சித்திரக்கூடம்

by கமல தேவி
1 comment

ஜன்னலைத் திறந்ததும் மார்கழியின் பனி சட்டென்று அறையினுள் பாய்ந்தது. சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு சன்னல் பக்கமாக நின்றேன். வயல்வேலைக்குச் செல்லும் ஆட்கள் எப்போதா எழுந்து வாசலில் கோலமிட்டு மண் அகல்களை ஏற்றி வாசல் படிஓரமாக வைத்திருந்தார்கள். அவை சிவந்த பொட்டுப்பொட்டான கனல்துண்டங்களாகக் கறுப்புத்திரையில் கனன்றுகொண்டிருந்தன.

மாரியம்மன் கோவில் ஒலிபெருக்கியில் பாடல் ஒலி பரவி  ஊரின் செவிகளைத் தொட்டு எழுப்பத் தொடங்கியிருந்தது. மாடியறை என்பதால் தெளிவாக கணீரென்ற எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் மார்கழிப் பனி போலக் காதுகளில் நுழைந்தது.

காற்றாகி கனலாகி கடலாகினாய்…

நிலமாகி பயிராகி உணவாகினாய்

தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்…

அறையின் விளக்கை ஔிரச்செய்தேன். இரவு முழுவதும் வரைந்த படங்களால் நிறைந்திருந்தது சிமெண்ட் தரை. ஒன்றுகூட இதற்கு முன் வரைந்த வடிவங்கள் இல்லை. அனைத்தும் விசிறி இழுக்கப்பட்ட கோடுகளால் ஆன புரியாத வடிவங்கள். இதற்கு முன் எங்கும் பார்த்ததில்லை. இதெல்லாம் எப்படி வரைய வருகிறது என்று தெரியவில்லை.

கீழே கிடந்த சாக்கட்டிகளில் ஒன்றை எடுத்து எஞ்சிய இடத்தில் நான்குமுறை விசிறி இழுத்தேன். தாழை மடலோ, காய்ந்த நாணல்களோ, வீச்சுக்கத்தியைப் போலவோ ஏதோ ஒன்று. வரைய வரையதான் அது என்னவென்று தெரியும். அதற்கு மேல் கையெழவில்லை. ‘இதுவும் போச்சா?’ என்று எழுந்து சன்னலோரம் வந்து நின்றேன்.

இன்னேரம் சுப்பிரமணி வயலில் வடகிழக்கு மூலையில் வெற்றிலையில் சாணத்தில் செய்த பிள்ளையாரை அமர்த்திவிட்டு சூரியனை எதிர்பார்த்துக்கொண்டிருப்பான். நாம் சம்பாதித்த காசு பணத்தில் வயல்வரப்புகளைச் சொந்தமாக வாங்கி முதல் விதைப்பு செய்வது என்பது மூன்று நான்கு மாதங்களில் தாய் முகத்தைக் கண்டுகொள்ளும் பிள்ளையின் சிரிப்பைப் போல. மனம் இனம் தெரியாமல் பறந்துகொண்டேயிருக்கும் காலம். அவன் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு வயல் சேற்றில் சிரித்தமுகத்துடன் நின்றுகொண்டிருக்கலாம். கதவைத் திறந்து வெளியே பார்த்தேன்.

அதோ அந்த மாட்டுப்பட்டிக்கு அடுத்ததாக இருந்த புளியமரத்தில் தூக்கில் தொங்கும் அய்யாவின் கால்களை மூர்த்தி அண்ணா தாங்கிப்பிடித்திருக்கிறார். மரத்தின் கிளையில் ஏறி யாரோ கயிரை வெட்டிவிட்டதும் அவரின் முழு உடலும் மூர்த்தி அண்ணா மேல் சரிய அவர் ஊரே பதறும் அலறலுடன் கட்டிப்பிடித்துக் கொள்கிறார். தலையை ஒருபக்கமாக இறுக்கிப் பிடித்துக்கொண்டு படிகளில் இறங்கினேன்.

இருள் விலகாத முன்இரவுகளில் அய்யா சைக்கிளில் பால்கேனை வைத்துக்கட்டுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்தது இந்த வாசல் முற்றத்தில்தான். அந்த நாட்களில் பால்கறவை பழகுவதற்காக அய்யா பின்னால் செல்லும்போது அவர் வேகத்துக்கு சைக்கிளை மிதிக்க முடியாது. காலையில் பறக்கும் பறவைகணக்காகச் சரியான நேரத்துக்கு நிறைந்த பால்கேனுடன் திருச்சி வண்டிக்கு போல் ஏற்றிவிட வந்துவிடுவார்.

