் பரந்த அளவில், சாதாரண மக்கள் கூட கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதை உறுதி செய்கிறார். ஒதுக்குப் புற கிராமப் பகுதியில் வாழும் கள் விற்பவர்கள் கூடத் தனது பானையில் தனது பெயரை எழுதி வைக்கும் அளவு தமிழகம் பரந்த அளவிலான கல்வி அறிவை சங்க காலத்தில் கொண்டிருந்தது என்பதை எடுத்துக் காட்டுகளோடு அவர் விளக்குகிறார்.

தென்னிந்தியத் தொல்பொருள் ஆய்வுக்கழகம், 22.11.2005 இந்து நாளிதழில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது சம்பந்தமாக வெளியிட்ட ஒரு செய்தியில், இந்தியாவில் மொத்தம் சுமார் 1,00,000 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன என்றும், அதில் தமிழகத்தில் மட்டும் 60,000 கல்வெட்டுகள் உள்ளன என்றும், அந்த 60,000ல், 5% மட்டுமே பிறமொழிக் கல்வெட்டுகள் என்றும், மீதி உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் தமிழ் கல்வெட்டுகளே என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையும், இந்தியாவில், ஒப்பீட்டளவில் பண்டையத் தமிழகம் பரந்த அளவில் கல்வி அறிவு பெற்றிருந்தது என்பதை வலியுறுத்துகிறது. எனினும் பண்டையத் தமிழ் சமூகத்தில் கல்வி முறை எப்படி இருந்தது என்பதை அறிய இயலவில்லை.

“தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்துள்ள பானை வரிகளும் பொறிப்புகளும் எழுத்தறிவு மிகப்பழங்காலத்திலேயே தமிழகம் முழுவதும் பரவிவிட்டதைத் தெரிவிக்கின்றன. தொகைநூல் புலவர் பட்டியலில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகப் பிரிவினர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதில் இருந்தும், தமிழ்நாட்டில் பரவியிருந்த எழுத்தறிவினை நன்கு அறியலாம்” என்கிறார் பேராசிரியர் அ.பாண்டுரங்கன். 14

பண்டைய வட இந்தியாவில் அல்லது பிற இந்தியப் பகுதிகளில் கல்வெட்டுகளில் அதுவும் அரசால் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் மட்டுமே எழுத்துப் பொறிப்புகளைக் காண முடிகிறது. ஆனால் தமிழகத்தில் சாதாரண மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகளில், ஈமச்சின்னங்களில், மதிப்புமிக்க, மதிப்பற்ற தொல்பொருட்களில், நாணயங்களில், மோதிரங்களில் என எண்ணற்ற சாதனங்களில் எழுத்துப் பொறிப்புக்களைக் காண முடிகிறது. அதுபோன்றே பல நிலைகளில் உள்ள குடிமக்கள் சமயத் துறவிகளுக்கு வழங்கிய பாறைகளிலும் எழுத்துப் பொறிப்புகளைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தைத் தவிர பிற இடங்களில் இதுபோன்ற நிலை இல்லை. இத்தரவுகள் மிக மிகச் சாதாரண மனிதர்கள் முதல் உயர்நிலையில் உள்ளவர்கள் வரை எழுதப்படிக்கத் தெரிந்திருந்தனர் என்பதைக் காட்டுகிறது.

அது போன்றே மிகமிகச் சாதாரண மக்களும் சங்க இலக்கியத்தின் படைப்பாளிகளாக இருந்துள்ளார்கள் என்பது சாதாரண மக்கள் எழுதப்படிக்க மட்டுமல்ல சங்க இலக்கியம் போன்ற உயர்நிலை இலக்கியங்களைப் படைக்கும் அளவு கல்வியறிவு கொண்டிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. ஆனால் இதற்கான கல்வி முறை எப்படி இருந்தது, அது எவ்வாறு அனைத்து மக்களுக்கும் கிடைத்தது, அதுவும் உயர்தரமான சங்க இலக்கியங்களைப் படைக்குமளவான கல்வியறிவை, புலமையை அவர்கள் எப்படிப் பெற்றார்கள் என்பது ஒரு பெரும் கேள்வியாக உள்ளது. வட இந்தியாவில் இருந்தது போன்ற குருகுலக் கல்வி சங்ககாலத் தமிழகத்தில் இருக்கவில்லை. ஆனால் அக்கல்விமுறை சிறந்ததாகவும், வேறுபட்டதாகவும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதமாகவும் இருந்துள்ளது.

