பங்காளி

by கமல தேவி
1 comment

கொமாரசாமி கவுண்டர் கல்யாணம் முடித்ததும் இந்த ஊருக்கு வந்து வயல் வாங்கித் தன் பிழைப்பைத் தொடங்கியபோது பெருமாள் நாயக்கர்தான் இந்த மண்ணின் நுணுக்கங்களைச் சொல்லித் தந்தார். இது பச்சை மலையடிவார பூமி. இங்கே பெய்தலிற்கும் காய்தலிற்கும் இடையில் தடுமாறும் வானம்.

“வெளியூரு… வெளியாளுங்கன்னு நெனச்சி மலைக்க வேணாம். சுத்தி வயக்காரங்க நாங்க இருக்கோம். விவாசயம் பண்றவங்க எல்லாம் பங்காளியாட்டம் இருந்தாதான் ஒருத்தருக்கொருத்தர் உபகாரம்…” என்று சொல்லோடு நில்லாமல் ஒவ்வொரு விதைப்புப் பட்டத்திற்கும் இந்த மண்ணின் புஞ்சை விவசாயத்தைச் சொல்லிக் கொடுத்தார்.

“கவுண்டரே…. வெங்காயக்காட்டு பாத்திகள ஏஞ்சும்மா போட்டு வச்சிருக்கீரு…. நாலு கொண்டகடலைய, கொத்தமல்லிய தெளிச்சு விடுங்க… இல்லன்னா மொளகா நாத்து, கத்திரி நாத்து தாரேன். ஊனி வச்சா பொம்பளையாளுக வூட்டு செலவுக்கு அலைய வேணாம் பாருங்க…” என்பார்.

தென்னந்தோப்பு உருவாக்கும்போது கூடவே இருந்தார்.

“மரம் வளந்து நெழல் கட்ற வரைக்கும் சும்மா விட்றாதீரு… கருணக்கிழங்கு, சேனை, மயிர்கிழங்கு, வெத்தலவள்ளின்னு அங்கங்க ஊனுங்க. நல்ல வெல கிடைக்கும்… நம்ம திங்கவும் ஆகும்” என்று சிரிப்பார்.

அவரின் சிரித்துக்கொண்டிருக்கும் முகம் மங்கும் வேளையில் பசுங்கன்று அடிவயிற்றிலிருந்து “ம்மா…” என்று எழுப்பிய ஓங்காரக் குரலால் அந்தக் களத்து வீட்டின் கருக்கல் கலைந்தது. கனவிலிருந்து கொமாரசாமிக்கு விழிப்புத் தட்டியது. அவர் மனசின் நினைப்புகளால் இந்த இரண்டு நாட்களாகக் கனவும் நனவுமாகத் தொல்லைப்பட்டுக்கொண்டிருந்தார்.

கயிற்றுக்கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தார். பச்சை நிறத்தில் நீண்ட கால்சட்டையில் ஆறடிக்கு மேலான உயரம்.

பெருமாளிடம் பேசியதை எல்லாம் மீண்டும் மீண்டும் அசைபோட்டுக்கொண்டிருந்தார். பிசைந்து பிசைந்து எடுத்ததால், ஒட்டிய ஈரம் காயாத நிலமாக மனம் புழுதியாகிப் பறக்கவும் முடியாமல் நீரோடு குழையவும் முடியாமல் உதிரியாகி நின்றது. உதிரியாகிப் பதமாக நிற்கும் தன்னை ஏற்க முடியாத அவர் மனம் வேண்டுமென்றே காரணங்களை உண்டு பண்ணிக்கொண்டிருந்தது.

விற்பனை நிலையத்திற்குப் பால் கொண்டுசெல்லும் பாதையில் பெருமாளின் நிலம் இருந்தது. அதில் பாதியைக் கொமாரசாமிக்கு விற்க ஏற்பாடாகியிருந்தது. கொமாரசாமி அச்சாரமாகப் பத்தாயிரம் கொடுத்திருந்தார்.