அவர் பின்னாலேயே பறந்துவந்து முச்சாமி களத்தை அடுத்து மாட்டுப்பட்டியின் முன் சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கினேன். மூச்சு வாங்கியது. பசுவின் மடிக்குக் கீழே குத்துக்காலிட்டுஅமர்ந்தேன்.

 “டேய்… தஸ் புஸ்ஸூங்காத… மாடு மெரளும். பசுமாடு தொட்டாச்சிணுங்கி செடி மாதிரிடா…”

எழுந்துகொண்டேன். எத்தனை நாட்களாக இவர் பின்னால் சைக்கிளில் அலைவது என்று சலிப்பாக இருந்தது.

அவர் அந்தப் பக்கம் நின்ற ‘வெள்ளை’யில் பால் கறக்கும் சத்தம் சர் சர்ர்… என்று கேட்டது. கிழக்கே வானத்தில் பச்சைமலைக்கு மேல் சிவந்து வருகிறதா என்று பார்த்தேன். ஒரே ஒரு நட்சத்திரம் பால் சொட்டு போல முனுக்கு முனுக்கென்று கிடக்க வானம் கறுத்துக்கிடந்தது. அய்யா வேகமாகச் செருமினார். சட்டென்று திரும்பினேன்.

அவரின் காப்புகாய்த்த பெருவிரலின் மடங்கிய முட்டிக்கும், மடங்கிய ஆள்காட்டி விரலின் முட்டிக்கும் இடையில் பால்காம்பைப் பிடித்திருந்தார். இரு கைகளும் ஒரே சீராக ஏறி இறங்க, அவரின் இரண்டு கால்களுக்கும் இடையில் இடுக்கிப் பிடித்திருந்த பால் வாளியில் ராகம் போல நுரைமேல் பால் பீய்ச்சும் சத்தம் எழுகிறது. 

அவ்வளவுதான் எனச் சட்டென்று கருப்பியின் மடிக்கடியில் அமர்ந்தேன். அது முன்னும் பின்னும் நகர்ந்து மறுத்தது.

“டேய்… மடப்பயலே… பிள்ளைய பயங்காட்டாதடா. நீ எந்திரி மொதல்ல…”

பல்லை கடித்தபடி எழுந்து நின்றுகொண்டேன். அங்கிருந்த வேப்பமரத்தில் ஒரு குச்சியை ஒடித்து இரண்டு காட்டு காட்டினால் ஒழுங்காக நிற்கும் என்று கருப்பியின் மீது ஆத்திரமாக வந்தது.

அய்யா பால்வாளியைக் கையில் தந்து, “ஒரு சொட்டு சிந்தாம கேனுல ஊத்தணும்” என்றார். விவரம் தெரிந்ததிலிருந்து நாளெல்லாம் இதையே கேட்டுக் கேட்டு எரிச்சலாகிறது. வீட்டில் அம்மாவிடம், என்னிடம், சம்பளத்திற்குப் பால்கறக்கும் மூர்த்தி அண்ணா, ரகுவிடமும் இதே பாட்டைத்தான் பாடுவார். சைக்கிள் பக்கமே நின்றுகொண்டேன்.

அவர் எழுந்து நின்று கால்களை உதறிக்கொண்டார். வெள்ளையின் முதுகில் கையூன்றி முட்டிக்கால்களைப் பிடித்து விட்டுக்கொண்டார்.

“பசுமாட்டு மடிய உங்கம்மா சுருக்குப்பையின்னு நெனச்சியா? நெனச்சதும் தொட விட்ருமா.. பயந்த சுபாவங்கறதால மெரட்டி நிக்க வைக்கலாம். பால் சுரக்கணுமே… அது ஒன்னோட விரலுக்குப் பழகணும்டா…”

கருப்பியின் அருகில் வந்தார். 

“என்னத்தா…” என்றபடி அதன் நெற்றியைத் தடவினார். அது நாக்கை நீட்டி பனியனுடன் நின்ற அவரின் வெற்றுத் தோளை நக்கியது.