“அன்றைய கல்வி, கற்பவனைச் சான்றோன் ஆக்கியது; அவனை உலக வாழ்வுக்குத் தகுதிப்படுத்தியது; கற்றோர் அவையிலும், ஊர்ப்பொது மன்றங்களிலும் முந்தியிருக்கச் செய்தது; அது வாழும் உலகை அதன் இன்பங்களை உறுதிப்படுத்துவதாக இருந்தது; மனித ஆற்றலில் விளங்கும் தன்னிறைவைக் கொண்டு வந்தது; அதில் குழந்தைகளின் மீதான  அன்பும், இல்லறத்தின் மீதான பற்றும் இருந்தது; காதல் செய்ய, மணம் புரிய, இல் வாழ, பொதுநலம் பேணி பிறர்க்கென வாழ இக்கல்வி கற்போரைத் தகுதிப் படுத்தியது; தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பொதுவாழ்வு அதன் உள்ளார்ந்த மதிப்புக் கருதி பரிந்துரைக்கப்பட்டது” என்கிறார் சேவியர் தனிநாயகம் அடிகளார். 15

கல்வி கற்றத் தமிழ்ப் புலவன் புகழ்பெற்ற அரசனுக்குச் சமம் என ஒரு சோழ வேந்தனிடம் நேருக்கு நேர் கூறுகிறார் கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககாலத் தமிழ் புலவர் கோவூர்கிழார்,

“வடியா நாவின் வல்லாங்குப் பாடிப் பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி …வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீதறிந் தன்றோ இன்றே:  …..ஓங்குபுகழ் மண்ணாள் செல்வம் எய்தியநும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே”   – புறம்: 47.

“வழுவான சொற்களைச் சொல்லாத நாவால் வள்ளல்களைப் பாடி, பெற்ற பொருளால் தாமும் மகிழ்ந்து, சுற்றத்தினருக்கும் தந்து மகிழ்வர். தங்களது அறிவுக்கும் திறமைக்கும் உரிய பாராட்டுக்காகவும் பரிசுக்காகவும் ஏங்குவார்களே அன்றி, பிறருக்குத் தீங்குவர கனவிலும் நினைக்காதவர்கள். ஆதலால் புகழை உடைய நிலத்தை ஆளுகின்ற, பெருஞ்செல்வத்தை உடைய வேந்தனைப் போன்றவர்கள் கல்வி கற்ற புலவர்கள்” என்கிறார் கோவூர்கிழார். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்கிற பெரும்புகழ் பெற்ற பாண்டிய மன்னனோ தனது அவைக்களத் தலைமைப் புலவரான மாங்குடி மருதனாரால் தான் பாடப்படுவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறான். பெரும்புகழ்க் கபிலர் கல்வி கற்ற புலவனை இகழ்ந்ததால் இருங்கோவேள் என்கிற குறுநில மன்னனின் முன்னோர்கள் இரு பெரும் நகரங்களை இழந்தனர் என்கிறார். சங்ககாலத் தமிழ் சமூகத்தில் கல்வி கற்ற புலவர்கள் பேரளவு மதிக்கப்பட்டனர் என்பதற்கு இதுபோன்ற பல சான்றுகளைக் காணலாம். ஆகவே சங்ககாலச் சமூகத்தில் கல்வியும் கற்றவனும் மதிக்கப்பட்டதால் அனைவரும் கல்வி கற்றவர்களாக இருந்தனர். அன்றைய தமிழ் சமூகத்தில் பேரறிவும், பெரும் புலமையும் உடையவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு தரப்பட்டது.