எப்போதும் பார்க்கும் அந்த நிலம் அன்றிலிருந்து கொமாரசாமியின் கண்களுக்குப் புதியதாகத் தெரிந்தது. தினமும் கிணற்றுமேட்டில் நின்று பார்த்தார். கண்ணெதிரே முருகப்பெருமான் நிற்பதைப் போன்று பச்சைமலையின் மலைக்குன்று. பாதையோரத்துக் காடு. வெட்டி வெட்டி ஆழமான, அகலமான படிகள் வைத்த கிணறு. காரைச் சுவரால் ஆன மோட்டார் அறை என்று வயலைச் சுற்றிப் பார்க்கும் போதே அப்பனை, பாட்டனை, முப்பாட்டனைப் பார்ப்பதைப் போல இருக்கும்.

“நெதானிச்சு சொல்லுங்க நாயக்கரே. தலைமுறை சொத்து…” என்று வயல் விற்பது பற்றிய பேச்சின் தொடக்கத்திலேயே கொமாரசாமி கேட்டார். கொரோனாவால் பத்திரப்பதிவு தள்ளிப்போனதுதான் பெருமாளின் மனமாற்றத்திற்குக் காரணம். நிலத்தை விற்கும் அளவிற்குப் பணமுடை இல்லை என்றால் சட்டென்று விற்க வேண்டும். நினைத்துப் பார்க்க நேரம் கொடுத்தால் நிலம் விடாது.

“எம்மவன் நெலத்துல வந்து பாடுபடப் போறதில்ல.. பாதியாச்சு வித்து குடுங்க. வீட்டுக்கு வாடகை குடுக்க முடியல. டவுனுலயே வீடு வாங்கலாங்கறான்” என்று உறுதிசொன்ன பிறகுதான் கொமாரசாமி அந்த நிலத்தை மனசுக்குள் கிண்டிப் பார்க்கத் தொடங்கினார். எந்த வரப்பை மாற்றினால் வயல் சீராகும், எங்கு தென்னைகளை நடலாம், எங்கு குறுக்கு வரப்பு போட்டால் குச்சிவள்ளிக்கிழங்கு பாத்தி போடுவதற்கு இன்னும் வசதியாக இருக்கும் என்று அந்த நிலத்தைத் தன் வயலாக மனசுக்குள் மாற்றத் தொடங்கியிருந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன் பொன்னுசாமி பெரியய்யன் வந்தார். “பெருமாள் வயலை கொடுக்க மாட்டான்னு பேச்சு அடிபடுது. எதுன்னாலும் சொந்தபந்தம் இருக்கோம். ஒருநாள் நிதானிச்சு போய் பேசி நிலத்தை எழுதிருவோம்” என்றார்.

“மந்தையா மலையோட மேய்ஞ்சாலும் மாட்டுக்காரனோடதுதான் மாட்டோட பேரும்.. கூட்டத்துல நின்னா யாரு மாடுன்னு சொல்லுவாங்க. இன்னாருதுன்னுதானே? அது கணக்கா நீ நம்ம பய. நாளைக்கு வயவேல முடிச்சுட்டு நம்ம பயகள இங்க வரச்சொல்றேன். சாயங்காலமா போலாம்” என்று நேற்று மதியம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

கூட்டத்தைக் கூட்டிச்சென்று பெருமாளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமா? மரியாதையாக நின்று பழகின ஆள். ஒன்றும் பேசாமல் சரி என்று சொல்லிவிடுவார். மனசில் கிடந்து சிரிக்கும் பேரப்பிள்ளை போல நிலத்தின் மீதான ஆவலாதி மனசைக் கவ்விப் பிடிக்கிறது. நானும் எழுதி வாங்கின பிறகு நிலத்தை நிமிர்ந்து பார்த்திருக்கலாம் என்று அவர் மனம் சமநிலத்து நீராக முன்னும் பின்னும் அசைந்துகொண்டிருந்தது.