“ரெங்கா… இங்க வாடா…”

கருப்பியின் நெற்றி, முதுகு, உடல் என்று தடவிக்கொடுக்கச் சொன்னார். அதன் வாயைப் பற்றி, முகத்தைத் தூக்கி, “இந்தப் பய நம்ம பயதானே… எதுக்கு அடம் பிடிக்கிற…” என்று பேசியபடி கழுத்துச் சதையைப் பிடித்து ஆட்டினார்.

“பால்காரனுக்கு மாட்டுக்கிட்ட பழகத் தெரியணும்டா… நம்ம பிள்ளையாட்டம். உனக்கு வயசு பத்தல… ஒரு பிள்ள பெறந்தா தானா வந்திரும்…”

தண்ணீரை வாளியில் எடுத்து அதன் மடியை நன்கு கழுவினார். அதன்  வயிற்றில் மெதுவாகச் செல்லத் தட்டு தட்டிவிட்டு குத்துக்காலிட்டு அமர்ந்தார். கருப்பி ஆடாமல் அசையாமல் நின்றது. விரல்களில் விளக்கெண்ணையைத் தடவிக்கொண்டார்.

“இங்க பாரு ரெங்கா… இத்தன நாள் எங்கூட வர… ஆனா பொறுப்பில்லாம விடியிற வானத்தையும்… காக்கா குருவிகளையும், மரமட்டையையும் பாத்துக்கிட்டு நிக்கற. பள்ளிக்கூட படிப்பும் ஒனக்கு எறல. தொழில் கத்துத்தர ஆளிருக்கப்ப கத்துக்க.. படம் வரையறேன்னு பொழுதன்னைக்கும் கண்ட எடத்துல கிறுக்கிக்கிட்டு பயித்தியகாரனாட்டம் திரியாத…”

வானத்திலிருந்து கண்களைத் திருப்பி அய்யாவைப் பார்த்தேன். அவர் குரல் முன்போல இல்லை. ஆள் தளர்வாக இருப்பது என்னவோ போல இருக்கிறது. காலில் விஷ முறிவு கல் வைத்துவிட்டு வந்ததிலிருந்தே இவர் பழைய ஆளாக இல்லை. இரத்தத்தில் நாள்பட்ட விஷம் என்று அந்த வைத்தியர் சொல்கிறார். 

அவர் பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் மடக்கிக் காட்டினார். கைகளைக் காம்பில் வைத்தபடி, “இறுக்கிப் பிடிச்சிறப்பிடாது… உசுருள்ள சீவன்ங்ற நெனப்பு இருக்கட்டும். ரொம்ப தளர பிடிச்சின்னாலும் வேலைக்கு ஆகாது… பால் குடிக்கிற கன்னுக்குட்டியப் பாத்தின்னா பிடிமானம் தெரிஞ்சிரும்…” என்றபடி கறந்தார். வாளிக்குள் மெல்லிய அலையடித்தலுடன் பால் நிரம்பத் தொடங்கியது. நான் பால்குடிக்கும் வெள்ளையின் கன்றைக் கொஞ்சநேரம் பார்த்துவிட்டு அய்யாவிடம் திரும்பினேன்.

நிலைகொள்ளாத கருப்பி திரும்பித்திரும்பி அய்யாவின் தோள்களையும் முகத்தையும் நக்கியது. 

“சரித்தா… சரித்தா….” என்று பேசியபடி எப்போதாவது மிக மெதுவாக வயிற்றில் தட்டிவிட்டுக் கறந்தார்.

“கறக்குறதுக்கு முன்னாடி நமக்கு இது பிள்ளை… மடித்தொட்டு பால் கறக்குறப்ப பசுவுக்கு நாம பிள்ளை… சரியாடா..”

நான் தலைப்பாகை துண்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக்கொண்டேன்.

அய்யா எழுந்து வாளியைத் தந்துவிட்டு என் கண்களைப் பார்த்தபடி, “இனிமே நீ தனியா கறவைக்குப் போலாண்டா…” என்று சொல்லிவிட்டு அடுத்த பசுவிடம் சென்றார்.

பனிக்காற்று முகத்தில் அறைந்தது. முடியை ஒதுக்கிக்கொண்டு மாடியில் இருந்து கீழே இறங்கினேன். பட்டியில் கடைசியாய் ஒற்றை மாடு நிற்கிறது. ம்மா.. ம்மா.. என்று ராவும் பொழுதும் கத்திக்கொண்டே கிடக்கிறது. 