பாணர்கள், பாடினிகள் போன்றவர்கள் வழிவழியான குடும்ப மரபின் காரணமாக இக்கல்வி அறிவைப் பெற்றனர் எனலாம். ஆனால் மற்ற சாதாரணக் குயவர்கள், தச்சர்கள், கருமான்கள் போன்ற பலதரப்பட்ட தொழில் செய்வோரும், பிற தமிழ் சமூகத்தின் சாதாரண மக்களும், இவர்களின் சாதாரணக் குடும்பப் பெண்களும் இந்த புலமைக் கல்வியை எப்படிப் பெற்றனர் என்பது மேலும் நன்கு ஆய்வு செய்யப்படவேண்டிய விடயமாகும். வெண்ணிக் குயத்தியார் போன்ற சாதாரணக் குயவர்குலப் பெண்கள்  இந்தப் புலமைக் கல்வியைப் பெற்றது குறித்து விரிவாக ஆய்ந்தறிந்து கண்டறிவதன் மூலமே நமது பண்டைய தமிழகத்தின் கல்விமுறையை அறிந்துகொள்ள இயலும். அவர் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு. அன்று சமணப் பள்ளிகளோ, புத்தப் பள்ளிகளோ இல்லை. மாதவி போன்று, பரத்தமை நிறுவனத்தில் இருந்த பெண்கள் பல்வேறு கலைகளில் சிறந்திருப்பது என்பதும், உயர்கல்வியைப் பெற்றிருப்பது என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதும், புரிந்துகொள்ளக் கூடியதுமாகும். ஆனால் இது போன்ற பரத்தமை நிறுவனங்கள் தமிழகத்தில் ஓர் உயர் வளர்ச்சியை கி.மு. முதல் நூற்றாண்டுக்குப்பின்தான் வந்தடைந்தன எனலாம். ஆனால் அந்தக் காலத்தில் இருந்து உயர்குடிப் பெண்கள் கல்வியறிவும் கலை அறிவும் பெறுவது குறைந்து போனது. மூவேந்தர்கள் பேரரசுகளாக ஆகியதும், வைதீகச் சிந்தனையின் கருத்துகள் பரவியதும் இதற்கான காரணங்கள் எனலாம். அதனால்தான் மாதவி அளவு கண்ணகி கல்வியறிவும் கலைஅறிவும் பெறவில்லை. ஆனால் கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முன்புவரை உயர் குடிப்பெண்களும், வெண்ணிக்குயத்தியார் போன்ற சாதாரணப் பெண்களும் சங்க இலக்கியத்தைப் படைக்கும் அளவு கல்வி அறிவு கொண்டிருந்தனர்.

கிரேக்கத்தில் ஏதென்சில் உள்ள உயர்குடியைச் சேர்ந்த குடும்பப் பெண்களைவிட பரத்தமை நிறுவனங்களில் இருந்த பெண்கள்தான் கல்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்கினர். கிரேக்க உயர்குடிப்பெண்கள், அதன் பொற்காலத்தில் கல்வியறிவுகூட இல்லாதவர்களாகவும் குடும்ப பணிகளை செய்வதற்கான ஒரு தலைமை வேலைக்காரர்களாகவுமே நடத்தப்பட்டனர். கிரேக்கத்தில் மிகச் சிறந்த பெண் என்பவள் ஒரு பொதுமகளாக இருந்தாக வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் ஸ்பார்ட்டாவில் நிலைமை வேறுபட்டதாக இருந்தது. அங்கு பரத்தமை மதிக்கப்படவில்லை. உயர்குடிப் பெண்கள் நல்ல குணமும் மதிப்பும் உடையவர்களாகக் கருதப்பட்டனர் என்கிறார் ஏங்கெல்சு. 16 ஆதலால் ஏதென்சில் சாதாரணக் குடும்பங்களில் இருந்து வந்த பெண்கள் கல்வியறிவோ, கலையறிவோ பெற்றிருக்கவில்லை. பரத்தமைப்பெண்கள்தான் அங்கு கல்வியறிவும், கலையறிவும் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் தமிழகத்தில் சாதாரணக் குடும்பப் பெண்கள் கூட கல்வியறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர். ஆனால் மூவேந்தர் அரசுகள் பேரரசுகள் ஆன காலமான கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்குப் பின் இந்நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது எனலாம்.