அந்தப் பசுங்கன்று மீண்டும் மீண்டும் யாரையோ அந்த இருளில் அழைத்து அங்கு உறைந்திருந்த அமைதியைச் சலனப்படுத்தியது. கோழிகளுடன் குஞ்சுகளும் ஆடுகளுடன் குட்டிகளும் அதிகாலை அரைமயக்கத்திலிருந்து சட்டென்று விழித்து சலசலக்கத் தொடங்கின. விடியலில் சற்றேனும் கண்ணசற நினைத்திருந்த வேட்டையன் சடாரென்று துள்ளியெழுந்து மாட்டுப்பட்டிப் பக்கம் ஓடி குரைத்தது. ஒன்றிரண்டு குரைப்புகளுக்குப் பிறகு அமைதியாகத் திரும்பி பின்னங்கால்களுக்கு இடையில் வாலை வைத்துக் குந்தி அமர்ந்து தீனமாகக் குரலை இழுத்தது.

“என்னான்னு போய் பாக்கறேன்” என்றவாறு அவர் களத்தின் நடுவில் போடப்பட்டிருந்த கட்டிலில் இருந்து எழுந்தார்.

களத்து வீட்டோரத்துக் கட்டிலில் ஓரமாகப் படுத்திருந்த மருதாயி, “மடவா திருப்பிட்டு வந்து இப்பதானே படுத்தீங்க? நான் போறேன். அது சாது.. நீங்க மிரட்டி சத்தம் போடுவீங்க” என்றபடி எழுந்து முடியைக் கொண்டையாகக் கட்டிக்கொண்டாள். எழுந்து கோழி கொடாப்பைத் திறந்து மேய்ச்சலுக்கு விட்டபின் பட்டி பக்கமாகச் சென்றாள். செவலையும் கருப்புமான குண்டு கோழி பூவால் ஆன பம்பரம் போலச் சென்றது. சுறுசுறுவென ஏழெட்டு குஞ்சுகளும் குட்டிக்குட்டிப் பஞ்சு உருண்டைகளாகப் பின்னால் சிதறி ஓடின.

கடலைக் காட்டிற்குத் தண்ணீர் பாய்ந்துகொண்டிருந்தது. வாய்க்காலில் மெதுவாகத் தண்ணீர் ஓடும் சத்தம் சலசலவென்று இருளில் மெல்லிய மணியோசை போலக் கூடவே வந்தது. வாய்க்காலில் வாய் கொப்பளித்து முகம் கழுவும்போது மறுபடியும் ராமாயி ஓங்காரமாகக் கத்தியது.

“கைப்பிள்ளைகள வச்சிருக்கிறவளாட்டம்தான் எம்பொழப்பு. எழுந்திருச்சதும் மூச்சி கைகால் கழுவ விடுதுகளா..” என்றபடி ராமாயியைப் பார்த்து, “நீயும் உங்காத்தாவும் உங்க வம்சத்துல இன்னும் நாலு உருப்படியுமா சேந்துக்கிட்டு நாளுக்கு ஒருத்தி கத்தி எழுப்பி விடுறீக” என்று சலித்தபடி பட்டியின் பக்கமிருந்த இன்னொரு மின்விளக்கையும் எரியச் செய்துவிட்டு ராமாயியின் பக்கம் சென்றாள்.

“மாடு கன்னுகளக்கூட மெரட்டாம கொஞ்சியே பேசனுன்னா… மனசு பாறந்தாங்காம காட்டுக்கு போய்ச்சேர வேண்டியதுதான்” என்றபடி கொமாரசாமி திரும்பிப் படுத்து வேட்டையனைப் பார்த்தார். அது புருவத்தை வளைத்துத் தூக்கி நெற்றியைச் சுருக்கி கண்ணாடிக் கண்களால் பார்த்தது. எலியைப் பிடிக்கும் வேட்டையில் முடியாமல் திரும்பி வந்திருக்கிறான் எனப் புன்னகைத்தார். சட்டென நினைப்பு மாறி மனம் பதற, “ஏ.. மருதாயி.. அவ பக்கத்துல போவாத” என்று எழுந்து பட்டி பக்கமாக ஓடினார்.

அதற்குள், “என்னடி இத்தன சத்தம்” என்று குனிந்த மருதாயியின் வயிற்று அல்லையில் கொம்பு கிழித்தது.

“அம்மா..” என்ற மருதாயியின் குரலால் உந்தப்பட்டு விசுக்கென்று வேட்டையன் பாய்ந்தான்.