“ஒத்த மாட்டுக்கு ஒரு தொணமாடு இல்லாம போயிருச்சே இந்தப் பட்டிக்கு. பதினஞ்சு இருவது மாடு கன்னுகளோட கிடந்த இந்த மாடு இப்படி ஒத்தையில தவிக்கறத பாக்கணுன்னு எந்தலையில எழுதியிருக்கே…” என்றபடி அம்மா வாசலுக்குச் சாணம் தெளித்தாள்.

வயசாகிப்போன மாடு என்று எவனும் விலைபேச வராமல் தங்கிவிட்டது. பிறந்ததிலிருந்து பட்டியில் இருக்கிற மாட்டைக் கறிக்கடைக்காரனுக்கு விற்றுவிட்டு சோறு திங்க முடியுமா? “பால்காரன் மட்டும் மாட்டை கறிக்குன்னு வித்துறக் கூடாது” என்று சொல்லித்தான் அய்யா முதல்நாள் கறவைக்குப் புது வாளியுடன் அனுப்பினார். அன்று அய்யா நின்று அனுப்பிய இடத்தில் இன்று வீடு, வயல், பட்டி மாடுகள் என்று எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு நிற்கிறேன்.

ஒடுவில்லை ஓட்டத்தின் கதவு சாத்தியிருந்தது. சித்ரா படுத்திருப்பாள். இரண்டு பயல்களும் இன்னும் எழுந்திருக்கவில்லை. அவர்களுடன் படுக்க முடியவில்லை. பொழுதணைத்தும் ‘இவனைக் கட்டிக்கிட்டு வந்து சீரளியிறேன்’ என்று திட்டித் தீர்க்கமுடியாத ஆத்திரத்தைப் படுத்தே தீர்க்கிறாள்.

கடனுக்காக ஐம்பது மாட்டு கறவையை மூர்த்தி அண்ணனிடமே கொடுக்கும்படி ஆகிவிட்டது. அய்யா பத்து வீட்டுக் கறவைகளைக் கொடுத்துவிட்டுப் போனார். இருபத்தைந்து ஆண்டுகளாக நாற்பது வீட்டுக்கறவைகளைப் பாடுபட்டுச் சேர்க்க எத்தனை எத்தனை வெம்பாடுகள். மொத்தமாகத் தூக்கிக் கொடுத்துவிட்டு வெற்று ஆளாகி ஆறு மாதங்களாகிறது. திரும்பி தெருவில் நடந்தேன்.

கால்கள் மெல்ல தெற்குதிசை நோக்கித் திரும்பின. ஹரிகேசர் வயலில் அரளிச் செடிகள் நிழல்கள் என அசைந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் குடிசாமி ஒன்று அரளிச் செடிகளுக்கு நடுவில் அமர்ந்துகொண்டு இடம் மாற்ற முடியாமல் கிடக்கிறது என்று புலம்பிக்கொண்டிருப்பார். மற்ற வயல்களில் அரளிச்செடிகளை அழித்துவிட்டார்கள். 

கோலமிட்ட வாசல்படிகளில் ஓரத்தில் அகல் விளக்குகள் அவிந்தும் கரிந்ததும் போக, நேரம் சென்று ஏற்றிய அகல்கள் மினுங்கிக்கொண்டிருந்தன.

தெற்கு முனைக்குத் திரும்பும் முன், வடக்கே திரும்பி பங்காரு அக்கா வீட்டை ஒருமுறை பார்த்தேன். அக்கா வாசல்படிகளில் குனிந்து நிற்கிறாள். இப்போதுதான் எழுந்திருந்திருப்பாள். எப்படியும் ஐம்பத்தைந்து வயதாவது இருக்கும். ‘அக்கா.. வீட்டுக்கு வர சொல்லுச்சு’ என்று அம்மா நேற்றே சொல்லியது.

திரும்பி அவளை நோக்கி நடந்தேன். அகலைப் பொருத்துவதற்காகத் தீக்குச்சிகளை உரசிப் போட்டுக்கொண்டிருக்கிறாள். இந்தக் குச்சி பற்றிவிட்டது. அகல் ஔியில் அவளின் வலப்பக்க முகம் தெரிகிறது. நெருங்க நெருங்க மூக்குத்தியின் வெளிச்சம் பிரகாசமாகிறது. சுற்றிலும் இருள். நான் ராசுவீட்டு வேம்பின் அடியில் நின்றுகொண்டேன்.