கி.மு. 150க்குப் பின் சமண, பொளத்த மடங்கள் தமிழகத்தில் உருவாகியிருந்த போதிலும் கிறித்துவ சகாப்தத்துக்குப்பின்தான் அவை கல்வி கற்பிக்கும் கூடங்களாக உருவாகின. அவையும் கூட பெருநகரங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தன. ஆனால் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தின் சிற்றூர்களில் வாழும் சாதாரண மக்கள் கூட எழுதப் படிக்கக் கற்றிருந்தனர். அதில் சிலர் சங்க இலக்கியம் போன்ற உயர்தரமான இலக்கியத்தைப் படைக்கும் அளவு படைப்பாளிகளாக இருந்தனர். தொகை நூல்களில் இருக்கும் கல்வி, கற்றல், புலமை பற்றிய குறிப்புகளும், கல்வி, கற்றல், புலமை பற்றிய கருத்தாக்கங்களும் சமயம் சார்ந்ததாக இருக்கவில்லை என அறிய முடிகிறது. ஆக மிக நெடுங்காலங்களுக்கு முன்னரே தனக்கான ஒரு கல்விமுறையைத் தமிழகம் கொண்டிருந்தது, அதுவும் பரவலாக அனைத்து மக்களும் அக்கல்வியைப் பெறுமளவு அக்கல்விமுறை இருந்தது என்பது தான் மிகப்பெரிய விடயமாகும். தமிழகத்தின் கல்வி முறைக்கும் அதன் மெய்யியல் சிந்தனையின் வளர்ச்சிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியடைந்த, மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு தனக்கே உரித்தான தனித்துவமான கல்விமுறையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளது எனலாம். மிகப் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் நடைபெறும் விரிவான அகழாய்வுகள் தான் இப்புதிர்களுக்குப் பதில் தர இயலும்.

ஆகவே சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் மிகமிகச் சாதாரண மக்கள் முதல் உயர்குல வேளிர் வரை அனைத்துத் தரப்பினரும், பரந்து பட்ட அளவில் கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதோடு, சங்க இலக்கியம் போன்ற உயர்தரமான இலக்கியங்களைப் படைக்கும் அளவு கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது உறுதியாகிறது. அன்றைய தமிழ்ச் சமூகம், பல துறைகளிலும் பரவலான அளவில், உயர் வளர்ச்சியை அடைந்திருந்தது என்பதற்கு, இக்கருத்து ஒரு உறுதியான சான்றாக உள்ளது எனலாம்.

பார்வை:

  1. பேராசிரியர் நா. வானமாமலை, ‘தமிழர் பண்பாடும் தத்துவமும்’ அலைகள் வெளியீட்டகம், ஜூலை-2008, பக்: 136,137.
  2. அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரரசர் – விசென்ட் ஆர்தர் சுமித், தமிழில் சிவ. முருகேசன், பதிப்பு-2009, பக்: 39, 40.
  3. தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, உலகாயதம், தமிழில் தோதாத்ரி, ழிசிஙிபி, ஜூன் 2010 பக்: 210-216.
  4. முனைவர் க. நெடுஞ்செழியன், தமிழர் இயங்கியல் – தொல்காப்பியமும், சரக சம்கிதையும். பக்: 20-22.
  5. முனைவர் க. நெடுஞ்செழியன், சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும், 2009, பக்: 21.
  6. முனைவர் க. நெடுஞ்செழியன், சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும், ஆசிரியர் உரை, அக்டோபர்-2009.
  7. முனைவர் க. நெடுஞ்செழியன், தமிழர் இயங்கியல் – தொல்காப்பியமும், சரக சம்கிதையும், 2009, பக்: 54, 55
  8. முனைவர் க. நெடுஞ்செழியன், ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியல் 2002, பக்: 25-55.
  9. தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, இந்திய நாத்திகம், தமிழில் – சாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2013, பக்: 261
  10. முனைவர் க. நெடுஞ்செழியன், தமிழர் இயங்கியல் – தொல்காப்பியமும், சரக சம்கிதையும், பாலம், 2009, பக்: 25
  11. தமிழர் இயங்கியல் – தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்:44-52.
  12. முனைவர் க. நெடுஞ்செழியன், பதிப்பாசிரியர் முனைவர் சக்குபாய், ஆசிவகமும் ஐயனார் வரலாறும், பாலம், 2014, பக்: 25-30.
  13. நா.வானமாமலை, தமிழர் பண்பாடும், தத்துவமும், அலைகள் வெளியீட்டகம், 2008, பக்: 96, 126-130
  14. பேராசிரியர் அ.பாண்டுரங்கன், ‘தொகை இயல்’ பக்: 194.
  15. சேவியர் தனிநாயகம் அடிகளார், ‘பண்டையத் தமிழ் சமூகத்தில் கல்வி’ டிசம்பர் – 2009, பக்: 64, 65.
  16. ஏங்கெல்சு, “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” பாரதி புத்தகாலயம், பதிப்பு-2008, பக்: 80, 81.