இடையில் பாய்ந்த வேட்டையனை, “எலேய்..” என்று தாவி கழுத்தைப் பிடித்து பின்னால்  தள்ளினார். அதற்குள் மீண்டும் முட்டுவதற்காக அவளின் கீழ்ப்புறத்தைக் குறி வைத்த ராமாயியின் மூக்கணாங்கயிற்றை மருதாயியே இடதுகையால் இறுகப்பற்றி அதன் முகத்தைத் தூக்கினாள். வலது கை ரத்தம் வழியும் அல்லையைப் பிடித்திருந்தது. அண்ணாந்தபடி விரிந்த கண் உருள ராமாயி நின்றது. கண்ணீரின் காய்ந்த கோட்டுத்தடம் ராமாயியின் முகத்திலிருந்தது.

“பிடிய விட்றாத..” என்றவாறே அருகில் சென்று மூக்கணாங்கயிறை ஒற்றைக் கையால் பிடித்துக்கொண்டார். இரவானத்திலிருந்த தாம்புக் கயிறை உருவிச் சேர்த்துக்கட்டி முளையில் இறுக்கியதும் ராமாயி எங்கும் அசைய முடியாமல் மண்டியிட்டுப் படுத்தது.

“என்னாச்சு பிள்ள..” என்ற மருதாயி அதன் முதுகைத் தடவிக்கொடுத்தாள்.

“நீ வா.. காயத்தைப் பாப்போம்” என்று களத்தில் நடந்தார்.

“ஈத்தெடுத்து சினைக்கு நிக்கிற மாட்டுகிட்ட என்னான்னு கேட்டா… நேத்தே சொன்னனில்ல.. அசால்ட்டா பக்கத்துல போவாதேன்னு. வேட்டையன் சுதாரிச்சுக்கிட்டான் பாரு.”

“கன்னுக்குட்டின்னே பாத்து பழகிருச்சு… நெனப்புல எதையும் வரவிடுதுங்களா…ம்மா. ம்மா.. இப்படி கத்தினா என்னான்னு ஓடித்தானே ஆகணும்..”

மருதாயி குனிந்து மெதுவாக நடந்து வந்தாள்.

வேட்டையன் மருதாயி பின்னால் வந்து அவள் கட்டிலின் அருகே நின்று ஈரமான மூக்கைத் தூக்கி வாலை ஆட்டியது. முன்னும் பின்னுமாக நகர்ந்து பின் கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொண்டது.

கொம்பால் வயிற்றுப்பகுதியின் வலதுபுற அல்லையின் மேல் தோலைக் கிழித்துவிட்டிருந்தது. ஈரத்துணியை வைத்தபடி கட்டிலில் அமர்ந்தாள். அவர் அலைபேசியில் உள்ளூர் மருத்துவரிடம் பேசிவிட்டு வைத்தார்.

“இங்கதான் மலையடிவாரத்துல வண்டிய நிறுத்திட்டு நடக்கறதுக்கு வந்திருக்காரு.. ஒடனே வந்துறேன்னாரு.. வலிக்குதா?”

“ம்….” என்றபடி குனிந்து அமர்ந்தாள். டார்ச் விளக்கை எடுத்துவந்து காயத்தைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து கிழக்கே பார்த்தார். விடியக் காத்திருந்த வானத்தில் ஒரு விண்மீன் குன்றுக்கு மேலே பளிச்சென்று மின்னியது.

“இந்த வேட்டையன் வேற கன்னுக்குட்டி மேல பாஞ்சுருவானோன்னு பதறிப்போச்சு…” என்று நெஞ்சில் கை வைத்தார்.

“காலையிலேயே வெறும் வயிறு பாருங்க… வலி தாங்கல.”

அவர் வீட்டிற்குள் ஓடிச்சென்று நீராகாரத்தைக் கரைத்து சொம்பில் ஊற்றிக்கொண்டு வந்து கொடுத்தார். 

“நீங்க மாட்டு டாக்டருக்கு பேசுங்க. இத்தன கோவப்படுற சீவனில்ல.. சென ஊசிக்குன்னு சொன்னாலும் வரமாட்டுறாங்களே” என்று சொல்லிவிட்டு நீராகாரத்தைக் குடித்தாள்.