அக்கா வாசலில் கோலமிடத் தொடங்குகிறாள். நான் ஒன்பதாவது வகுப்புத்தேர்வை மூன்றுமுறை எழுதி தோற்றுப்போய் வீட்டில் இருந்தபோதுதான் அக்கா கல்யாணமாகி இங்கு வந்தாள்.

“ஒனக்கு தம்பிமுறைதான்…” என்று அந்த வீட்டுக்கிழவி சொன்னது. நெற்றிச்சுட்டியின் கற்கள் மின்னும் முகத்தில் கன்னத்தில் திருஷ்டிப் பொட்டுடன் திரும்பி முகத்தைப் பார்த்துச் சிரித்து “உம்பேரு என்னடா?” என்றாள். அவர்கள் வீட்டுமுற்றம் சிமெண்ட் தளமிட்டது. சாக்பீஸால் கல்கி புத்தகத்தில் வரும் படங்களை வரைவதற்காக அவர்கள் வீட்டிலேயே பழியாகக் கிடப்பேன். அவள் நான் வரைவதை அதிசயமாகப் பார்த்து மாமாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பாள். அவர் தலையாட்டியபடி நின்று பார்ப்பார். 

ஒருநாள் பொன்னியின் செல்வன் தொடரின் பூங்குழலியை வரைந்தேன். அக்கா சின்னப்பிள்ளையைப் போல ஓடிச்சென்று மாமாவை இழுத்து வந்து காட்டினாள். அவர் அவள் கையை விலக்கியபடி பார்த்துக்கொண்டே இருந்தார்.

“ரெங்கா… எப்படியாச்சும் பத்தாவது பாஸ் பண்ணிடு… விசாரிச்சு ட்ராயிங் டீச்சர் ட்ரெய்னிங் சேத்துவிடுறேண்டா… இங்கக் கெடந்தா வீணா போயிருவ.”

அக்கா மாமாவை முறைத்தாள்.

“எதுக்கு இப்பிடி பாக்கற… ஆடுற காலு நிக்காதும்பாங்க. வரையற கை இவனுக்கு.. எனக்கென்னமோ பால் கறக்க அனுப்பறது சரியில்லன்னு படுது…”

“நீங்க கண்டதையும் பேசி அவன மாத்திறாதீங்க. இந்த மாறி கிறுக்குத்தனத்தை எல்லாம் உங்களோட வச்சுக்குங்க. படிக்க முடியாத பயல தொழிலுக்குப் பழக்காம என்ன பண்றது.. எத்தன வருஷம் பரிட்சை எழுதிக்கிட்டே இருப்பான்?”

“இவன் வரையற எடத்தையெல்லாம் வெளக்கமாறு போட்டு கழுவாத பங்காரு… இந்தப் பயலயே ஈரத்துணியால துடச்சுவிடச் சொல்லு…” என்று மீண்டும் நான் வரைந்ததையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்பாயி செத்த பிறகு எங்களுக்கான வீட்டுமனைகளில் ஒன்றை எங்கள் அத்தைக்குக் கொடுக்க அம்மா சம்மதிக்கவில்லை. அந்தத் தகராறில் மாமாவுடன் மனஸ்தாபமாகியது.

“நம்ம வீட்ல பெறந்த பிள்ள… சரியான சுவாதினமில்ல. இதெல்லாம் அந்தக் கெழவியோடதுதானே? அது பெத்த மவளுக்கு ஒரு மனைய சகாய விலைக்கு குடுத்தா என்ன? கொடுக்கலேன்னா பெரியாளுங்கள வச்சி பைசல்தான் பேசணும். நம்ம சொந்த பந்தத்துக்குள்ள பேசி முடிச்சிக்கிட்டா நல்லது.”

“பொட்டப் பிள்ளைய கட்டிக்குடுத்தா எல்லாம் முடிஞ்சு போச்சு… வீட்டுமன வேணுமோ? அடிச்சு தொரத்திவிடுங்க..” என்று ஆங்கியத்து சித்தப்பா எகிறினார்.

“இங்க பாருங்க மாமா… ஆங்கியம் அழகாபுரியில பேசுற பேச்செல்லாம் இங்க வேணாம். விட்டத்துக்கு வலுவான வேலமரமின்னா… தாழ்வாரத்துக்குன்னு ஒரு நொணாமரத்து குச்சிக்கூடவா இல்லாம போயிரும்…”

“என்ன தம்பி பேச்சு மாறுது… அரசாங்க உத்தியோகம் குடுக்கிற தெகிறியமா?”

“என்ன சின்னம்மா இது? கடைசியா பெறந்தது. எனக்கு அக்கா மாதிரி. சூது வாது தெரியாத பிள்ளைய எங்க தொரத்த சொல்றீங்க…”

மாமா அமர்ந்திருந்த மரபெஞ்சின் கீ்ழ் அத்தை அமர்ந்திருந்தது. ஒரே நாளில் இரு மகன்களைக் கிணற்று நீரில் எமனுக்குக் கொடுத்த பதற்றம் தீராத அத்தையின் கண்களை வரைந்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.

“எல்லாரும் பேசறாங்க… உங்க தங்கச்சிதானே மாமா. வாயத்தெறக்காம நிக்கிறீங்க…” என்று அய்யாவிடம் திரும்பினார். அய்யா அம்மாவின் முறைப்பைத் தவிர்த்தபடி தலையாட்டினார்.

“சகாய வெல போட்டு காச வாங்கிக்குங்க…” என்று சட்டென்று முடித்தார். யாரும் அதற்குமேல் பேச முடியவில்லை. குடும்பங்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லாமல் ஆனது. மாமா ஒருநாள் சாயங்காலமாகத் தெற்குப்பக்க கிணற்றில் குளித்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தார். செங்கமலம் கொட்டாயிலிருந்த நான் அவரைக் கவனிக்கவில்லை.

மாமா வந்த வேகத்தில் என் முடியைப் பிடித்து இழுத்து வரப்பில் போட்டு அருகிலிருந்த புங்கங்குச்சியை ஒடித்து விளாசினார்.

“வயசுப்பயலுக்கு குடிக்கக் குடுத்து பழக்கறதெல்லாம் உன்னோட வம்சதுக்கே பழிம்மா..” என்று செங்கமலத்திடம் சொல்லிவிட்டு என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தார். மாமாவின் கலங்கிய முகம் இப்போதும் குடிக்கும்போதெல்லாம் கண்ணில் வந்து தொலைக்கிறது.

என் கல்யாணத்திற்குப் பத்திரிகை வைத்து மாமாவுடன் சேர்ந்துகொள்ளலாம் என்று நினைத்த அய்யாவை அம்மா விடவில்லை. அக்கா தண்ணியெடுக்க வரும் வழியில் காத்திருந்து கல்யாணத்திற்கு வரச்சொன்னேன்.

“நீங்க வேற பத்திரிகை வைக்கலை… எங்க வூட்ல அத்தன பேரும் கொதிச்சுப் போயி கிடக்குங்க… பொண்ணு எப்பிடியிருக்கா? ஒனக்கு பொண்ணு பாக்கறதுக்கு வரணுன்னு எத்தன கனவு கண்டிருப்பேன்…” என்று அழுதது.

கொஞ்சம் நேரம் சென்று, “முடியெல்லாம் ஒட்டவெட்டாத… உங்க மாமனாட்டம் வுட்டு வெட்டுடா… கிறுதா வச்சாதான் நல்லாருக்கும். மொழுக்குன்னு வழிச்சிட்டு போய் நிக்காத.. உங்க மாமனப்பாரு கமலஹாசனாட்டம்…” என்று சிரித்தது.

கல்யாணத்தன்று அக்கா காலையிலேயே குளித்துவிட்டு, பழைய சீலையைக் கட்டிக்கொண்டு, வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு, முற்றத்தில் உட்கார்ந்திருந்ததாம்.

“எதுக்கு மூஞ்சிய தூக்கி வச்சிருக்க? பத்திரிக்கை வைக்காம எப்படி கல்யாணத்துக்கு போறது…”

“நீங்க வரவேணாம். நாம் போறேன்… தண்ணியெடுக்க போறப்ப ரெங்கா என்னைய கூப்பிட்டான்…”

“இதென்ன சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு…” என்று கிழவி ஆத்திரப்பட்டது.