“நீ கொஞ்ச நேரம் பேசாம அசங்கமா படுத்திரு” என்று சொம்பை வாங்கி கீழே வைத்தார்.

அதற்குள் ஹோமியாபதி மருத்துவர் பாண்டியனின் ஸ்கூட்டி களத்தில் மடங்கி நின்றது. அவர் மருதாயியைக் கட்டிலில் படுக்க வைத்து காயத்தை மெதுவாக அழுத்திப் பார்த்தார். ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. தண்ணீர் விட்டு காயத்தைக் கழுவுவதற்காக மோட்டார் பக்கம் அவளை அழைத்துச் சென்றார்கள்.

“அது கோவமா இருக்கறப்ப போய் வாட்டமா நின்னியோ?”

“எதையோ நெனச்சுக்கிட்டு மறதியா போயிட்டேண்ணே.”

“எல்லா உசுருங்க கூடவும் ஒன்னுமண்ணா இருக்கீங்க… அதுகளோட கோவம் என்னன்னு தெரிஞ்சும் கவனமா இல்லாம..” என்றபடி காயத்தைக் கழுவியபின் கட்டிலுக்கு அழைத்துச்சென்று படுக்க வைத்தார்.

ஹீரோ ஹோண்டாவில் கால்நடை மருத்துவர் செல்லய்யா வந்து நின்றார்.

“என்னய்யா நீரு.. பசுமாட்ட இப்படி கோவப்படுத்தி வுட்டீரே. மாடு மனுசனுங்க இடுப்புக்கு கீழதானே குறி வச்சு கொம்பு நீட்டும். இன்னிக்கி தப்பிச்சதே பெரிசு” என்று பாண்டியனின் அருகில் செல்லய்யா வந்து நின்றார்.

“ஒருநாள் தவறிப்போச்சு சார்..”

“அதத்தான் சொல்றேன்… அதுக்குள்ள மாடு வயித்த கிழிச்சு போட்ருச்சுல்ல?”

“அது கன்னுக்குட்டிங்க”

“கன்னுக்குட்டியா!” என்று நிமிர்ந்து ராமாயியைப் பார்த்தார்.

“பின்ன.. மகள கட்டிக்குடுத்த ஏக்கத்துல கவுண்டரும் சம்சாரமும் போட்டிப்போட்டு வளத்திருக்காக.”

“அதான் முட்டி போட்டுருச்சு” என்று சிரித்தபடி காயத்தைத் திறந்து பார்த்தார். செல்லய்யா குனிந்து பார்த்துவிட்டு, “பதறிப்போய் வந்தேன். நல்லவேள.. குத்தி போட்ருந்தா சோலி முடிஞ்சுருக்கும்” என்றபடி பட்டியை நோக்கி நடந்தார்.

மூக்கணாங்கயிறோடு கிடுக்குப்பிடி போட்டு முளைக்கட்டையில் சேர்த்துக் கட்டியிருந்ததால் அண்ணாந்து வானத்தைப் பார்த்து முகத்தை வைத்திருந்தது கன்று. 

“வளந்த கன்னுக்குட்டிய பார்க்கறது அத்தனை அம்சம்.. சாமிய பாக்கறாப்ல” என்றார்.

“நீரு தெனமும் பாக்கறதுதானே? இதென்ன அதிசயமா..” என்றபடி பாண்டியன் நிமிர்ந்து பார்த்தார்.

“அதான்யா சொல்றேன்.. வளந்த கன்னுக்குட்டி அழகுல தெய்வம்யா.. இது செவலையும் வெள்ளையுமா அம்சமான கன்னுக்குட்டி.”

சூரியவொளி எழுந்திருந்தது. கன்றின் அண்ணாந்த முகத்தின் விரிந்த கருவரம்புக் கண்கள் முட்டை விழிகளாகத் திறந்திருக்க, பெரிய கரியவிழி மணி விரிந்து அசைந்தது. சூரிய ஔியில் கன்றின் கண்கள் பளபளத்து செல்லய்யாவின் கண்களைக் கூசச்செய்தன.

“சிவ சிவா….” என்று நெஞ்சில் கைவைத்தார். பின், “காளி..” என்று உடலை ஒருமுறை உலுக்கிக்கொண்டார்.

“என்ன ஒரேடியா ரசிச்சுக்கிட்டிருக்கீரு… வந்த வேலையப் பாரும். உம்மையும் செருகி தூக்கி வீசிறப் போவுது” என்ற பாண்டியன், தன் மருந்துப்பெட்டியைத் திறந்தார்.

“ம்மா… நீ பசு. மிஞ்சின கோவங்கறது உன் குணமில்ல” என்ற செல்லய்யாவையும் கன்றையும் பார்த்து மூவரும் சிரித்தார்கள். கொமாரசாமி செல்லய்யா அருகில் சென்று நின்றார்.

“நீ சிரிக்காத ரத்தம் கசியும்” என்ற பாண்டியன், “அதுகிட்ட என்ன பேசிக்கிட்டே இருக்கீரு. காட்டுல திரியறத வீட்டுல பிணச்சு கட்டிபோட்டுட்டு… அதுக்கு உண்டான சேவகத்த செய்யாம விட்டா இப்பிடி குத்தித் தூக்காம என்ன பண்ணுவா கவுண்டரே?” என்றார்.

இவள், “வலிக்குதுண்ணே” என்றாள்.

“தையல் போடணும். மருப்பூசி போடலாமான்னு பாக்கறேன்.”

“அதெல்லாம் வேணாம்… சும்மா குத்தி தச்சு விடுங்க…”

“இரும்மா..”

“அதெல்லாம் அசங்க மாட்டேன். நெதமும் கல்லும் மண்ணும் மரமும் மட்டையும் ஒடம்ப சேதப்படுத்தாமையா இருக்கு..”

“மனுசர தொட்டு நாடிப்பிடிச்சு பாக்கறத்துக்கே உமக்கு இத்தன குழப்பமா இருக்கே… நானு தினமும் மிருகத்த தொட்டு பழகி வைத்தியம் பண்றேன்.. உமக்கு இருக்கிற மரியாத எனக்கில்ல பாரும்.”

“நீங்க வேற… மனுசனும் மிருகந்தான்..” என்று நிறுத்திவிட்டு கொமாரசாமியைப் பார்த்து, “என்ன சில சமயம் கட்டுக்குள்ள நிக்கத் தெரியும். என்ன கவுண்டரே.. நாஞ்சொல்றது சரிதானே?”

அவர் அமைதியாக நின்றார்.

“உம்ம பங்காளிகளோட பெருமாள் நாயக்கர் வயலுக்கு போறீராமே? கேள்விப்பட்டேன். அவரப் பிடிக்காத எவனோ ஒருத்தன் உம்ம மீறி அவர அசிங்கபடுத்திட்டா என்ன பண்ணுவீரு?”

“ஆமா… அங்கேயும் அவிங்க ஆளுக நின்னா நீரு என்ன பண்ணுவீரு. அண்ணன் தம்பிக்குள்ள சொத்து பிரிக்கறப்ப நமக்கு பிடிச்ச வயலோ, வீடோ இன்னொருத்தருதுன்னு ஆயிடறதில்லையா? பெறந்ததுலருந்து நம்மளுதா இருந்ததே மாறிப்போகுதுல்ல” என்ற பாண்டியன், காயத்துக்குக் கட்டுபோட்டு முடித்தார்.

“இந்த கன்னுக்குட்டிக்கு கொம்பு சீவி விட்றாதீங்க கவுண்டரே.. இப்பவே முட்டி பாத்திருச்சுல்ல” என்ற செல்லய்யா, தன் பையைச் சரிசெய்து மூடி கொமாரசாமி கையில் கொடுத்தார்.

ஐந்து சலங்கைக் கொலுசின் ஒலி களத்தில் தயங்கி நிற்கும் ஓசைகேட்டு கொமாரசாமி சட்டென்று நிமிர்ந்தார். சரஸ்வதி கையில் கூடையுடன் களத்து முகப்பில் நின்றாள்.

“என்ன கண்ணு… புதுசா அங்கயே நிக்கற.. வா” என்ற கொமாரசாமி, வேகமாக வந்து அவள் கையிலிருந்த சோற்றுக்கூடையை வாங்கி திண்ணையில் வைத்தார். கனத்த உடலுடன் நடந்து மருதாயி கட்டிலின் அருகே நின்றாள்.