“பங்காருக்கு, ரெங்கா பெறந்தவீட்டு சொந்தமா… நம்ம சொந்தந்தானே? அறியாத மனசுக்கு பாசந்தான் பெரிசு. ரோசம் பெருசுன்னா நம்ம போக வேணாம். பங்காரு போறதுன்னா போகட்டும்…” என்று மாமா அக்காவிடம் மொய்ப்பணம் கொடுத்தனுப்பினார் என்று அக்கா சொன்னது.

அக்காவின் கோலத்தைப் பார்த்தபடி வந்து நின்றேன். வளைவு நெளிவில்லாது நேர்க்கோடுகளாக இழுத்து வைத்திருந்தது.

“என்னடா ரெங்கா… இந்த நேரமே… கோலத்தைப் பாத்துதானே சிரிக்கிற? இந்த ஊருக்கு இது போதும். எங்க ஊர்ல எவ்வளவு பெரிய வாசல் தெரியுமா?”

“கறவைக்கு எந்திருச்சு பழகின பழக்கம். தூக்கம் வரமாட்டுதுக்கா…”

“ம்… எங்கியோ தெசமாறி போயி வீடு, வாச, வயவஞ்சி எல்லாத்தையும் தொலச்சிட்டு நிக்கிறியே…”

“….”

“செல்போனுல சீட்டு விளையாட்டுன்னு உங்கம்மா சொல்லுது. பங்குவியாபாரன்னு எம்மவன் சொல்றான்,”

“…”

“நாஞ்சொல்றத கேளு… இதுவும் உங்க மாமாதான் சொன்னாங்க.”

“என்ன சொன்னாரு…”

“நேத்து ராத்திரி ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தோம்… பகல்ல வூட்டுக்கு வரலாமின்னு இருந்தேன். ஒருமாசமா ராத்திரியானா இதையே பேசிப்பேசி மனசழிஞ்சு போவுதுடா. வீட்டை காலி பண்ணனுமாமே?”

“ம்…”

“நாங்க சொன்னா உங்க அத்தை கேக்கும். அந்த மனையில பாதி சும்மாதானே கெடக்கு? ஒரு தகர கொட்டாயி போட்டு இருந்துக்குங்க… மூர்த்திக்கிட்ட பேசி சம்பளத்துக்கு கறக்க ஏற்பாடு பண்ணிக்கலாமா?” என்று என் கன்னத்தில் கைவைத்துக் கேட்டாள். அவள் இப்படிச் செய்தால் ஆணையிடுகிறாள் என்று சொல்லாமல் சொல்வது.

நான் அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். 

“துறையூர்லருந்து படம் வரையறதுக்கு ஒரு பலகைய எம்மவனுக்கு வாங்கியாந்து வச்சேன். அவனுக்கு கை வளைஞ்சாதானே? அதைக் கொண்டுபோய் உங்க அத்தை வீட்ல வைக்கச் சொல்றேன்… சரியா? எனக்கு கண்ணு பாக்க நீ வேணுண்டா,” என்று கழுத்தை வேறு பக்கம் திருப்பி நெஞ்சில் கிடந்த சேலையை இறுக்கிப் பிடித்துக்கொண்டது. 

ஆட்டுக்காரர்கள் வீட்டுச் சினையான பசுக்கள் வீட்டுப்பட்டியிலிருந்து வயலுக்கு சென்றுகொண்டிருந்தன. மிக மெல்ல நடந்துவந்த கபிலநிறப் பசு என் பக்கம் வந்து மூச்சு வாங்க நின்றது. என் கை அனிச்சையாக அதன் முதுகைத் தடவியது. உருண்டு விரிந்த அதன் கண்மணியில் அகலின் ஔி மினுமினுத்தது. சாணமிட்டுவிட்டு மெதுவாக நகர்ந்தது.

அக்கா சிரித்த முகத்துடன் சாணத்தை எடுத்து வீட்டின் ஓரமாக வைத்தாள்.

“இனிமே நல்லாருப்படா…”

ஆட்டுகார மாமா ‘ஆமாம்’ என்பது போலத் தலையாட்டிவிட்டு பசுவின் முதுகில் தட்டி ஓட்டினார். நான் பசு நடந்து செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

1 comment

Kasturi G February 7, 2022 - 8:58 pm

Beautiful
Thanks

Comments are closed.