“இன்னிக்கு வயவேலைக்கு ஆளு வருது மாமா. அதான் வெள்ளனவே சோறாக்கிட்டேன். குழம்பு வைக்கறப்பதான் மருதாயிய கன்னுக்குட்டி லேசா குத்திருச்சு, வைத்தியரு வந்துக்காருன்னு மேட்டுக்காட்டு ராமசாமி சொன்னாரு. என்ன சொன்னாலும் பரவால்லன்னு சோத்த போட்டுக்கிட்டு அவுங்ககிட்டகூட சொல்லாம வந்துட்டேன்.”

“இங்க வரதுக்கு உன்ன யாரு என்ன சொல்லுவா?” என்ற மருதாயியிடம், “மெதுவா…ஆங்காரப்படாத.. ரத்தம் கசிஞ்சா நல்லதில்ல” என்று பண்டியன் புன்னகைத்தபடி நகர்ந்தார்.

கொமாரசாமி அமைதியாகக் குனிந்துகொண்டார்.

“மாமா…. அவரு மேல தப்பில்ல. நான்தான் தலமுற தலமுறயா வச்சிருந்த நெலம். நம்ம ரெண்டு பேரும் கையெடுத்து குடுத்தோன்னு ஆக வேணான்னு சொல்லி அவரு மனச கலச்சிட்டேன்…”

சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். குருவி, காக்கை, மைனா என்று பறவைகளின் குரல்கள் தனித்தனியாக வயல்வெளியெங்கும் கேட்டன.

“அச்சார காசு வாங்குன பிறவுதான் மனசு பதைச்சு உதைக்குது.. என்ன செய்ய சொல்றீங்க? மாமாகிட்டதானே.. கேட்டுப் பாக்கலான்னு சொன்னேன். அதுக்குள்ள யாரோ பேச்சுவாக்குல உங்ககிட்ட கொண்டாந்துட்டாங்க… உங்களுக்கு வேணுன்னா வச்சுக்குங்க மாமா” என்ற சரஸ்வதியின் கண்கள் கலங்க, சட்டென்று முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.

“அழுவாத கண்ணு” என்றவர் கிழக்குப் பக்கமாகத் திரும்பிக்கொண்டார்.

“கோமதிக்கு போன் பண்ணியா.. மாப்பிள்ள நல்லாயிருக்கரா?” என்று மருதாயி கோமதியைப் பற்றின பேச்சைத் தொடங்கினாள்.

“இதுக்குதான் பேசறவங்க வந்து பேசணும். நம்மெல்லாம் சும்மா சார்…” என்று பேசியபடி மருத்துவர்கள் இருவரும் மோட்டார் நீரில் கை கால்களை கழுவிக்கொண்டிருந்தார்கள்.

வேட்டயன் மெல்ல எழுந்து ராமாயியின் எல்லையில் அமர்ந்து கண்களை இடுக்கிப் பார்த்து மெல்ல குரல் எழுப்பினான். ராமாயி நிமிர்ந்து பார்த்தது. பச்சைமலையின் குன்றுகளுக்குப் பின்னிருந்து சூரியன் சட்டென்று வழக்கம் போல மேலெழுந்தது. நெற்றி மேல் கைவைத்து சூரியனைப் பார்த்தபடி, “கெணறு வெட்றப்ப ஊத்து திறக்கறாப்பலதான். அசந்த நேரத்துல குபுக்குன்னு வருவான் பயபுள்ள” என்று கொமாரசாமி சிரித்தார்.

1 comment

Akilan July 26, 2022 - 4:21 pm

ஈரமின்றி வறண்டு கிடக்கும் மனிதத்துவதை இளகிய மண் போலாக்கும் அழகிய கதை. மொழியின் நேர்த்தியும் கச்சிதமும் அபாரம். கவித்துவம் மனத்துக்கு இதம். மானுடப் பிணக்குகளுக்கு மானுடப் பிணைப்புகளே மருந்தெனும் மாயம் உணர்த்தும் கதை. நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

Comments are closed.